DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, June 27, 2024

இடறுதற்கான கல்லில் இடறியவர்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,244       💚 ஜூலை 06, 2024 💚 சனிக்கிழமை 💚

 
"என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்." ( ரோமர் 9 : 32 )

இந்த உலகத்தில் நீதியுள்ள வாழ்க்கை வாழும் பலர் எல்லா மதங்களிலும் இருக்கின்றனர். நியாயப்பிரமாணம் கூறும் பல கட்டளைகளை அவர்களும் நிறைவேற்றுகின்றார்கள். இதுபோலவே அன்றைய யூதர்களும் இருந்தனர். அவர்கள் நியாயப்பிரமாணக்   கட்டளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்தக் கட்டளைகளைக்  கடைபிடித்தனர். ஆனால் அப்படிக் கடைப்பிடித்தும் அவர்களால் கிறிஸ்துவின் நீதிப்பிரமாணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இன்றுவரை யூதர்கள் மேசியா இனிதான் வரப்போகின்றார் என எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இதனால்தான் கிறிஸ்துவை விசுவாசியாத பலரும்,  பல மதத்தினரும் மெய்யான தேவனை அறிந்துகொள்ள முடியவில்லை. 

இன்றும் கிறிஸ்தவர்களில் பலரும்  இப்படியே இருக்கின்றனர். அவர்கள் பல தேவ கட்டளைகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களால் கிறிஸ்து அனுபவத்தை வாழ்வில் அனுபவிக்க முடியவில்லை. ஆவிக்குரிய மேலான காரியங்களை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. காரணம், அவர்கள் யூதர்களைப்போல தங்களது நீதிச் செயல்களுக்கும்  பக்திக்  காரியங்களுக்கும்தான் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். "எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்." ( ரோமர் 10 : 3 )

ஆலய வழிபாடுகள் நமக்குத் தேவைதான்; ஆனால் தேவனை அறிந்து தேவ அனுபவங்களுடன் வழிபாடுகளில் கலந்து கொள்ளும்போது தான் அது அர்த்தமுள்ளதாக இருக்கமுடியும். தேவன்மேல் முழு விசுவாசம் கொள்ளாமல் நமது சுய பக்தி, நமது ஆலய பணிவிடைகள் இவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்போமானால் நாம் யூதர்களைப்போல இடறுதற்கேதுவான கல்லில் இடறியவர்களாகவே இருப்போம். 

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) என்று வாசிக்கின்றோம். அதாவது, ஒரு கிறிஸ்தவன் என்பவன் கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார், அவரது இரத்தத்தினால்தான்  பாவ மன்னிப்பும் பாவத்திலிருந்து விடுதலையும்  நமக்கு உண்டு என்பதை நூறு சதவிகிதம் நம்புபவனாகவும் அந்த நம்பிக்கையின்படி பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயம் உள்ளவனாகவும் இருக்கவேண்டும். 

மேலும், நாம் இதுவரைக் காணாத வேதம் கூறும் காணப்படாத சத்தியங்களாகிய பரலோகம், நித்திய ஜீவன், நரகம் போன்ற காரியங்களைக் குறித்த நிச்சயம் உள்ளவனாக இருக்கவேண்டும். இந்த நிச்சயங்கள் இல்லாமல் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனைத் தேடினபடியால் யூதர்கள் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.

அவர்களுக்கு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நிச்சயம் இல்லாமலிருந்தது. காரணம், அவர்கள் கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அன்பானவர்களே, கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயம் இல்லாமல் ஒருவருக்கு   பரலோகம், நித்திய ஜீவன், நரகம் போன்ற காரியங்களைக் குறித்த நிச்சயம் ஏற்படாது. வெறும் வாயளவில் மட்டும் இவைகளைக்குறித்துக் கூறிக்கொண்டிருக்கலாம். 

எனவே, இன்றும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு நாம் இப்படியே இருக்கக்கூடாது. வெறும் வெறுமனே  கட்டளைகளைகளையும் வழிபாடுகளையும்  நிறைவேற்றுவதற்கு மட்டும்  முன்னுரிமை கொடுத்து கிறிஸ்து அனுபவத்தை வாழ்வில் அனுபவிக்காதவர்களாக வாழக்கூடாது. கிறிஸ்துவைத் தனிப்பட்ட வாழ்வில் உணர்ந்தவர்களாக -  ஆவிக்குரிய மேலான காரியங்களை உணர்ந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். இதனால்தான், "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே (கட்டளைகளை நிறைவேற்றுவதால் மட்டும்) எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." ( கலாத்தியர் 2 : 16 ) என்று வேதம் கூறுகின்றது. 

வேதாகமம் கூறும் முறைமையின்படி கிறிஸ்துவின்மேல் கொள்ளும் விசுவாசத்தினாலே மட்டுமே நாம் நீதிப்பிரமாணத்தைக் கண்டுபிடிக்கவும் கடைபிடிக்கவும்  முடியும். அப்போது யூதர்களைப்போல  இடறுதற்கான கல்லில் இடறமாட்டோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்

No comments: