DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, June 26, 2024

நீதிக்கு அடிமையாக உங்களை ஒப்புக்கொடுங்கள்

  'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,241     💚 ஜூலை 02, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


".....அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 )

"தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பது என்று அடிக்கடி கூறுகின்றிர்களே அது எப்படி?"  என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் அவருக்கு, "நீங்கள் உங்கள் அப்பா அல்லது அம்மாவுக்கு எப்படிக் கீழ்ப்படிந்து நடப்பீர்களோ அப்படி தேவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பதுதான் ஒப்புக்கொடுத்தல்" என்று கூறினேன். அவர் கூறினார், "நான் எனது அப்பா அம்மாவுக்கு பொதுவாக எந்த விஷயத்திலும் கீழ்ப்படிவதில்லை".  

ஒப்புக்கொடுத்தல் என்பது ஒரு அடிமையைப்போல ஆதலாகும். ஒரு அடிமைக்கு எந்த உரிமையும் கிடையாது. அவனது உரிமையாளன் என்னக்  கூறுகிறானோ அதனைச் செய்து முடிப்பதுதான் அடிமையின் வேலை. அதாவது சுய சித்தமில்லாமல் அனைத்தையும் விட்டுவிடுதல் அல்லது இழத்தல். தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல் என்பது நம்மை முற்றிலும் அவருக்கு ஒப்புக்கொடுத்து அவர் நம்மை ஆளும்படி கையளிப்பது. 

இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் புதிய உதாரணத்தோடு விளக்குகின்றார். அதாவது, "முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல" என்கின்றார். பொறாமை, காய்மகாரம், வஞ்சனை, பொய், கபடம், ஏமாற்று, மற்றவர்களைக் குறித்து அபாண்டமான பேசுதல், காம எண்ணங்கள், பெருமை, மனமேட்டிமை போன்ற பல குணங்கள் முன்பு நமக்கு இருந்திருக்குமானால் நாம் அவற்றுக்கு முன்பு அடிமைகளாக இருந்துள்ளோம் என்று பொருள். 

அப்படி அவற்றுக்கு அடிமைகளாக இருந்து அவற்றையே செய்துகொண்டிருந்ததுபோல "இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." அதாவது, முன்பு தேவையில்லாத மேற்படிச் செயல்களைச் செய்ததுபோல இனி நீதிக்குரிய செயல்களைச் செய்யுங்கள் என்று கூறுகின்றார். இதுவே தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல். 

மட்டுமல்ல, இப்படிச் செய்வதே அறிவுள்ளவர்கள் செய்யும் ஆராதனையாகும் என்றும் அப்போஸ்தலரான பவுல் ரோமர் 12ஆம் அதிகாரத்தில் கூறுகின்றார்.  "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 )

அதாவது, இப்படி நம்மைத் தேவனுக்கு  ஒப்புக்கொடுக்காமல் செய்யும் ஆராதனைகள் அனைத்தும் புத்திகெட்ட ஆராதனைகள் என்று பொருள். எனவே, அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நாம் நமது அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இனி பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நமது அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுப்போம். தேவனுக்கேற்ற புத்தியுள்ள ஆராதனை செய்பவர்களாக வாழ்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                   

No comments: