பாடுகள் இனி வரும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,242      💚 ஜூலை 03, 2024 💚 புதன்கிழமை 💚


"ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." ( ரோமர் 8 : 18 )

இந்த உலகத்தில் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போதும் நமக்குச் சில துன்பங்கள் தொடர்கின்றன. ஆனால் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." அதாவது நமக்கு மகிமையான எதிர்கால வாழ்வு  ஒன்று உள்ளது. அந்த மகிமைக்குமுன் நாம் இப்போது அனுபவிக்கும் பாடுகள் ஒன்றுமில்லாதவையே. 

இதற்கான காரணத்தை இன்றைய வசனத்துக்கு முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்." ( ரோமர் 8 : 17 )

அதாவது, இக்காலத்தில் நாம் அனுபவிக்கும் பாடுகள் எதிர்காலத்தில் நம்மை தேவனது பிள்ளைகளும் அவரது மகிமையின் சுதந்திரவாளிகளுமாக மாற்றுகின்றது. தேவ மகிமை அடையும் உரிமை நமக்கு எதிர்காலத்தில் உள்ளது. எனவே, இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல என்கின்றார் பவுல். 

உதாரணமாக, இந்த உலகத்தில் மருத்துவ படிப்பை எடுத்துக்கொள்வோம். ஒருவர் மருத்துவராகி சமூகத்தில் அங்கீகாரமும் மகிமையும் அடையவேண்டுமானால் அவர் ஐந்து ஆண்டுகள் கடுமையான படிப்பை மேற்கொள்ளவேண்டும். பல்வேறு பயிற்சிகள், செயல்முறைத் தேர்வுகள் இவைகளை மேற்கொள்ளவேண்டும். இவைகள் படிக்கும் மாணவர்களுக்குத் துன்பம் தருவதாகவே இருக்கும்.  

இந்த மாணவர்கள், வீட்டைவிட்டு, நண்பர்களைவிட்டு, சாதாரண படிப்புப்  படிக்கும் தங்கள் வயது மாணவர்கள் அனுபவிக்கும் சில சுதந்திரங்கள் இல்லாமல் இருக்கவேண்டியிருக்கும். ஆம், இத்தகைய பயிற்சிகள், தேர்வுகள் இவற்றைக் கடக்கும்போது மருத்துவர் எனும் பட்டமும் சமூகத்தில் ஒரு அங்கீகாரமும் கிடைக்கின்றது. அதாவது அந்த மாணவன் இதுவரை அனுபவித்தத் துன்பங்கள்  இந்த மகிமையை அவர்களுக்குக் கொண்டுவந்தது. 

ஆம் அன்பானவர்களே, இந்த உலகத்தின் மகிமை இப்படி இருக்குமானால் பரலோக மகிமை எப்படிப்பட்டதாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். நாம் தேவனது பிள்ளைகளும் சுதந்தரருமாக, கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாக கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படுவோம். ஆம், அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.

எனவே நாம் இந்த உலகத்துப் பாடுகள், துன்பங்களை கிறிஸ்துச் சகித்ததுபோல சகித்து வாழ அழைக்கப்பட்டுள்ளோம். தேவனுக்கு ஒப்பான அவர்  "தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." (பிலிப்பியர் 2:7,8) எனும்போது அவர் எத்தனை பெரிய துன்பங்களைச் சகிக்கவேண்டியிருந்திருக்கும்!!! எனவே தேவன் அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தி, எல்லோருடைய முழங்கால்களும் அவருக்குமுன் முடங்கும்படியான மகிமையினைக் கொடுத்தார். 

எனவே துன்பங்களை சகித்து வாழ தேவவரம் வேண்டுவோம். நமது இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்