வேதாகம முத்துக்கள் -பெப்ருவரி 2023







                            - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

ஆதவன் 🌞 735 🌻 பிப்ருவரி 01,  2023 புதன்கிழமை 

"கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்." ( நீதிமொழிகள் 14 : 26 )

கர்த்தருக்குப் பயப்படுவதனால் ஏற்படும் நன்மைகளை இந்த  வசனம் விளக்குகின்றது. இந்த வசனத்தின்படி முதலாவது, கர்த்தருக்குப் பயப்படுவதால் நமது வாழ்க்கையைக்குறித்த உறுதியான நம்பிக்கை நமக்கு ஏற்படுகின்றது. இந்த உலகத்தில் நமக்கு ஏற்படும் பாடுகள், பிரச்சனைகள் இவற்றைத் தாங்கி நடக்க இந்த நம்பிக்கை நமக்கு உதவுகின்றது. 

மட்டுமல்ல, கர்த்தருக்குப் பயப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்வதால் நமது சந்ததி நல்ல அடைக்கலமான நிலையில் வாழ்வார்கள். அதாவது நமது பிள்ளைகளுக்கு இதன்மூலம் நாம் ஆசீர்வாதத்தைச் சேர்த்துவைக்கின்றோம்.

சரி, கர்த்தருக்குப் பயப்படுதல் என்பதுதான்  என்ன? அது ஒரு மாணவன் தனது ஆசிரியரைப்பார்த்து பயப்படுவதுபோல பயப்படுவதையோ, அல்லது திருடன் ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்த்துப் பயப்படுவதைப் போல் பயப்படுவதையோ அல்லது பணியிடத்தில் நமது உயரதிகாரியைப் பார்த்துப் பயப்படுவதுபோல பயப்படுவதையோ குறிக்கவில்லை.   கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது, தீமையான காரியங்களுக்கு விலகி, அவைகளை வெறுத்து வாழ்வதையே குறிக்கின்றது.

"தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்."( நீதிமொழிகள் 8 : 13 ) என்று வாசிக்கின்றோம்.  பெருமை, அகந்தை, தீய வழி, புரட்டு வாய் என இந்த வசனம் சில காரியங்களைக் குறித்துக் கூறுகின்றது. நாம் கர்த்தருக்குப் பயப்படுகின்றவர்கள் என்றால் நாம் இப்படியுள்ளத் தீய  குணங்களை செய்யாமலும் அவைகளை வெறுகிறவர்களாகவும் இருப்போம். 

இப்படிக் கர்த்தருக்குப் பயப்படுகிற வாழ்க்கை வாழ்வோமானால் நமது வாழ்க்கையில் நமக்குத் திடநம்பிக்கை உண்டு. எந்த எதிர்மறையான காரியங்கள் நமது வாழ்க்கையில் நடந்தாலும் உறுதியுடன் அவற்றைத் தாங்கிக்கொள்வோம். காரணம் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்கின்ற உறுதியான நம்பிக்கை.  மட்டுமல்ல, நமது பிள்ளைகளுக்கும் வாழ்வில் மேலான அடைக்கலம் கிடைக்கும்.

அற்ப உலக ஆதாயத்துக்காக குறுக்கு வழியில் நடந்து, ஏமாற்று, புரட்டு, கபடம் போன்ற காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து அதுவே ஆசீர்வாதம் என்று எண்ணி வாழ்வோமானால் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளதற்கு எதிரான காரியங்களே நமக்கு நடக்கும். ஆம், அப்போது நமது வாழ்க்கை குறித்தே நம்பிக்கை இல்லாமலும், சிறிது தோல்வியைக்கண்டாலும் தற்கொலை எண்ணங்களும் தான் நமக்கு ஏற்படும். மட்டுமல்ல நமது சந்ததியும் அடைக்கலமில்லாமல் அலைந்து திரியும் சந்ததிகளாக இருக்கும். 

ஆதவன் 🌞 736 🌻 பிப்ருவரி 02,  2023 வியாழக்கிழமை 

"இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்." ( மத்தேயு 18 : 10,11 )

காணாமல்போன ஆடு பற்றிய உவமையைக் கூறுமுன் இயேசு கிறிஸ்து இந்த வசனத்தைக் கூறுகின்றார். நூறு ஆடுகள் உடைமையாகக் கொண்ட ஒருவன் ஒரு ஆடு காணாமல்போனாலும் அதனைத் தேடித் கண்டுபிடிக்க முயல்வதைப்போல இயேசு கிறிஸ்து காணாமல்போன, தன்னைவிட்டுத் தூரமாய்ப்போன ஆடுகளான மனிதர்களைத் தேடிக்  கண்டுபிடிக்க ஆர்வமாயுள்ளார். நாம் வெறும் மனிதனாக ஒருவனைப் பார்க்கின்றோம்; ஆனால் இயேசு கிறிஸ்து அவனது ஆத்துமாவைக்குறித்து எண்ணுகின்றார். ஆத்துமா அழிவில்லாத எரி நரகத்திற்குள் சென்றுவிடக்கூடாது என்று அவர் கவலைகொள்கின்றார்.  

ஒருவரது பாவச் செயல்கள் நம்மை ஒருவரை அற்பமாக எண்ணச்செய்கின்றது. குடிகாரனாக, ஏமாற்று பேர்வழியாக, இருபத்துநான்கு மணிநேரமும் கெட்டவார்த்தைகள் பேசுபவனாக, விபச்சாரக்காரனாக, விபச்சாரியாக  ஒருவர்  இருக்கலாம். ஆனால் இப்படி எவரையும் அற்பமாக எண்ணக்கூடாது என்கின்றார் இயேசு கிறிஸ்து.      

இந்த வசனத்தில் மேலும் ஒரு சத்தியத்தை இயேசு கிறிஸ்து கூறுகின்றார். அதாவது, "அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்." என்கின்றார். நல்லவனோ கெட்டவரோ நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு தேவதூதன் உண்டு. அவர்கள் பிதாவின் சமூகத்தைத் தரிசிக்கிறவர்களாக இருக்கின்றார்கள் எனும் உண்மையினை இயேசு இங்குக் குறிப்பிடுகின்றார். எனவேதான் அற்பமாக ஒருவரையும் எண்ணக்கூடாது என்கின்றார். ஏனெனில் இந்தத் தூதர்கள் ஒருவரைக்குறித்து பிதாவுக்கு அறிக்கை கொடுக்கின்றனர். அதன் அடிப்படையில் கிருபையால் அவர் எந்தப் பாவியையும் இரட்சிக்க முடியும். 

பாவிகளை மட்டுமல்ல, இந்த உலகத்தில் நம்மை அறியாமலேயே நாம் சிலரை அற்பமாக எண்ணுகின்றோம். ஒருவரது குடும்பப் பின்னணி, பொருளாதார நிலைமை, அவர் செய்யும் வேலை, அவரது உடல் தோற்றம் இவைகளின் அடிப்படையில் நாம் மனிதர்களை எடைபோடுகின்றோம். இப்படி எடைபோட்டு ஒருவரை அற்பமாக எண்ணுவதும் தவறுதான். 

நல்லவர்களை மீட்க இயேசு கிறிஸ்து உலகினில் வரவில்லை. பாவிகளை இரட்சிக்கவே உலகினில் அவர் வந்தார். இதனையே இன்றைய வசனத்தில் அவர் கூறுகின்றார், "மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்." ஆம், நீதிமான்களுக்காக அவர் வரவில்லை. 

நாம் அன்றைய பரிசேயர்களைப்போல நம்மை நல்லவர்கள் என்று எண்ணிக்கொண்டு வாழ்வோமானால் நமது எண்ணங்களை மாற்றிக்கொள்வோம்.  இயேசு கிறிஸ்து கூறினார், "ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 21 : 31 ). இது நமக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்.

பொதுவாக நாம் எல்லோருமே (என்னையும் சேர்த்துதான்) இப்படி பாவிகளை அற்பமாகத்தான் எண்ணிக்கொள்கின்றோம். நம்மைத் திருத்திக்கொள்வோம்.

ஆதவன் 🌞 737 🌻 பிப்ருவரி 03,  2023 வெள்ளிக்கிழமை 

"நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." ( 2 கொரிந்தியர் 12 : 10 )

அப்போஸ்தலரான பவுல் அடிகள் தனது உடலிலிருந்த  "முள்" நீங்கும்படி தேவனிடம் வேண்டுதல் செய்கின்றார். அது என்ன வேதனை அல்லது  நோய்  என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆனால், அது நீங்கும்படி தேவனை நோக்கி மூன்று முறை வேண்டுதல் செய்தபோது தேவன் அவருக்கு, "என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் " ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று பதில் கூறிவிட்டார். ஆனால்,  பவுல் அடிகளின் வேதனை மறையவில்லை.

அதனைக் குறித்தே அவர் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை எழுதுகின்றார், "நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." ( 2 கொரிந்தியர் 12 : 10 ) அதாவது, எனது வேதனை நீங்காவிட்டாலும் இந்த வேதனைகளில் நான் கிறிஸ்துவோடு நெருக்கமாய் இருப்பதை  உணர்கின்றேன். எனவே எனக்கு வரும் நெருக்கங்களிலும் துன்பங்களிலும் பிரியப்படுகின்றேன் என்கின்றார். 

அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் அனுபவம் உள்ளவர்கள் எல்லோருமே இந்த அனுபவத்தை அறிந்திருக்கலாம். எனது வாழ்வில் இதனை உணர்ந்துள்ளேன். வேலையில்லாமல், பணமில்லாமல் நெருக்கத்தின் காலத்தில் இருந்த நாட்களில் கிறிஸ்துவின் பிரசன்னமும் உடனிருப்பும் அதிகம் உணரத்தக்கதாய் இருந்தது. அந்த நெருக்கங்களே கிறிஸ்துவை இன்னும் அறியவும், அவரோடுள்ள அனுபவங்களில் வளரவும் உதவின. 

அதாவது செழிப்பான காலங்களைவிட செழிப்பில்லாத காலங்களில் மனிதர்களைத் தேவன் அதிகம் தங்கி நடத்துகின்றார். ஆம், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் " எனும் தேவ வார்த்தைகள் உண்மையும் நம்பிக்கை தருவதுமான வார்த்தைகள். 

இதுவே கிறிஸ்துவின் வாழ்வில் நடந்தது என்று ஒப்பிட்டுக் கூறுகின்றார் பவுல் அடிகள். "அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார். ( 2 கொரிந்தியர் 13 : 4 )

இதனை வாசிக்கும் சகோதரனே சகோதரியே, நோய், வறுமை, வேலையில்லாமை, கடன் பிரச்சனைகள் போன்ற பலவீனங்களால் ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். "ஆண்டவரே, உமது கிருபை எனக்குப் போதுமையா" என வேண்டுதல் செய்யும்போது அவர் தனது கிருபையால் ஆறுதலும் தேறுதலும் தருவார். உங்களது இந்த பலவீனம் தேவனை மேலும் அதிகமாக அறிந்திட உதவலாம். அப்போது  பவுலிடம் தேவன் கூறிய வார்த்தைகள் உண்மையானவை என்பதை பின்னாட்களில் உணர்ந்து தேவனை மகிமைப்படுத்துவீர்கள். 

உலக காரியங்களுக்காக ஓடி ஓடி அலைந்துவிட்டு "கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." என்று நாம் சொல்ல முடியாது. ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்து, தேவனை மேலும் அறியவேண்டும் எனும் ஆர்வமிருந்தால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும்.

ஆதவன் 🌞 738 🌻 பிப்ருவரி 04,  2023 சனிக்கிழமை 

"ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?"  ( 1 கொரிந்தியர் 14 : 23 )

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள அந்நியபாஷை இன்று பெரும்பாலும் கிறிஸ்தவ ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகளில் அதிகமாக பேசப்படுவதைக்காணலாம். இதுகுறித்து பலருக்கும் பலவித சந்தேகங்கள் உள்ளன. அந்நியபாஷை என்பது  உண்மையா? என்றும் அதுகுறித்து விளக்கம் தாருங்கள் என்றும் சிலர் கேட்கின்றனர். அந்நியபாஷை என்பது பொய்யல்ல. வேதத்தில் கூறப்பட்டுள்ள எதுவுமே பொய்யல்ல. ஆனால் இன்று சபைகளில் பேசப்படும் அந்நியபாஷைகள் உண்மையானவையா  என்பதுதான் கேள்வி. 

அந்நியபாஷையினை ஒரு வரம் என்று வேதம் கூறுகின்றது. (1 கொரிந்தியர் 12;10).  ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் எந்தச் சாட்சியும் இல்லாதவர்கள், ஏன், ஆவிக்குரிய வாழ்வே வாழாதவர்கள், வெளியரங்கமாக மக்களுக்குத் தெரியும் பொய்யரும், ஏமாற்றுக்காரரும் ஆவிக்குரிய சபைகளில் அந்நியபாஷையில் பேசுவதே இன்று  சந்தேகத்துக்குக் காரணமாக இருக்கின்றது. அது எப்படி தேவன் இந்த வரத்தைமட்டும் எல்லோருக்கும் பரவலாகக் கொடுத்துவிடுகின்றார் என்பதும் சந்தேகத்துக்குக் காரணமாக இருக்கின்றது.

பல ஊழியர்கள் தங்களை வல்லமையுள்ளவர்கள் என்று மக்கள் எண்ணவேண்டும் என்பதற்காக அந்நியபாஷை பேசுகின்றனர்.  "அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்." ( 1 கொரிந்தியர் 14 : 28 ) என்று வேதம் தெளிவாகக் கூறுகின்றது. அதாவது, சபையில் அந்நியபாஷை பேசவேண்டுமானால் அந்த சபையில் அதற்கு அர்த்தம் சொல்கின்ற வரம் பெற்றவர்கள் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பேசக்கூடாது. 

மேலும், "யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்." ( 1 கொரிந்தியர் 14 : 27 )

ஆனால், இன்று "லாப லாப"  என சத்தம் எழுப்பும் மக்கள் சபைகளில் இருக்கின்றார்களே தவிர அர்த்தம்கூறுபவர்களைக் காண முடியவில்லை. எனவேதான் இவர்களது அந்நியபாஷையில் சந்தேகம் எழுகின்றது.  

திருச்சபையின் ஆரம்ப நாட்களிலேயே  இந்த வரம் சிறிதளவு தான் தேவைப்பட்டது. எனவேதான் பவுல் அடிகள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்றும் இப்படி அந்நியபாஷை பேசுகிறேன் என்று கூச்சலெழுப்பிக்கொண்டிருந்தால் பவுல் அடிகள் கூறுவதுபோல நம்மைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்றுதான் பிறர் கூறுவார்கள். கிறிஸ்துவை அறியாதவர்கள் மத்தியில் அந்நியபாஷையால் எந்த நன்மையும்  ஏற்படப்போவதில்லை. இந்த தினசரி தியானம் முழுவதையும் நான் அந்நியபாஷையில் "லாப லாப ...ரீகாபாப ரீஎகாபா" என எழுதினால் யாருக்குப் பயன்படப்போகிறது? 

"நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்." ( 1 கொரிந்தியர் 14 : 19 ) எனும் பவுல் அடிகளின் வார்த்தைகளின்படி மற்றவர்களை உணர்த்தும்படித் தெளிவான வார்த்தைகளையேப்  பேசுவோம். 

ஆதவன் 🌞 739 🌻 பிப்ருவரி 05,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்." ( சங்கீதம் 84 : 5 )

இன்று மருத்துவர்களும் உடல் பயிற்சி சிறப்பு பயிற்றுனர்களும் மனிதர்கள் உடலளவில் எப்படி பலவான்களாக மாறுவது என்பது குறித்து விளக்குகின்றனர்.  ஆனால் இது எப்போதும் வெற்றி  பெறுவதில்லை. உடற்பயிற்சியே சிலரது உயிருக்கு உலைவைத்துள்ள செய்திகளை சமீபகாலங்களில் நாம் பத்திரிகைகளில் வாசிக்கின்றோம். 

உடற்பயிற்சிகளும் உடலைப் பேணி பாதுகாப்பதும் அவசியமானதே. ஆனால் நாம் முதலில் தேவனில் பெலன்கொள்ள வேண்டும். தேவனை அறிவதிலும் அவரின்மேல் கட்டப்படுவதற்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும். உடல் பலத்தை கொண்டவனல்ல, மாறாக, தேவனில் பெலன்கொள்ளுகிற மனிதனே பாக்கியவான்  என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

தேவனில் நாம் பெலன்கொள்ளும்போது உலக பலவீனங்கள் நம்மை மேற்கொள்ள மாட்டாது. அதாவது நாம் தேவனில் பெலன் கொள்ளும்போது நாம் பாவங்களையும்  உலக இச்சைகளையும் மேற்கொண்டு அவற்றிலிருந்து விடுதலைபெற முடியும். இப்படி தேவனில் பெலன்கொள்ளும் மனிதர்கள் "பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்." ( சங்கீதம் 84 : 7 )

ஆம், கர்த்தரது  சன்னதியில் நாம் சென்று சேரவேண்டுமானால் தேவனில் பெலனடையவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.  எனவேதான் இன்றைய வசனம் இப்படி பெலனடையும் மனிதனை பாக்கியவான் என்று கூறுகின்றது. 

தேவனோடு நமது தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளும்போதே நாம் தேவனில் பெலனடைய முடியும். வெறுமனே ஆராதனைக் கிறிஸ்தவர்களாக இருப்போமானால் பெலனற்றவர்களாகவே இருப்போம்.  ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டாலும் நமது தனிப்பட்ட வாழ்வில் தேவனை அறியும் அறிவில் நாம் மேம்பட்டவர்களாகவேண்டும்.

மேலும், நாம் தேவனில் பெலன்கொள்ளும்போது உலக ஆசீர்வாதங்களும் நமக்கு உண்டு. உலகில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், பாடுகள், பிரச்னைகளைத் தங்கி அதனை உருவக்கடந்து செல்லும் பெலன் நமக்குக் கிடைக்கின்றது.  எனவேதான் இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனம் கூறுகின்றது,  "அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்." ( சங்கீதம் 84 : 6 ) அதாவது, துன்பம் எனும் அழுகையின் பள்ளத்தாக்கினைக் கடந்து தேவ ஆசீர்வாதம் எனும் மழை வறண்டுபோன அவர்களது வாழ்க்கையினை நிரப்பும்.  

உடல் பெலத்தால் மட்டுமே சாதனைகள் புரியமுடியும் என்று பலரும் தவறான எண்ணம் கொண்டுள்ளனர். உலகத்துக்கு வேண்டுமானால் இது உண்மையாக இருக்கலாம், ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் நாம் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவர்களாக இருக்கமுடியும். எனவேதான்  "நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்;" ( 2 கொரிந்தியர் 12 : 10 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள். 

உடல் பெலத்துக்கும், உடல் பராமரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம் நமது ஆத்துமா தேவனில்  பெலன்கொள்ள வேண்டியதற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.  அதற்கு நமது இருதயம் செம்மையான வழிகளைப் பின்பற்றுமாறு செய்வோம். 

ஆதவன் 🌞 740 🌻 பிப்ருவரி 06,  2023 திங்கள்கிழமை 

"சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்." ( தீத்து 1 : 15 )

இந்த உலகத்தில் நாம் சிலரைக் கவனித்திருக்கலாம், அவர்கள் எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களாக இருப்பார்கள். எந்த நல்ல காரியத்தையும் செய்யத் தடையாக இருப்பார்கள்.  எல்லோரையும் எல்லாவற்றையும் சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பார்கள். 

இத்தகைய மனிதர்களை ஆலயக் கமிட்டிகளிலும்  நாம் காணலாம். இவர்களை வைத்துக்கொண்டு எதனையும் நாம் எளிதாகச் செய்யமுடியாது. ஆனால், நாம் ஆராய்ந்து பார்த்தால் இத்தகைய மனிதர்கள் உண்மையில் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள். தாங்கள் இருப்பதுபோலவே எல்லோரும் இருப்பார்கள் என எண்ணுவதால் இவர்கள் மற்றவர்களைச் சந்தேகப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதுதான் மனோதத்துவ உண்மை. இதனையே இன்றைய வசனம், அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும் என்று கூறுகின்றது. 

இத்தகைய மனச்சாட்சியில் அசுத்தமடைந்த  மனிதர்களிடம் எச்சரிக்கையாய் இருந்து அவர்கள் ஆரோக்கியமுள்ளவர்கள் ஆகும்படி கடித்துக்கொண்டு புத்திசொல்ல அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில் தனது சீடனான தீத்துவுக்கு எழுதுகின்றார்.

ஆலய காரியங்களில் இவர்கள் ஈடுபட்டாலும் இத்தகைய மனிதர்கள் தேவனை அறிந்தவர்களல்ல. "அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்." ( தீத்து 1 : 16 ) எனத் தொடர்ந்து எழுதுகின்றார் பவுல் அடிகள்.

ஆம், இத்தகைய மனிதர்கள் எந்த நற்செயலுக்கும் ஆகாதவர்களாய் இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலான வேளைகளில் இத்தகைய மனிதர்கள் தலைமைப் பொறுப்பில் வந்துவிடுகின்றனர். எனவே எந்த நல்ல செயல்களையும் இவர்கள் செய்ய விடுவதில்லை. ஆலய பணிகளில் உண்மையான ஆர்வமுள்ளவர்கள், நேர்மையாளர்கள், பக்தியுள்ளவர்கள்  புறம்தள்ளப்படுகின்றனர்.

எனவே பொறுப்பிலுள்ளவர்கள் தங்களைத்  தாங்களே ஆராய்ந்துபார்த்து இத்தகைய இழிவான குணமிருந்தால் தங்களைத் திருத்திக்கொள்வதே மேல்.  இல்லையானால் ஆடுகளின் பிரதான மேய்ப்பனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாகும்போது தக்க பலனை அடைவார்கள். நம்மிடம் இத்தகைய அவலட்சண குணமிருக்கின்றதா என்று எண்ணிப்பார்த்து திருத்திக்கொள்வோம். 

இன்று இத்தகைய மனிதர்களால்  சில பல  இடங்களில் சபைகள் கேவலமடைந்து பிற இன  மக்கள்முன் சாட்சி இழந்து அவமானப்பட்டு நிற்கின்றன.  தேவனை நோக்கி ஓடவேண்டிய சபைகள் கோர்ட் வாசலையும் வக்கீல்களையும் நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய மனிதர்கள் மனம் திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையால் மீட்பு அனுபவம் பெறும்படி  ஜெபிக்கவேண்டியது கிறிஸ்தவர்களது முக்கிய கடமை. 

ஆதவன் 🌞 741 🌻 பிப்ருவரி 07,  2023 செவ்வாய்க்கிழமை 

"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன."  ( யோவான் 20 : 31 )

இன்று பல கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ ஊழியர்களும் சுவிசேஷம் என்று ஏதேதோ அறிவிக்கின்றார்கள். இயேசு கிறிஸ்துவிடம் வந்தால் உனக்கு வாழ்வில் ஆசீர்வாதம் வரும், நல்ல வேலை கிடைக்கும். மனை, வீடு, பணம், கார், மதிப்பு இவை எல்லாம் வரும் என்கின்றார்கள். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் வருமானத்தில் பத்தில் ஒன்று கொடுக்கவேண்டும். நீ ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பத்தாயிரமாக திருப்பிக்கிடைக்கும்.  எவ்வளவு கொடுக்கிறாயோ அவ்வளவுக்கு உனக்குத் திருப்பிக்கொடுக்கப்படும் என்கின்றனர்.

இன்னும் சிலர் உன் நோய்களெல்லாம் குணமாகும், சாபங்கள் மாறும், பில்லிசூனிய கட்டுகள் அறுபடும் இன்னும் என்னென்னவோ கூறி பணம் சம்பாதிக்கிறார்ளே தவிர மனம் திரும்பிய வாழ்க்கை வாழ்வதுபற்றியோ, மறுபடி பிறக்கும் அனுபவமே கிறிஸ்தவத்தின் முதல் படி என்பதுபற்றியோ பேசி மக்களை வழி நடத்துவதில்லை. இந்த சத்தியங்கள் ஒரு சில ஏழை எளிய ஊழியர்களால் மட்டுமே பிரசங்கிக்கப்படுகின்றன.  . 

இதனால் இன்று கிறிஸ்துவை அறியாத பிற மக்கள் கிறிஸ்தவம் என்றால் ஏதோ மாயாஜாலம் என எண்ணிக்கிக்கொள்கின்றனர். சுவிசேஷம் அறிவிக்கும் ஊழியர்களும் மாயாஜாலம் காட்டும் மந்திரவாதி அணிவதைப்போன்று கோட்டு சூட்டு அணிந்துகொள்வதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.   

இந்த உலக வாழ்க்கைக்குப்பின் முடிவில்லாத நித்திய ஜீவன் ஒன்று  உள்ளது. அந்த நித்திய ஜீவனை அடையவேண்டுமானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கவேண்டும். நமது பாவங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவத்தைப் பெறவேண்டும்.

இந்த நித்திய ஜீவனை அடைந்திட கிறிஸ்துவே வழி என்பதை மக்களுக்கு விளக்கிடவே சுவிசேஷம் எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாவ நிவாரணத்துக்காக மிருகங்கள் பலியிடப்பட்டன. ஆனால் அந்த மிருகங்களின் இரத்தம் மனிதர்களது பாவங்களை அறுத்து மீட்பளிக்க முடியவில்லை. எனவே பாவமில்லாத தனது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நித்திய ஜீவனுக்கான வழியை ஏற்படுத்தினார்.   

"வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்." ( எபிரெயர் 9 : 12 )

ஏனெனில், "இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது." ( எபிரெயர் 9 : 22 )

அன்பானவர்களே, இவையே கிறிஸ்தவத்தின் அடிப்படை. இந்தச் சத்தியங்களை அறிவிக்காத அல்லது இதன் அடிப்படையில் சுவிசேஷம் அறிவிக்காதவன் எல்லோருமே கள்ளரும் பொய்யரும், வாசல் வழியாக நுழையாமல் சுவர் ஏறிக்  குதிக்கும் எத்தருமாய் இருக்கிறார்கள். (வாசிக்க:- யோவான் 10:1)  

இந்த மீட்பின் சத்தியங்களை மக்களுக்குத் தெரிவிக்கவே சுவிசேஷம் எழுதப்பட்டது என்கின்றார் அப்போஸ்தலனாகிய யோவான்.  இவற்றை ஏற்றுக்கொள்ளும்போதுதான் நாம் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். எனவேதான்  "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன."  ( யோவான் 20 : 31 ) என்று இன்றைய  தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது.. ஆனால் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் விசுவாசிகளும் ஊழியர்களும் ஆசீர்வாத வாக்குத்தத்தங்களை சுவிசேஷத்தில் தேடி பொறுக்கிக்கொண்டிருக்கின்றனர். பரிதாபம்.!!!

ஆதவன் 🌞 742 🌻 பிப்ருவரி 08,  2023 புதன்கிழமை 

"நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." ( சங்கீதம் 136 : 23 )

சங்கீதம் 136 ஒரு துதியின் சங்கீதமாகும். வானம், சூரியன், சந்திரன், கடல் என கர்த்தரது ஒவ்வொரு படைப்பிற்காகவும் அவரைத் துதிக்கின்றது. மட்டுமல்ல, தனது பராக்கிரமத்தால் அவர் எகிப்தியரின் கையிலிருந்து இஸ்ரவேல் மக்களை மீட்டதையும் வல்லமைமிக்க ராஜாக்களை அழித்ததையும்  இஸ்ரவேல் மக்களுக்காக அவர் கிருபை செயல்பட்ட விதத்தையும் நினைத்துத் துதிக்கச் சொல்கின்றது.  

இந்த சங்கீதத்தின் 23 ஆம் வசனம் வித்தியாசமானது. தேவனது பெரிய மகத்துவங்களைக் கூறிவிட்டு,  "நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." என்று கூறுகின்றது. மட்டுமல்ல, நம்முடைய தேவனுக்கு அருமையான ஒரு புதுப் பெயரையும் இந்த வசனம் குறிப்பிட்டுள்ளது. அது, "தாழ்வில் நம்மை நினைத்தவர்".  இரட்சிப்பு, அரண், கோட்டை, கேடகம் எனும் வல்லமையைக் குறிக்கும் பல பெயர்களில் வேதம் தேவனைக் குறிப்பிட்டுள்ளது. இங்கோ, "தாழ்வில் நம்மை நினைத்தவர்" என்று குறிப்பிட்டு அவரைத் துதியுங்கள் என்று கூறுகின்றது. 

ஒரு மிகப்பெரிய கம்பெனியில் பல்வேறுபட்ட நிலையிலுள்ள தொழிலாளர்கள் வேலைசெய்வார்கள். அந்த தொழிற்சாலையின் எம்.டி. பல்வேறு நிலையிலுள்ள அந்த கம்பெனியின் அதிகாரிகளை நினைவுகூர்ந்து அவர்களை அழைத்துப் பேசுவார். அவர்களோடு ஆலோசனை செய்வார். ஆனால் அங்கு வேலைசெய்யும் தரை துடைக்கும் துடைப்புத் தொழிலாளியை அவர் நினைவில் வைத்திருக்கமாட்டார்.  அது அவருக்கு முக்கியமுமல்ல. 

ஆனால் நமது கர்த்தர் அப்படியல்ல என்று வேதம் கூறுகின்றது. அவருக்கு எல்லோரும் ஒன்றுதான். மட்டுமல்ல, அவரைபொருத்தவரை தாழ்நிலையிலுள்ளவர்கள்  தான் முக்கியமானவர்கள். அவர்களையே அவர் நினைவில் கொண்டுள்ளார். 

பெரிய மலையிலிருந்து வழிந்து ஓடிவரும்  தண்ணீர் மேட்டுப்பகுதியை நோக்கிப் பாய்வதில்லை. மாறாக தாழ்விடங்களையே முதலில் நிரப்பும். அதுபோல உன்னததேவ பர்வதத்திலிருந்து கர்த்தரது கிருபையும் ஆசீரும் தாழ்ந்த குணமுள்ளவர்களை நோக்கியே வருகின்றது. காரணம் அவர் தாழ்மையுள்ளவர்களையே நோக்கிப் பார்க்கின்றார். 

இன்று வறுமை, புறக்கணிப்பு, அவமானம் போன்ற தாழ்ச்சியில் இருக்கின்றீர்களா? அந்த நிலையிலும் கர்த்தருக்கேற்ற வாழ்க்கை வாழ்கின்றீர்களென்றால்  கர்த்தர் உங்களை நினைத்திருக்கின்றார். கலங்கிடவேண்டாம். நமது கர்த்தர் பதவி, பகட்டு, அழகு, அந்தஸ்து பார்த்து மக்களை நேசிப்பவரல்ல. அவர் இதயத்தையே நோய்ப்பார்த்து மக்களை எடைபோடுகின்றார். அதன் அடிப்படையிலேயே கனிவுடன் அவர்களை நினைவுகூர்கின்றார். 

இந்தச் சத்தியத்தை அனுபவித்து உணர்ந்ததால் சங்கீத ஆசிரியர் "நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." என்கின்றார். அப்போஸ்தலனாகிய பவுல் அடிகளும் இதனால்தான்  "நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்." ( பிலிப்பியர் 4 : 11 ) என்கின்றார். நாம் எந்த தாழ்ச்சியில் இருந்தாலும் மன மகிழ்ச்சியோடு கர்த்தாரையும் அவரது கிருபையையும் துதிப்போம். ஆம், கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார்; அவர் விடுவிப்பார். 

ஆதவன் 🌞 743 🌻 பிப்ருவரி 09,  2023 வியாழக்கிழமை 

"உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக." ( சங்கீதம் 143 : 10 )

மனிதர்கள் இன்று அவர்களாக சில காரியங்களைச்  சிந்தித்து  அது தேவனுக்கும்  பிரியமாயிருக்கும் என்று எண்ணிக்கொள்கின்றனர். அதாவது தங்களுக்கு எது உகந்தது என எண்ணுகின்றார்களோ அதுவே தேவனுக்கும் உகந்தது என்று எண்ணிக்கொள்கின்றனர். உதாரணமாக, குறிப்பிட்ட முறைப்படிக்  காணிக்கைக்  கொடுப்பது, ஜெபிப்பது, வேதாகமத்தை வாசிப்பது, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வது இவையே தேவன் விரும்புவது அல்லது தேவனுக்கு உகந்தது என எண்ணிக்கொண்டு அவற்றைச்செய்ய ஆர்வமாகவுள்ளனர். தேவனுக்கு உகந்தது என்ன என்பதை பெரும்பாலும் மனிதர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.

வெறும் பக்திச் செயல்பாடுகளே போதுமென்றால் இன்றைய வசனத்தில் தாவீது இப்படி விண்ணப்பம் செய்திருக்கமாட்டார். ஏனென்றால் யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே இவைகளைச் செய்யவேண்டுமென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் தாவீது "உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக." என்று    கூறுகின்றபடி செம்மையான வழி என்று ஒன்று இருக்கின்றது. தேவனுடைய பரிசுத்த ஆவியானவரே நம்மை அந்தப்பாதையில் நடத்திட முடியும் என்பது தெளிவு. .   

ஏனெனில் எல்லா காணிக்கைகளையும், ஜெபங்களையும், சபைக் கூட்டங்களையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. அக்கிரமச் செய்கைகளைச் செய்துகொண்டு அதிகமாக ஜெபிப்பதையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. இதனையே ஏசாயா மூலம் தேவன் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்:-

"இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்." ( ஏசாயா 1 : 13 )

"நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது." ( ஏசாயா 1 : 15 )

ஆம் அன்பானவர்களே, ஜெபம், காணிக்கை, உபவாசம், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வது இவைகளைவிட முதலில் நமது வாழ்க்கை நல்லதாக இருக்கவேண்டும் என தேவன் விரும்புகின்றார். மணிக்கணக்கில் ஜெபிப்பதையல்ல நமது வாழ்க்கை செயல்பாடுகளைத்தான் தேவன் முதலில் பார்க்கின்றார். 

இப்படிக் கூறுவதால் அதிகநேரம் ஜெபிக்கவேண்டாம் என்று பொருளல்ல; தேவனுக்குள் நாம் வாழும்போது நாமே நம்மை அறியாமல் அதிக நேரம் ஜெபிப்போம். ஜெபமே ஆவிக்குரிய வாழ்வின் அடித்தளம். பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெற்று மீட்பு அனுபவம் பெறும்போது நமது ஜெபம் வித்தியாசமானதாக இருக்கும். உலகத் தேவையளுக்காகவே மணிக்கணக்கில்  நாம் தேவனைக் கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டோம். 

எனவேதான் தாவீது, "உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக." என்று ஜெபிக்கின்றார். நாம் நாமாக தேவனுக்கு இவை இவை பிரியமாய் இருக்கும் என எண்ணிக்கொள்வதல்ல, தேவன் எதனில் பிரியமாய் இருக்கிறார் என்று எண்ணிப்பார்க்கவேண்டும். அவற்றின்படி நடக்கவேண்டும்.  தேவனது பரிசுத்த ஆவியானவர் நம்மை உணர்த்தி அத்தகைய நல்ல வழியில் நடத்திட ஜெபிப்போம். 

ஆதவன் 🌞 744 🌻 பிப்ருவரி 10,  2023 வெள்ளிக்கிழமை 

"காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன்".  யோவான் 9 : 39 )

இயேசு கிறிஸ்து பிறவிக் குருடன் ஒருவனை குணமாக்கியது குறித்து யூதர்கள் நம்பாமல் குணமாக்கப்பட்டக் குருடனை அழைத்து மீண்டும் மீண்டும் விசாரித்தனர். பாவியாகிய ஒரு மனிதன் எப்படி இந்தக் காரியத்தைச் செய்யமுடியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.  அவர்கள் பார்வையில் இயேசு கிறிஸ்து ஒரு பாவ மனிதன்.  இதனை அவர்கள் குணமாக்கப்பட்டக் குருடனிடம் கூறியபோது அவன் அவர்களிடம்:-

"அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்." ( யோவான் 9 : 25 ) என்றான். ஆனாலும் யூதர்கள் இவன் ஒரு பாவி எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றனர். அதற்குப் பார்வையடைந்த குருடன்,  "அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்." ( யோவான் 9 : 30 ) "அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்." ( யோவான் 9 : 33 )
 
யூதர்கள் அவனைத் திட்டி அனுப்பிவிட்டனர். பிற்பாடு அவனை இயேசு கிறிஸ்து கண்டு அவனிடம் பேசும்போது தன்னை வெளிப்படுத்தி இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகளைக் கூறுகின்றார். இயேசு குணமாக்கப்பட்டக்  குருடனிடம், "தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாய் இருக்கின்றாயா?" என்று கேட்டபோது அவன்,  " ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்." ( யோவான் 9 : 36 ) இப்படிக் கேட்டபோதுதான் அவனது ஆன்மீகக் குருடு நீங்கியது. 

கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் இன்னும் அவரை மெய்யாக அறிந்துகொள்ளவில்லை. ஆனால் "நாங்கள் காண்கிறோம்" என்று கூறிக்கொண்ட யூதர்களைப்போல  கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் இயேசு கிறிஸ்துவைக் காண்கின்றவர்கள் என்றால் வெறுமனே அவரை விசுவாசிக்கிறேன் என்று கூறுவதல்ல; அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார், அவருக்கு உகந்தது என்ன என்பதனை நாம் அறிய ஆர்வமுள்ளவர்களாக வேண்டும். அவரைப் புகழும்  புகழ்ச்சி நமது வாயில் இருந்தால் போதாது மாறாக நமது இருதயம் அவருக்கு நெருக்கமாக இருக்கவேண்டியது அவசியம். 

"இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது." ( ஏசாயா 29 : 13 ) என்ற வசனத்தின்படி இருந்தோமானால் நாமும் அவரைக் காண்கிறோம், அவரை அறிந்திருக்கின்றோம் என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் குருடர்களே.  

இப்படித் தேவனைத் தேடும்  உண்மையான மனமிருந்தும் இதுவரை அவரைக்     காணாதவர்கள் காணும்படியாகவும், அவரைக் காண்கின்றோம் என்று கூறிக்கொண்டு தாறுமாறான வாழ்க்கை வாழ்பவர்களை குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்கின்றேன் என இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார். 

ஆதவன் 🌞 745 🌻 பிப்ருவரி 11,  2023 சனிக்கிழமை 

"ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 4 )

நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, கிறிஸ்த்துவை அறிந்து ஆவிக்குரிய வாழ்வில் நடக்க ஆரம்பிக்கும்போது நமக்கு கிறிஸ்துவிடம் அதிக  அன்பு ஏற்படும். எப்போதும் அவரது நினைவும் அவருக்கு ஏற்புடைய ஏதாவது ஒன்றினை தினமும் செய்யவேண்டும் எனும் ஆசையும் அதிக அளவில் இருக்கும். அவரது உடனிருப்பை நாம் எப்போதும் உணருவோம். கிறிஸ்துவின்மேலுள்ள இந்த அன்பையும் ஈடுபாட்டையும் நாம் தொடர்ந்து காத்துக்கொள்ளவேண்டும் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.    

எபேசு சபைத் தூதனுக்கு ஆவியானவர் இதனைக் கூறுகின்றார். அந்த சபையிலுள்ள நல்ல குணங்களையும் முதலில் பாராட்டுகின்றார். இன்று நமக்கும் இதுபோன்ற நல்ல ஆவிக்குரிய குணங்கள் இருக்கலாம் ஆனாலும் அது மட்டும்போதாது கிறிஸ்துவிடமுள்ள அன்பில் குறைவில்லாமல் இருக்கவேண்டியது அவசியம்.

அது என்ன நல்ல குணங்கள்? கிறிஸ்துவின் பணிகளைச்  செய்யும் பிரயாசம்,  பொல்லாத ஊழியர்கள் செய்யும் காரியங்களை சகிக்கமுடியாமை, கள்ள அப்போஸ்தலர்களை இனம் கண்டறிந்தபின்பும் பொறுமையாக அவர்களை ஏற்றுக்கொள்வது, அவர்கள்மேல் பொறுமையாக இருப்பது,  கிறிஸ்துவின் காரியங்களை செய்ய இளைப்படையாமல் இருப்பது போன்றவை. 

இதனையே, "உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும்,  நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்". ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 2, 3 ) என்று கூறுகின்றார். 

மேற்குறிப்பிட்ட நல்ல குணங்கள் இருந்தாலும், "நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு." என்று தொடர்ந்துவரும் இந்த வசனம் கூறுகின்றது. அதாவது மேற்குறிப்பிட்ட குணங்கள் மட்டும் போதாது கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவில் நாம் இணைந்திருக்கவேண்டும். கிறிஸ்துவோடு நெருங்கிய உறவு இல்லாமல் இருந்துகொண்டும் ஒருவர் மேற்குறிப்பிட்ட ஆவிக்குரிய காரியங்களைச் செய்ய முடியும். 

இது எப்படி என்றால், வீட்டில் மனைவி பிள்ளைகளிடம் தனிப்பட்ட அன்புறவோடு பேசி உறவாடி இருக்காமல் வீட்டுச் செலவுக்கும்,  அவர்களுக்கு வேண்டிய இதரச் செலவுகளுக்கும் பணத்தைமட்டும் கொடுக்கும் மனிதனைப்போல உள்ளது. வீட்டுச் செலவுகளுக்கான பணத்தைக்கொடுப்பது  நல்லதுதான். ஆனால் வீட்டாரிடமுள்ள அன்பையும் தனிப்பட்ட உறவையும்  விட்டுவிட்டால் என்ன பயன்?   

அன்பானவர்களே, ஊழியங்களுக்கும் இதர ஆலயப் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது மட்டும் போதாது;  கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவில்   வாழ்வதே முக்கியம். அப்படி வாழ்ந்து நல்ல செயல்களையும் செய்வோம். 

ஆதவன் 🌞 746 🌻 பிப்ருவரி 12,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 4 : 24 )

கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நாம் வாழ முற்படும்போது நமது பழைய மனிதனைக் களைந்துவிடவேண்டியது அவசியம். நான் இப்படியே இருப்பேன் ஆனால் தேவன் என்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்று நாம் கூறமுடியாது.  தேவன் மனிதனைத் தனது சாயலாகவும் தனது ரூபமாகவும் படைத்தார். ( ஆதியாகமம் 1:27)  ஆனால் அந்த மனிதனை நாம் பாவத்தால் இழந்துவிட்டோம். 

இந்த உலகத்தில் நாம் பாவம் செய்து தேவ மகிமையை இழந்து விடுகின்றோம். எனவே நாம் தேவனோடு ஐக்கியப்படவேண்டுமானால் நாம் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட காலத்தில் இருந்ததுபோல  புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளவேண்டும்.

மேலும் இன்றைய வசனம், "மெய்யான நீதி" எனும் வார்த்தை ஒன்றையும் கூறுகின்றது. இந்த உலகத்தில் மனிதர்களது நீதி என்று ஒன்று  உண்டு. ஆனால் நாம் அதன்படிமட்டுமல்ல, தேவ நீதியின்படி வாழவேண்டியது அவசியம்.   ஏனெனில் மனிதர்களுக்களது நீதி நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக மாற்றாது. நாம்  நீதியான வாழ்வுதான் வாழுகின்றோம் என நாம் எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால், நாம் ஒருவேளை தேவ நீதியின்படி வாழாதவர்களாக இருக்கலாம். தேவ நீதியின்படி நாம் வாழ்கின்றோமா என்பதே முக்கியம். 

ஏனெனில் மனிதர்களது நீதி அழுக்கான கந்தையைப்போல இருக்கின்றது. "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." ( ஏசாயா 64 : 6 ) என்று  வசனம் கூறுகின்றது. 

அழுக்கும் கந்தையுமான மனித நீதியின்படியல்ல, தேவ நீதியின்படி வாழ நாம் முற்படவேண்டும். இதுவே மெய்யான நீதி.

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பெயர் நீதியின் சூரியன். எனவே, நீதியின் சூரியனான அவரே நம்மை மெய்யான  நீதியின் பாதையில் நடத்திட முடியும். அன்பானவர்களே, அவரது வழி நடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். அவரே நம்மை "மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் நடத்திட முடியும். மட்டுமல்ல, அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது மட்டுமே தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனை நாம் தரித்துக்கொள்ள முடியும்.

அப்படி புதிய மனிதனாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அவருக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப்பெற்று மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. 

ஆதவன் 🌞 747 🌻 பிப்ருவரி 13,  2023 திங்கள்கிழமை 

"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்." ( மத்தேயு 28 : 19, 20 )

இயேசு கிறிஸ்து பாடுபட்டு  மரித்து உயிர்த்து நாற்பது நாட்களுக்குப்பின் தனது சீடர்களை கலிலேயாவிலுள்ள குறிப்பிட்ட மலைக்கு வரவழைத்து அவர்களுக்கு இறுதி அறிவுரையாகக் கூறியவையே இன்றைய தியானத்துக்குரிய வசனம்.  

இங்கு இயேசு கிறிஸ்து, அற்புதம் செய்யுங்கள், மாயாஜாலம் செய்யுங்கள், தீர்க்கதரிசனங்கள் சொல்லுங்கள், பில்லி சூனிய கட்டுகளை அவிழுங்கள், ஜெப பேனா விற்பனை செய்யுங்கள், ஜெப தைலம் விற்பனை செய்யுங்கள், தசமபாக காணிக்கையைச் சரியாகக் கணக்கிட்டு வாங்கி உங்களுக்கு கார், பங்களா வாங்குங்கள் என்றெல்லாம் கூறவில்லை. மாறாக, "சகல ஜாதி ஜனங்களையும் சீடராக்கி ஞானஸ்நானம் கொடுங்கள்" என்று கூறுகின்றார். 

ஒரு சீடத்துவ வாழ்க்கை வாழ்வே அவர் மக்களை அழைக்கின்றார். ஒருவர் கிறிஸ்துவின் சீடர் என்று அழைக்கப்பட அவர் கனியுள்ள வாழ்க்கை வாழவேண்டியது அவசியம். "நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்." ( யோவான் 15 : 8 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? எனவே, ஆவியின் கனிகள் உள்ளவனே கிறிஸ்துவின் சீடன். 

ஆவியின் கனி என்பது என்ன? "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ( எபேசியர் 5 : 9 )

மேலும், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்று வேதம் கூறுகின்றது. 

அதாவது, கிறிஸ்து கூறிய இறுதி அறிவுரை இதுதான். இந்த உலகினில் சென்று அனைத்து இன மக்களுக்கும் நற்செய்தியை அறிவித்து அவர்களை கனியுள்ள சீடர்கள் ஆக்குங்கள் என்பதே. அப்படி அவர்கள் கனியுள்ளவர்களாக மாறவேண்டுமானால், "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்." 

அன்பானவர்களே, எனவேதான் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது. பவுல் அடிகள் கூறியுள்ள ஆவிக்குரிய கனிகள் ஒருவரிடம் உருவாக்க உழைப்பவனே உண்மையான சுவிசேஷகன். அத்தகைய நற்செய்தியாளர்களை மட்டுமே நாம் மதிக்கவேண்டும், கனம்பண்ணவேண்டும். மத வியாபாரிகளை புறக்கணிக்கவேண்டும் 

ஆதவன் 🌞 748 🌻 பிப்ருவரி 14,  2023 செவ்வாய்க்கிழமை 

"தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின் துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?" ( ஆபகூக் 1 : 13 )

இன்றைய வசனத்தில் ஆபகூக் தீர்க்கதரிசி கூறும் வார்த்தைகள் சாதாரண மனிதர்களது மனநிலையில் இருந்து அவர் கூறுவது.  தேவன் தீமையைப் பார்க்காதவர். எனவே அவர் தீமை செய்பவர்களையும் அழித்து ஒழித்துவிடவேண்டும் என்று ஆபகூக் எண்ணுகின்றார்.  எனவேதான்  "துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?" என்று தேவனை நோக்கிக் கேள்வி எழுப்புகின்றார். 

நமது தேவன் தீமையைப் பார்க்காத சுத்தக்கண்ணன் என்று வேதம் கூறினாலும்  அவர் தீயோரை அழித்து ஒழிக்க வரவில்லை.  தேவன் தீமையை வெறுக்கின்றாரே தவிர தீமை செய்பவர்களை வெறுப்பதில்லை. இயேசு கிறிஸ்து கூறிய ஊதாரி மைந்தன் உவமை, காணாமல் போன ஆடு உவமை இவை எல்லாமே பாவிகள் மனம் திரும்பி தேவனிடம் வரவேண்டும் எனும் தேவனது எண்ணத்தைக் குறிப்பனவாகும். எனவேதான், "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் " ( லுூக்கா 19 : 10) என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்று துன்மார்க்கர்களது வாழ்க்கைச் செழிப்பதைக் காணும்போது நாமும் ஆபகூக் தீர்க்கத்தரிசியைப்போல எண்ணலாம். ஏன் தேவன் இவைகளை அனுமதிக்கின்றார் எனும் கேள்வி நமக்குள் எழலாம். 

அன்பானவர்களே, நித்திய நரக  அக்கினி என்பது நினைத்துப்பார்க்க முடியாத கொடுமையானது. அத்தகைய கொடுமையை யாரும் அனுபவிப்பதை தேவன் விரும்புவதில்லை. எனவே, அவர்கள் மனம்திரும்பிட வாய்ப்பளித்து நீடிய பொறுமையோடே அவர்களது மனம்திரும்புதலுக்குக் காத்திருக்கின்றார். 

இதற்காகவே இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்'( மாற்கு 2 : 17 ) "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது." ( 1 தீமோத்தேயு 1 : 15 ) எனும் வசனங்கள் துன்மார்க்கரை உடனடியாக தேவன் ஏன் அழிப்பதில்லை என்பதற்குப் பதிலாக அமைந்துள்ளன.  

ஆனால் மதிகெட்ட துன்மார்க்கர்கள் தங்களது துன்மார்க்கச் செயல்களுக்குத் தண்டனை உடனே கிடைக்காததால் கடவுளை நம்புவதில்லை. "தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்." ( சங்கீதம் 53 : 1 )

ஆனால் எத்தகைய துன்மார்க்கரையும், பாவிகளையும்  மன்னித்து அணைத்துக்கொள்ள தேவன் ஆர்வமாகவே இருக்கின்றார். ஆம், "நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(எபிரெயர் 8:12)

இன்றைய வசனத்தின் இறுதியில் ஆபகூக், "துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?" எனும் கேள்வியை எழுப்புகின்றார்.  இதற்கான பதில், நீதிமானை அவர் துன்மார்க்கனைக் கொண்டு சோதித்துப் புடமிடுகின்றார் என்பதே பதில்.  ஆம் அன்பானவர்களே, இந்தக் கிருபையின் காலத்தில் வாழும் நாம் ஆபகூக் தீர்க்கதரிசி கூறுவதுபோல துன்மார்க்கரும் பாவிகளும் அழியவேண்டும் எனும் எண்ணக்கூடாது. அவர்களது மனம் திரும்புதலுக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம்.   

ஆதவன் 🌞 749 🌻 பிப்ருவரி 15,  2023 புதன்கிழமை 

"அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." ( சங்கீதம் 103 : 10 )

நாம் எல்லோருமே பாவம் செய்கின்றோம். அதாவது தேவனது சித்தத்துக்கு எதிராகப் பல வேளைகளில் செயல்படுகின்றோம்.  ஆனால் தேவன் உடனேயே அவற்றுக்கான தண்டனையை நமக்குத் தருவதில்லை. 

இதுவே தேவன் நம்மை அன்பு செய்கின்றார் என்பதற்கு ஒரு அடையாளம். இது நமது குடும்பங்களில் நாம் குழந்தைகளிடம் நடந்துகொள்வதற்கு ஒப்பாக இருக்கின்றது. நமது குழந்தைகள் எப்போதும் நமது சொல்படி கேட்டு நடப்பதில்லை. பலவேளைகளில் நமது அறிவுரைகளை அசட்டை செய்கின்றனர். உடனடியாக நாம் அவர்களைக் கடுமையாகத் தண்டித்துவிடுவதில்லை. காரணம் நாம் அவர்கள்மேல் கொண்டுள்ள அன்பு. இதுபோலவே தேவனும் இருக்கின்றார்.  

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவங்களுக்கு பலவிதத் தண்டனைகளை மோசே வழியாகத்  தேவன் கற்பித்திருந்தார். குறிப்பாகக் கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் பழிவாங்கவேண்டும் என்பதே தண்டனை. இவைதவிர, கல்லெறிந்து கொல்லுதல், சவுக்கடி, சிலுவையில் அறைதல், கழுவிலேற்றுதல்  போன்ற தண்டனைகளும் இருந்தன.  

ஆனால் இன்றைய புதிய ஏற்பாட்டுக்காலத்தில் இந்தத் தண்டனைகளை தேவன் கிருபையின் பிரமாணத்தால் மாற்றியுள்ளார். இதனை, "உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." ( எசேக்கியேல் 20 : 44 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம், கிறிஸ்து இயேசுவின் கிருபையால் "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." காரணம் தண்டனைகொடுத்து அழிப்பதற்கல்ல, பாவிகளை நீதிமானாகவே கிறிஸ்து இயேசு உலகினில் வந்தார். நமது மனம் திரும்புதலுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கின்றார். நாம் நித்திய ஜீவனை அடைந்திடவேண்டும் என்பதற்காகவே அவர் அப்படிச் செய்கின்றார். 

கிறிஸ்துவின் இந்தக் கிருபையைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது." ( ரோமர் 5 : 20, 21 ) என்று எழுதுகின்றார். 

கிறிஸ்து தனது உயிரைத் தியாகம் செய்து தனது இரத்ததால் உண்டாக்கிய இந்தக் கிருபையினை நாம் வீணாக்கிடக்கூடாது. நாம் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டும் என்பதற்காகவே கிறிஸ்து இப்படிச் செய்கின்றார். பரிசுத்த வாழ்க்கைக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.  நமது தேவனை பரிசுத்தர் என்று வேதம் சொல்கின்றது. ஆனால் நாம் அதுபோல பரிசுத்தர்களாக இருக்கவேண்டுமென்றே தேவன் விரும்புகின்றார். எனவே உடனடி தண்டனை தந்து நம்மை அழிக்காமல் கிருபையால்  மனம் திரும்பிட வாய்ப்பளிக்கின்றார்.  கிறிஸ்துவின் கிருபையினை வீணாக்காமலும் அற்பமாக எண்ணாமல் காத்துக்கொண்டு நம்மையும் பரிசுத்தர்களாகக் காத்துக்கொள்வோம்.

ஆதவன் 🌞 750 🌻 பிப்ருவரி 16,  2023 வியாழக்கிழமை 

"அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!" ( ஏசாயா 14 : 12 )

சாத்தானின் வீழ்ச்சி குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. லூசிபர் தனது பெருமையால் விண்ணக மகிமையினை இழந்து நரகத்தில் தள்ளப்பட்டான். இந்த வீழ்ச்சிக்குக் காரணம், தேவனுக்கு நிகராக தன்னை அவன் உயர்த்தும் விதமாக முயன்றதே. ஆம், பெருமையே அவன் அழிவுக்குக் காரணமாக அமைந்தது. இதனை நாம் தொடர்ந்து வரும் வசனங்களில் பின்வருமாறு வாசிக்கின்றோம். 

"நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே." ( ஏசாயா 14 : 13, 14 )

ஆனால் பெருமையினால் லூசிபரும் அவனது ஆதரவு தூதர்களும் இழந்த விண்ணக மகிமையினை தேவன் தாழ்மையாய்த் தன்னைப் பின்பற்றும் மனிதர்களுக்குக்  கொடுக்க விரும்புகின்றார். எனவேதான் தான் ஆசைப்பட்டதும் இழந்துபோனதுமான  மகிமையினை மனிதர்கள் பெற்றுவிடக்கூடாது  எனும் எண்ணத்தில் சாத்தான் மனிதர்களைப் பாவத்தில் தள்ள முயலுகின்றான். 

சாத்தான் ஆசைப்பட்டதுபோல பிதாவானவரோடு நாமும் மகிமையில்  இருக்க முடியும். ஆனால் அது சாத்தான் பெருமையால் முயன்றதுபோல முயல்வதால் அல்ல; மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வதன் மூலம்.  இதனை இயேசு கிறிஸ்து பிதாவிடம் ஜெபித்தபோது கூறுகின்றார். நாம் ஒவ்வொருவரும் இந்த மகிமையை அடைந்திடவேண்டுமென்று நம் ஒவ்வொருவருக்காகவும் இயேசு கிறிஸ்து ஜெபித்துள்ளார். 

இயேசு கிறிஸ்துவிடம் இருந்த அதே அன்பை பிதா நமக்கும் தரும்படி இயேசு பின்வருமாறு வேண்டினார்:-

"நான் இவர்களுக்காக (தனது சீடர்களுக்காக) வேண்டிகொள்கிறதுமல்லாமல் இவர்களது வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் (அதாவது சீடர்களது வார்த்தையினை விசுவாசித்து அவரை விசுவாசிக்கும் நமக்காகவும்) வேண்டிக்கொள்கிறேன். ( யோவான் 17 : 20 )   "நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 23 )

"பிதாவே, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 )

அன்பானவர்களே, கிறிஸ்துவின் கிருபையின் மேன்மையைப் பாருங்கள். விண்ணகத்தின் மகிமையினை இழந்த சாத்தானது வீழ்ச்சிக்குக் காரணம் பெருமை. ஆனால் அந்த மகிமையினை நாம் கிறிஸ்துவை தேவனது குமாரன் என்று விசுவாசிப்பதனாலும்  நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு தாழ்ச்சியுள்ள வாழ்க்கை வாழ்வதன் மூலமும் பெற முடியும்.  எனவே சாத்தானின் தந்திரங்களினால் நாம் மயங்கிவிடாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துக் காட்டிய வழியில் நடந்து நமது பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வோம். அப்போது சாத்தான் பார்த்து வெட்கப்படுமளவுக்கு நாம் அவரோடு ஆளுகைசெய்வோம்.

ஆதவன் 🌞 751 🌻 பிப்ருவரி 17,  2023 வெள்ளிக்கிழமை 

"நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 )

பரிசுத்த ஆவியானவரைப்பற்றி கிறிஸ்தவர்களுக்குளேயே பல சந்தேகங்களும் தெளிவின்மையும் உள்ளன. "ஆவி" என்று சொல்வதால் அவரை ஏதோ ஆவி என்று எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் பிதா, குமாரனைப்போல தனி ஆள் தத்துவம் உள்ளவர். இதனை இயேசு கிறிஸ்து கூறும் வார்த்தைகள் மூலம் அறியலாம். 

"சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றவாளனை அவர் உங்களுக்குத் தருவார் "  (யோவான் 14:16)

பரிசுத்த ஆவியாகிய தேற்றவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார்" (யோவான் 14:26) 

"சத்திய ஆவியாகிய  தேற்றவாளன் வரும்போது அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்" (யோவான் 15:26)

"நான் போகாதிருந்தால் தேற்றவாளன் உங்களிடத்தில் வரார்"  (யோவான் 16:7)

நாம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிப்பு அனுபவம் பெறும்போது நமக்குப் பரிசுத்த ஆவியானவர் அருளப்படுகின்றார். இதனையே, "மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப்பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவி" என்று இன்றைய வசனம் கூறுகின்றது.  நமக்குள் வரும் ஆவியானவர் இப்படி ஆள் தத்துவம் உள்ளவராகையால் ஆவியானவரும் மன மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்வுள்ளவராக இருக்கின்றார். இந்த கிருபையின் நாட்களில் அவரே நம்மை வழிநடத்துகின்ற "வழிநடத்தும் ஆவியானவராக" இருக்கின்றார். 

அவரது வழிநடத்துதலை நாம் புறக்கணிக்கும்போது ஆவியானவர் துக்கப்படுகின்றார். அப்படி நாம் புறக்கணித்துச் செய்யும் செயல்களே துற்செயல்கள் என்று பவுல் அடிகள் கூறுகின்றார். இதனையே தொடர்ந்துவரும் வசனத்தில், "சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது." ( எபேசியர் 4 : 31 ) என்று கூறுகின்றார். 

அதாவது, மற்றவர்கள்மேலுள்ள கசப்புகள், கோபம், மூர்க்க எண்ணங்கள்,  மற்றவர்களை எதிர்த்து கூக்குரலிடுதல், தூஷணம் இவைபோன்றவை ஆவியானாவரைத் துக்கப்படுத்துகின்றன. பீடி, சிகரெட், வெற்றிலை பழக்கங்களைவிட இத்தகைய குணங்களே கேடானவைகல். 

அன்பானவர்களே எனவே, ஆவியானவரைத் துக்கப்படுத்தும் காரியங்கள் நம்மிடமுள்ளதா என்று நிதானித்து அறிந்து அத்தகைய குணங்களை நம்மைவிட்டு அகற்றுவோம். தேவனோடு எப்போதும் ஜெப உறவில் தரித்திருந்தால் ஆவியானவரின் வழிநடத்துதலை நாம் நமது அன்றாட வாழ்வில் உணரமுடியும்.  

முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருபோமாக.!!

ஆதவன் 🌞 752 🌻 பிப்ருவரி 18,  2023 சனிக்கிழமை 

"அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்." ( மாற்கு 16 : 20 )

இன்று நாம் அனைவருமே நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை ஆய்வு செய்து பார்க்கவேண்டியதும், ஆவிக்குரிய வாழ்க்கையில் பலப்படவேண்டியதும், ஜெபிக்கவேண்டியதுமான முக்கிய காரியத்தை இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது ஆதி அப்போஸ்தலர்களது அனுபவம் நமக்கு வேண்டும் என்பதே அது. 

இன்றைய வசனம் கூறுகின்றது, அவர்கள் பிரசங்கம் பண்ணும்போது, கர்த்தர் அவர்களோடுகூட கிரியை நடப்பித்து அவர்களால் பல அற்புத அடையாளங்களை நடப்பித்து தனது வசனத்தை உறுதிப்படுத்தினார் என்று. அதாவது, அவர்கள் பிரசங்கம் மட்டும்செய்யவில்லை கிறிஸ்து செய்ததுபோல பல அதிசயங்களைச்  செய்தார்கள். 

இயேசு கிறிஸ்து அற்புதம் செய்ய ஒரு முக்கிய காரணம், தான் சொல்வதை மக்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே. இயேசு கிறிஸ்து மக்கள்மேல்கொண்ட தனது மன உருக்கத்தினாலும் சில வேளைகளில் அதிசயங்கள் செய்தார். தீராத  நோய்களைக் குணமாக்கினார். இது தவிர, வெற்று வாய்ச்சவடால் பேசிக்கொண்டிருந்தால் எவரும் தான் சொல்வதை நம்பமாட்டார்கள் என்றும்  இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். இதுவும் இயேசு கிறிஸ்து அற்புதங்கள் செய்திட ஒரு காரணம். இதனையே  இயேசு கிறிஸ்து, " என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்." ( யோவான் 14 : 11 ) என்று தெரிவித்தார். 
  
பிதா தன்னை அனுப்பினார் என்று மக்களை நம்பவைத்திட இயேசு கிறிஸ்துவுக்கு அற்புதங்கள் செய்யவேண்டியிருந்தது. அதுபோல, கிறிஸ்துவே நம்மை அனுப்பினார் என்று மக்களுக்கு  வெளிப்டையாகத் தெரியவைத்திட நம்மைக்கொண்டும் அற்புதங்கள் நடைபெறவேண்டியது அவசியம் என்பது தெளிவு.  நாம் பேசக்கூடிய,  எழுதக்கூடிய வார்த்தைகள் கிறிஸ்துவை அறியாத மக்களிடம் செயல்புரியவேண்டும்.  அதற்கு நம்மைக்கொண்டு அடையாளங்கள் நடைபெறவேண்டும். 

நாம் கிறிஸ்தவர்களாக இருந்து பிரசங்கம்  செய்துதான் கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும் என்று அவசியமில்லை. நமது வாழ்க்கை கிறிஸ்துவை அறிவிக்கும் நிருபமாக மாறினாலே போதும்; மாறிடவேண்டியதும் அவசியம்.  அப்படி மாறும்போது நாம் போதிக்காமல் நமது செயல்களைக்கண்டே மற்றவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள், பிரமிக்கத்தக்க அற்புதங்களும்  நடைபெறும். அண்மையில் வடஇந்தியாவில்  மிஷனெரியாகப்  பணியாற்றும் ஒரு சகோதரனைச் சந்தித்தேன். அவரது பணியின்மூலமும் அவர்மூலம்  கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்கள்மூலமும் அங்கு நடைபெறும் பல அதிசயங்களைக் கூறினார். அவற்றைப்பார்த்து பலர் கிறிஸ்துவிடம் திரும்புகின்றனர் என்றார்.

அன்பானவர்களே, நமது வாழ்க்கையிலும் நமது இடங்களிலும் கிறிஸ்து இப்படி அவரது வசனத்தை உறுதிப்படுத்தும் அடையாளங்களைச் செய்யுமாறு ஜெபிப்போம். முதலில் நாமும் நமது வாழ்க்கையினையும் அதற்கேற்ப மாற்றிட நம்மை கிறிஸ்துவுக்கு  ஒப்புக்கொடும்போம். நம்மைக்கொண்டு அற்புதங்கள் நடைபெறும்போது கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் தானாகவே கிறிஸ்துவின் பக்கம் வருவார்கள். 

ஆதவன் 🌞 753 🌻 பிப்ருவரி 19,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது." ( எஸ்தர் 9 : 1 )

நமது தேவன், "காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்." ( தானியேல் 2 : 21 ) அவரது சித்தமில்லாமல் அவருக்கு எதிராகவும் அவரை விசுவாசிக்கும் மக்களுக்கு எதிராகவும் ஒருவரும் எதுவும் செய்துவிட முடியாது. 

யூதர்களை மண்ணில் இல்லாமல் அழித்து ஒழிக்க ஆமான் திட்டம்போட்டான். ஆனால் தேவனோ மொர்தெகாயின் அறிவுரையின்படி எஸ்தரை நடத்தி ஆமானது திட்டத்தை அவனுக்கும் அவனது ஆதரவு மக்களுக்கும் எதிராகத் திருப்பினார். அன்பானவர்களே, வேதாகமத்திலுள்ள எஸ்தர் புத்தகத்தை வாசித்துப்பார்த்தால் அவருக்கு உகந்தவர்களை தேவன் எப்படிப் பாதுகாக்கின்றார், தேவனது அளப்பரிய செயல்பாடு எப்படி தனது மக்களுக்கு ஆதரவாக இருக்கின்றது என்பதனை அறிந்துகொள்ளலாம். 

இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தந்திரமான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.  அவர்கள் தங்களை ஞானிகள் என்று எண்ணிக்கொண்டு தந்திரமான உபாயங்களைக் கைக்கொண்டு நமக்கு எதிராகச் செயல்படுகின்றார்கள். ஆனால் வேதம் சொல்கின்றது, " ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார் " ( 1 கொரிந்தியர் 3 : 19 )

மொர்தெகாயை தூக்கில் மாட்டிக் கொலை செய்ய முயன்ற ஆமானின் தந்திரத்தைத் தேவன் அவனுக்கு எதிராகவே மாற்றி, மொர்தெகாவைத் தூக்கில் ஏற்ற அவன் செய்த அதே தூக்குமரத்தில் ஆமானைத் தொங்கவைத்தார்.  

அன்பானவர்களே, மொர்தெகாவும் எஸ்தரும் உபவாசமிருந்து ஜெபித்து தங்களுக்கு எதிரான காரியத்தை முறியடித்தார்கள். இது ஏதோ அன்று நடந்த ஒரு சம்பவமல்ல, தேவனது வல்லமையின் வெளிப்பாடு. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவாயிருக்கின்ற நமது தேவன் இதே அற்புதத்தை இன்றும் செய்ய வல்லவாராயிருக்கின்றார். 

மேலும், நமது ஆவிக்குரிய வாழ்வில் எதிரிகளாக இருப்பவை நமது சரீர இச்சைகளும், ஆசைகளும் பாவ எண்ணங்களும். பாவம் நம்மை மேற்கொண்டு துஷ்ட ஆமானைப்போல நம்மை அழிக்கத் தயாராக இருக்கின்றது. யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது என்று இன்றைய வசனம் கூறுவதுபோல ஆவிக்குரிய யூதர்களாகிய நமது பாவ எண்ணங்கள், செயல்கள் போன்ற பகைவரை மேற்கொள்ளும்படி நமது வாழ்விலும் மாறுதலாய் முடியும்.  இதனை நாம் விசுவாசிக்கவேண்டும். எஸ்தரைபோலவும் மொர்தெகாவைப்போலவும் ஜெபிக்கவேண்டும். அப்போது நமது உலகப் பகைவர்களையும் ஆவிக்குரிய பகைஞர்களையும்  மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடியும். 

ஆதவன் 🌞 754 🌻 பிப்ருவரி 20,  2023 திங்கள்கிழமை 

"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 : 12 )

ஒருமுறை கடவுள் நம்பிக்கை இல்லாத எனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் மேன்மை பற்றிக் கூறியபோது அவர், "அது என்ன கடவுளுக்கு அவ்வளவு சுயநலமா? தன்னைத்தவிர வேறு  எவரையும் வணங்கக்கூடாது; தன்னால் மட்டுமே இரட்சிப்பு என்று எப்படி ஒருவர் கூற  முடியும்? அப்படிக் கூறுவதே அவர் ஒரு சுயநலம் பிடித்தவர் என்றுதானே  பொருள்" என்றார். 

நான் அவருக்குக் கூறினேன், "அது சுய நலம் அல்ல; இதுவே உண்மை. நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாம் விஞ்ஞானபூர்வமாக எல்லாவற்றையும் நிரூபிக்கவேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்.  அப்படியே ஏற்றுக்கொண்டாலும், நீங்கள் கூறும் விஞ்ஞான விதிகள் அனைத்தும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே இருக்கின்றன. உதாரணமாக தண்ணீரைப் பெறவேண்டுமென்றால் ஆக்சிஜனும் நைட்ரஜனும் குறிப்பிட்ட விகிதத்தில் (H2O) ஒனறு சேர்க்கப்படவேண்டும். இதுதான் விஞ்ஞானவிதி இதற்கு மாறுபட்டுச் செயல்பட்டுக்கொண்டு தண்ணீரைப் பெற முடியாது.

இதுபோலவே தேவன் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உபத்திரவத்தை பாதையில் நடத்தி, அவரை இரத்தம் சிந்தவைத்து நித்திய மீட்பினை உண்டுபண்ணியிருக்கின்றார். எனவே மீட்பு பெறவேண்டுமென்றால் அவரைத்தான் அண்டிக்கொள்ளவேண்டும். வேறு எவரும் மக்களது பாவங்களைப் போக்குவதற்கு தனது இரத்தத்தைச் சிந்தவில்லை. மேலும் நீங்கள் மீட்பு என்றால் என்ன என்பது தெரியாமல் பேசுகின்றிர்கள். எப்படி தண்ணீரைப் பெறுவதற்கு விஞ்ஞானம் விதி வைத்துள்ளதோ அதுபோல இரட்சிப்பு பெறுவதற்கும் விதி உள்ளது. 

முதலில் நமது மனச்சாட்சியில் நாம் செய்யும் குறிப்பிட்டத் தவறான  செயல் பாவம் என்று தெரியவேண்டும். மனசாட்சியே இல்லாதவன் இப்படித் தனது பாவத்தை உணரவும் முடியாது; அதற்காக வருந்தவும் முடியாது. "நான் என்ன பாவம் செய்தேன்?" என்று நீங்கள்  கூறிக்கொள்கின்றீர்கள். நான் கேட்கின்றேன், "பின் ஏன் உங்களுக்கு மன நிம்மதி இல்லை? ஏன் கடவுளோடு தொடர்பு இல்லை.? நீங்கள் உண்மையிலேயே பாவம் செய்யாதவர்கள் என்றால் கடவுள் தன்னை உங்களுக்கு வெளிப்படுத்தியிருப்பார் அல்லவா?  "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5 : 8 ) என்று வேதம் கூறுகின்றதே? என்றேன். 

"நான் கடவுளே இல்லை என்கிறேன், நீங்கள் அவரைத் தரிசிப்பார்கள் என்கிறீர்களே என்றார்." அவர். கடவுள் நம்பிக்கை உள்ள பலரும்கூட (கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் கூட) இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை விசுவாசிப்பதும் நம்புவதும் இல்லை. எனவேதான் எல்லா மதங்களும் ஒரே கடலைச் சேரும்  தண்ணீர்போல ஒரே கடவுளைச் சேர்கின்றன என்று கூறிக்கொண்டு இருக்கின்றனர். 

"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை." எனும் வசனத்தை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே இரட்சிப்பு அனுபவத்தைப் பெறமுடியும்; அவரை அறியமுடியும். "நான் என்ன பாவம் செய்தேன்" என்று எவரும் கூறிக்கொள்ளமுடியாது. 

"ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை." ( பிரசங்கி 7 : 20 )

ஆதவன் 🌞 755 🌻 பிப்ருவரி 21,  2023 செவ்வாய்க்கிழமை 

"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 55 : 8 )

மனிதர்கள் நமது அறிவு குறைவுள்ளது; காலம், இடம் இவைகளுக்குக் கட்டுப்பட்டது. நாம் நமது அறிவுக்கும் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்பவே சிந்திக்கின்றோம், முடிவுகள் எடுக்கின்றோம். ஆனால் சர்வ வல்லவரான தேவனோ அனைத்தையும் கடந்தவர். எனவே, அவரே நமக்கு ஆலோசனைகளையும்,  அறிவையும் வழியையும் காண்பிக்க  முடியும். மனிதர்கள் நாம் நமது ஆலோசனைகளை அவரிடம் திணிக்க முடியாது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள்,  "கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?" ( ரோமர் 11 : 34 ) என்கின்றார். 

நாம் நமது மனதில் பல ஆசைகளையும் எதிர்காலத்துக்குரிய திட்டங்களையும் வைத்திருக்கலாம். இந்த ஆசைகளும் திட்டங்களும் நமது மன விருப்பத்தின் அடிப்படையிலானவைகள். ஆனால், தேவ சித்தம் என்று ஒன்றும் உள்ளது என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் சிந்திப்பதில்லை.  நமது எண்ணங்களும் திட்டங்களும் நடைபெறாமல் போகும்போது பலரும் கடவுள்மேல் பழிபோடுகின்றார்கள். நமது எண்ணங்கள், செயல்கள்  தேவனுக்கு உகந்தனவா என்று பலரும் எண்ணிப் பார்ப்பதில்லை. 

ஆனால், நாம் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போதும் நமக்கு எதிராகச் சில பல காரியங்கள் நடக்குமானால் நாம் பயப்படத் தேவையில்லை. தேவன் நமக்காக  வேறு ஏதோ திட்டம் வைத்துள்ளார் என்று நாம் அந்த நல்ல நாளை எதிர்பார்த்துப் பொறுமையோடு காத்திருப்பதே நல்லது. காரணம், "அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 8 : 28 ) என்று வேத வசனம் கூறுகின்றது.

கல்லூரிப்  பேராசிரியராகவேண்டுமென்று ஆசைப்பட்டு முயன்று அந்த முயற்சியில் தோல்வியுற்ற ஒருவருக்கு வேறு நல்ல வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஒரு தனியார் நிறுவனத்தில் சிறிய வேலையில் சேர்ந்து மனக் கவலையோடு உண்மையாய்ப் பணியாற்றிவந்தார். அவர் தேவ அன்பை ருசித்தவர் ஆதலால் கர்த்தர் தனக்காக ஏதோ திட்டம் வைத்துள்ளார் என்பதில் உறுதியாக நம்பிக்கையாக இருந்து ஜெபித்துவந்தார். 

இவர் பணியாற்றிய அந்த சிறு நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஒரு பெரிய தொழிலதிபர் நண்பராக இருந்தார். அவர் ஒரு கல்லூரி ஆரபிக்க முயற்சி செய்து வந்தார். அவர் கல்லூரி ஆரபித்தபோது தேவ பக்தியுள்ள இந்த நபரைத் தனது புதிய கல்லூரிக்கு முதல்வராக்கினார்.  அந்தக் கல்லூரி விரைவில் பல்கலைக்கழகமாக உயர்வடைந்தது. இவரே அந்தப் பல்கலைக்கழத்தின் வேந்தரானார். ஆம் அன்பானவர்களே, வெறும் கல்லூரிப் பேராசிரியராக வேண்டுமென்று ஆசைப்பட்ட தனது அடியானை தேவன் பல்கலைக்கழக வேந்தராக்கி பல நூறு பேராசிரியர்கள் அவருக்கு கீழ் பணியாற்றுமளவுக்கு உயர்த்தினார். 

"பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது."( ஏசாயா 55 : 9 ) என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர். நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து பொறுமையாகக் காத்திருப்போம். ஏற்றகாலத்தில் கர்த்தர் நமக்கு ஏற்புடையவற்றைச் செய்வார். நாம் பரவசமடைவோம். 

ஆதவன் 🌞 756 🌻 பிப்ருவரி 22,  2023 புதன்கிழமை 

"சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." (1 தீமோத்தேயு 4:8) 

இந்த உலகத்தில் மனிதர்கள் தங்கள் உடலைப் பேணுவதற்குப் பல முயற்சிகளை எடுக்கின்றனர். மருத்துவர்களும் உடலைப் பேணுவதற்கு பல்வேறு உணவு முறைமைகளையும் உடற்பயிற்சிகளையும் செய்யும்படி அறிவுறுத்துகின்றனர். இதனைப் பலரும் தவறாமல் கடைபிடிக்கின்றனர். இவை தேவையே. ஏனெனில் நாம் நமது உடலைப் பேணவேண்டியது அவசியம். அது பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாயிருக்கின்றது. (1 கொரிந்தியர் 6:19). ஆனால் இப்படி உடலைப் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் அதனைவிட ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமைகொடுக்கவேண்டியது அவசியம். 

இங்கு பவுல் அடிகள் குறிப்பிடும் சரீர முயற்சி என்பது தேவனது அன்பினைப்பெறுவதற்கு என ஆலய பணிகளுக்காக அயராது ஓடியாடி உழைப்பதைக் குறிக்கின்றது. இந்த உழைப்பை ஒருவர் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டும் அல்லது பாவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டும்கூடச் செய்யலாம். இப்படி உடல் உழைப்பின்மூலம் தேவ அன்பினைப்பெறுவதற்கு முயல்வது அற்ப பிரயோஜனையுள்ளது. இவற்றைவிட நமது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். 

மேலும், சரீரமா ஆவியா என வரும்போது நாம் ஆவிக்குரிய காரியங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். காரணம், "சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." 

இந்த உலக வாழ்க்கையுடன் நாம் சரீரத்துடனான தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடுகின்றோம். ஆனால் அழிவில்லாத ஆத்துமா நித்திய நித்திய காலமாய் கர்த்தரோடு இருக்கப்போகின்றது. எனவே நாம் நமது ஆத்துமாவை அதற்குத் தகுதிப்படுத்தவேண்டியது அவசியம். 

அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதுடன் ஆவிக்குரிய காரியங்களுக்கும் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாம் நமது அதிகாலை நேரத்தை தேவனோடு செலவழிக்கும்போது அந்த நாளுக்குரிய கிருபையையும், தேவனோடு நெருங்கிய தொடர்பையும் நாம் உறுதிப்படுத்துகின்றோம். மேலும் ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தில் நாம் பல்வேறு பாவச் சூழ்நிலையில் விழக்கூடிய வாய்ப்புகள் வரக்கூடும். ஜெப வீரர்களாக நாம் இருக்கும்போது நாம் நமது ஆத்துமாவைக் காத்துக்கொள்கின்றோம். 

அன்பானவர்களே, நாம் பல்வேறு உடல் உழைப்புகள் மூலம் ஆலயங்களுக்கு உதவலாம்; அது நல்லதுதான். ஆனால் அதனைவிட நமது உடலைப் பாவமில்லாமல் பேணி நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை கட்டி எழுப்புவதே முக்கியம். 

நாம் இங்கு அறியவேண்டியது இரெண்டு காரியங்கள். ஒன்று ,  நமது  உடலைப் பேணவேண்டியது அவசியம் ; ஆனால் அதனைவிட ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். 

இரண்டாவது, நமது சரீர முயற்சி மூலம் தேவனுக்கு உகந்தவர்கள் ஆக முடியாது; அது அற்பமானது. முதலில் நமது சரீரத்தை பாவமில்லாமல் பரிசுத்தமாக காத்துத் தேவனுக்கு  உகந்ததாக்கிக்கொண்டு ஆவிக்குரிய காரியங்களிலும் ஈடுபடவேண்டும். 

ஆதவன் 🌞 757 🌻 பிப்ருவரி 23,  2023 வியாழக்கிழமை 

"யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்." (ரோமர் 13:7)

கிறிஸ்தவர்களாகிய நாம் விண்ணுலக வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டிருந்தாலும் இந்த உலகத்தில் வாழும் நாட்களில் நாம் வாழும் நாட்டின் அரசியல் சட்டத்துக்கும், இதர சட்டங்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆளுவோருக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும், சட்டங்களையும் அதிகாரிகளையும் ஆளுவோரையும் மதிக்கவேண்டும்.

சில கிறிஸ்தவ பிரிவினர் தங்கள் ஏதோ இன்னொரு உலகத்திலிருந்து வந்தவர்கள்போல பேசுவார்கள். நாம் கர்த்தர் ஒருவரையே கனம் பண்ணவேண்டும் என்பார்கள் ஆனால், தங்களுக்கு உலகினில் ஏதாவது காரியம் நிறைவேறவேண்டுமானால் அதிகாரிகளையும்  அரசியல்வாதிகளையும் தேடி ஓடுவார்கள்.

அப்போஸ்தலரான பவுல் அடிகள் உலக அதிகாரிகளும் தேவ ஊழியர்களாக இருக்கிறார்கள் என்கின்றார். அதாவது அவர்களது அதிகாரம் தேவனால் உண்டாயிருக்கிறது.  "எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது." (ரோமர் 13:1)

மேலும், "உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே." (ரோமர் 13:4)

இந்த உலக அரசாங்கங்கள் மக்களிடம் வரி வசூலிக்கின்றன. அந்த வரிப்பணம் அரசாங்கத்தின் இத்தகைய செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஆம், " இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே." (ரோமர் 13:6) 

"எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. நாம் கர்த்தருக்குப் பயப்பட்டு அவரைக் கனம் பண்ணவேண்டியது அவசியம். அது முக்கியமானது. ஆனால் உலக காரியங்களில் அதிகாரம்பெற்ற மனிதர்களுக்குப் பயப்படவேண்டியதும் அவர்களைக் கனம்பண்ணவேண்டியதும் அவசியம்.   

நமக்குப் பிடிக்காத அரசியல் கட்சியும் தலைவர்களும் நம்மை ஆளலாம். அவர்கள் துன்மார்க்கர்களாக இருக்கலாம். ஆனால் நாம் அதனைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. தேர்தலில் அவர்களுக்கு எதிராக வாக்களிக்கவேண்டுமே தவிர  உலக மனிதர்களைப்போல போராடுவது தேவ சித்தமல்ல. அவர்களுக்காக  ஜெபிக்கவே வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

ஆதவன் 🌞 758 🌻 பிப்ருவரி 24,  2023 வெள்ளிக்கிழமை 

"இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே." ( எபிரெயர் 3 : 15 )

தேவன் தனது  அடியார்களிடம் பல்வேறு வழிகளில் இடைபடுகின்றார், பேசுகின்றார். நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது, நல்ல ஒரு பிரசங்கத்தைக் கேட்கும்போது, அல்லது சில மனிதர்கள் பேசும் பேச்சுகள்மூலம் நம்மிடம் பேசுகின்றார். இதனைக் கேட்குமளவு நமது இருதயம் பக்குவப்படவேண்டும். இவற்றுக்கும் மேலான வழிகளிலும் தேவன் மனிதர்களிடம் பேசுகின்றார். கனவுகள்மூலம், தரிசனங்கள்மூலம், மனிதர்கள் பேசுவதுபோல தெளிவான குரல்மூலம் தேவன் பேசுகின்றார். 

இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் பேசும் தேவன்  பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தீர்க்கதரிசிகள்மூலம்  பல்வேறு வகைகளில் பேசினார்.   இதனை நாம், "பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்." ( எபிரெயர் 1 : 1, 2 ) என்று வாசிக்கின்றோம். 

ஆனால், இப்படி தேவன் பேசியும், மோசேமூலம் பல்வேறு அதிசயங்கள் மூலம் தன்னை வெளிப்படுத்தியும் தேவனது குரலை மக்கள் கேட்டுக் கீழ்ப்படியவில்லை. இதனையே சங்கீதம் 95 இல் நாம் வாசிக்கின்றோம். அதனையே இன்றைய தியானத்துக்குரிய வசனமாக நாம் எபிரெயர் நிருபத்தில் வாசிக்கின்றோம். நாற்பது வருடங்கள் தேவன் அவர்களை பல்வேறு முறைகளில் தண்டித்து திருத்த முயன்றும் அவர்கள் திருந்தவில்லை. அப்படிக் கீழ்படியாததினால் தேவ கோபத்தினால் அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர். 

"கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா?மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே." ( எபிரெயர் 3 : 16, 17 )

அன்பானவர்களே, இதனையே எபிரெய நிறுத்து ஆசிரியர் நமக்கு இன்று ஒரு எச்சரிக்கையாக எழுதுகின்றார், "கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப் படுத்தாதிருங்கள்"  என்று. எனவே நாம் தேவ குரலைக் கேட்கும் அனுபவமும் அதற்குக் கீழ்ப்படிந்து வாழும் தன்மையும் நமக்கு வேண்டும். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபையும் இரக்கமும் அன்பும் உள்ளவர்தான். ஆனால், நியாயத் தீர்ப்பு நாளில் அவர் உண்மையுள்ள நியாயாதிபதியாக வந்து நியாயம் தீர்ப்பார். அந்த நியாயத் தீர்ப்பில் அவருக்குமுன் தைரியமாக நிற்கத்தக்கதாக நமது வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள முயலுவோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. 

ஆதவன் 🌞 759🌻 பிப்ருவரி 25,  2023 சனிக்கிழமை 

"தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்கூடாத  காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 8 )

தேவன்மேல் நாம் அசைக்கமுடியாத விசுவாசமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். வெறுமனே "விசுவாசிக்கிறேன்" என்று கூறுவதல்ல, அவரால் எல்லாம் செய்ய முடியும் என்று விசுவாசிக்கவேண்டும். தேவன் அபிராமுக்குத் தரிசனமானபோது தன்னை சர்வ வல்லமையுள்ள தேவன் என்றே அறிமுகப்படுத்திக்கொண்டார். "ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு." ( ஆதியாகமம் 17 : 1 ) என்றார் என்று வாசிக்கின்றோம். 

சர்வ வல்லமை என்பது எதனையும் செய்யக்கூடிய வல்லமை. இல்லாதவைகளை இருக்கின்றவைகளாக  செய்யத்தக்க வல்லமை.  "அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்." (ரோமர் 4:17) என்று வாசிக்கின்றோம்.

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது மரித்த பலரை உயிரோடு எழுப்பினார். அவற்றில் உச்சக்கட்ட அதிசயம் மரித்து நான்கு நாட்களுக்குப்பின் கல்லறையில் சென்று மரித்த லாசரை உயிரோடு எழுப்பியது. அவரது சீடர்கள் மட்டுமல்ல, "அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்." ( யோவான் 12 : 17 )

ஆனால் யூதர்கள் பலரும் அதிகாரிகளும் இதனை நம்பவில்லை. நம்பிய சிலரும் இதற்குச் சாட்சி இல்லாமல் போகவேண்டும் என்று லாசருவையும் கொலைசெய்ய எண்ணினார்கள். ஆம், அவர்கள் மேசியா வருவார் என நம்பினார்கள் ஆனால் வந்த மேசியாவை அடையாளம் காணவில்லை. 

எனவே தான் உறுதியான விசுவாசம் நமக்குத் தேவைப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவை சர்வ வல்லவர் என்று விசுவாசிக்கும்போதுதான் அவரால் நம்மை பாவத்திலிருந்து விடுவிக்கமுடியுமென்று விசுவாசிக்கமுடியும். இல்லையானால் சில உலக மனிதர்கள் கூறுவதுபோல, "நாம் மனிதர்கள்தானே எனவே இந்தப் பாவங்கள் நமக்கு இயற்கையாகவே உள்ளவை; இவைகளை மேற்கொள்ளமுடியாது" என்று கூறிக்கொண்டு தொடர்ந்து குடியிலும், விபச்சாரத்தில், பொய்யிலும், பொறாமையிலும், வஞ்சகத்திலும் வாழ்ந்துகொண்டிருப்போம்.  

ஆம் அன்பானவர்களே, மரித்தவர்களை உயிரோடு எழுப்ப வல்ல தேவனுக்கு பாவத்தில் மரித்துப்போயிருக்கும் மனிதர்களையும் பரிசுத்தவான்களாக மாற்றமுடியும். பல புனிதர்களது வாழ்க்கை வரலாறுகள் இதற்குச் சாட்சிகூறுகின்றன. நமக்கு உண்மையிலேயே ஒரு தூய வாழ்வு வாழவேண்டுமெனும் எண்ணமும் ஆசையும் இருந்தால் தேவனிடம் நமது விருப்பதைத் தெரிவிக்கும்போது நமக்கு உதவுவார். 

அகிரிப்பா ராஜாவைநோக்கிக் கேட்ட அதே கேள்வியை அப்போஸ்தலரான பவுல் நம்மைப்பார்த்தும் கேட்கின்றார், "தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்கூடாத  காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?" 

ஆதவன் 🌞 760🌻 பிப்ருவரி 26,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது." ( யோவான் 1 : 4 )

இயேசு கிறிஸ்துவுக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பெயர் "மெய்யான ஒளி". கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னைக் குறித்துப் பேசும்போதும் இதனைத் தெளிவுபடுத்தி, "நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்" (யோவான் 8:12) என்று கூறினார். இதுபோல, "நானே, வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்றார்.   (யோவான் 14:6)

ஆம், அவருக்குள் இருந்த ஜீவன்தான் மனிதருக்கு ஒளியாக இருந்தது. 

மத்தேயு நற்செய்தியாளரும், "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது.." (மத்தேயு 4:15) என்று எழுதுகின்றார். ஆம், பாவ இருளில் மூழ்கி இருந்த மக்கள் இயேசு கிறிஸ்துவின் மூலம் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். நித்திய ஜீவனான அவரே மனிதர்களுக்கு ஒளியாக இருக்கின்றார். 

மனித இருதயங்கள் பாவ இருளில் மூழ்கி இருந்தன. இருளான அந்த இருதயங்களைப் பிரகாசிக்கச் செய்யவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனானார். ஆதியில் உலகத்தின்மேல் இருள் இருந்தது.(ஆதியாகமம் 1:2) தேவன் ஒளி உண்டாகுக என்று கூறவே ஒளி உண்டாயிற்று. இதுபோலவே மனித மனங்களிலுள்ள இருளைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நீக்குகின்றார். இதனை,  "இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." (2 கொரிந்தியர் 4:6) என்கின்றார் பவுல் அடிகள். 

இப்படி ஒளியாக வந்த இயேசு கிறிஸ்து குறிப்பிட்டச் சிலருக்கு மட்டும் ஒளி கொடுப்பவரல்ல. அவரால் எந்த மனிதனையும் பிரகாசிக்கச் செய்ய முடியும். "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 )

எல்லாவிதத்திலும் நம்மை அவர் ஒளிர்விக்க முடியும். அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை பல்வேறு பாவப் பழக்கவழக்கங்கள்,  துன்பங்கள், நோய்கள், கடன் தொல்லைகள், பிரச்சனைகளால் சிக்குண்டு தவிக்கக்கூடும். ஆனால், எந்த விதத் துன்பம் இருந்தாலும் மெய்யான ஒளியாகிய அவரிடம் சரணடைந்துகொள்ளுங்கள்.  "ஆண்டவரே, இருளான எனது வாழ்வை ஒளிமிக்கதாக மாற்றிட உம்மால் கூடும் என நான் நம்புகின்றேன். என்மேல் உமது ஒளிக்கதிர்களை வீசி என்னை ஒளிரவிடும் என்று அவரை அண்டிக்கொள்ளுங்கள். 

கிறிஸ்தவத்தில் நாம் பரிசுத்தர்களாக, புனிதர்களாக மதிக்கும் பலரும் பாவ இருளில் வாழ்ந்தவர்களே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒளியால் இன்று அவர்கள் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள்.  நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம். தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் நமது இருதயங்களிலே பிரகாசிக்கச்செய்வார். 

ஆதவன் 🌞 761🌻 பிப்ருவரி 27,  2023 திங்கள்கிழமை 

"என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன்."  ( சகரியா 1 : 3 )

மனிதர்கள் பலரும் கடவுள் தங்கள் விண்ணப்பிக்கும் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றித் தரவேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆலயங்களில் பெரிய விண்ணப்பப் பட்டியலுடன் ஜெபிக்கின்றனர். தேவன் தனது அளவில்லா கிருபையினால் மனிதர்களது விண்ணப்பங்களை நிறைவேற்றிக்கொடுக்கின்றார். ஆனால் இத்துடன் நாம் திருப்தி அடைவோமென்றால் நாம் தேவனை அறியாதக் குருடர்களாகவே இருப்போம். கிறிஸ்தவம் காட்டும்  ஆன்மீகத்துக்கும் இந்தவித ஜெபங்களுக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடும். 

நாம் பொதுவாக கடவுளை நம்மிடம் திருப்ப முயலுகின்றோம்  அனைத்து மத வழிபாடுகளும் இதனையே முயலுகின்றன. மனித அறிவால்  சிந்திக்கப்பட்ட இந்த வழிபாட்டு முறைமைகளும் இதனையே காட்டுகின்றன. இப்படிச் செய்தால் கடவுள் நம்மிடம் அன்பாய் இருப்பார் என எண்ணிக்கொண்டு சில காரியங்களை மனிதர்கள்  செய்கின்றனர்.  

மனிதர்கள்  மற்றவர்களது புகழ்ச்சியையும், பாராட்டையும் மாலை மரியாதையையும் எதிர்பார்த்து அவைகளால் மயங்குவார்கள். எனவே, தேவனும் இவற்றால் மயங்குவார் என எண்ணுவது மனித சிந்தனையே. மதச் சடங்குகள் இவற்றையே செய்கின்றன. ஆனால் நமது தேவன் இருதயத்தையே நோக்கிப்பார்க்கின்றார். எனவேதான் இயேசு கிறிஸ்து, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு - 5:8)  என்று கூறினார். 

அன்பானவர்களே, நாம் தேவனை நம்மிடம் திருப்ப உலக மனிதர்களைத் திருப்திப்படுத்த முயல்வதுபோன்ற முயற்சிகள் செய்வதைவிட நாம் அவரிடம் திரும்பவேண்டும். நமது இருதயம் அவருக்கு ஏற்புடையதாக மாறவேண்டியது  அவசியம். இருதயத்தை அழுக்கடைந்த சாக்கடையாக வைத்துக்கொண்டு நாம் செய்யும் வழிபாட்டு முயற்சிகள் அர்த்தமற்றவையே. "நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்." ( ஏசாயா 1 : 13 ) என்று ஏசாயா மூலம் கர்த்தர் கூறவில்லையா?

"உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்." ( ஏசாயா 1 : 16 ) என்கின்றார் பரிசுத்தர். 

நாம் உலக மனிதர்களைப்போல வழிபாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்துவிட்டு  நமது இருதயத்தை அவருக்கு ஏற்புடையதாக மாற்றிடாமல் இருப்போமானால் நமது வழிபாடுகள் அர்த்தமிழந்தவைகளாகவே இருக்கும். எனவேதான், "என்னிடத்தில் திரும்புங்கள் அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன்."  ( சகரியா 1 : 3 ) என்று  கூறுகின்றார் கர்த்தராகிய ஆண்டவர்.

நமது இருதயங்களை அவருக்கு ஏற்புடையதாக மாற்றுவோம்; அப்போது மட்டுமே நாம் அவரை அறிய முடியும்; அவரது வழிகாட்டுதலையும் அவரது உடனிருப்பையும் நமது வாழ்வில் உணர முடியும். 

ஆதவன் 🌞 762🌻 பிப்ருவரி 28,  2023 செவ்வாய்க்கிழமை 

"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் என்னை அதிகமாய்ச் சிந்திக்கவைத்தது. கிறிஸ்தவ பெற்றோருக்குப் பிறந்ததினாலும் ஆலயங்களுக்குச் செல்வதாலும், கிறிஸ்தவ சடங்குகளைப் பின்பற்றுவதாலும் நம்மை நாம் கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றோம். கிறிஸ்தவர்களில் தங்களை ஒருபடி மேலானவர்களாக எண்ணிக்கொள்ளும் ஆவிக்குரிய சபை எனும் சபைகளுக்குச் செல்பவர்கள்  தாங்களே மெய்யான கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர். குறிப்பாக பெந்தெகொஸ்தே சபை அனுதாபிகள் தங்கள் சபை மக்களைத்தவிர மற்றவர்களைக் கிறிஸ்தவர்கள் என்று ஏற்றுக்கொள்வதில்லை. 

ஆனால் இன்றைய வசனம் "கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல."  என்று அதிரடியாக அறிவிக்கின்றது. மத வழிபாடுகளைப் பின்பற்றுவதாலோ, ஆராதனைகளில் கலந்துகொள்வதாலோ, மூழ்கி ஞானஸ்நானம் எடுப்பதாலேயோ மட்டுமே ஒருவன் கிறிஸ்தவன் ஆகிவிடுவதில்லை. மாறாக, கிறிஸ்துவின் ஆவி ஒருவனில் செயல்படவேண்டும். அவனே கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவள். 

மனதில் நூறு சதவிகித உலக ஆசைகளை வைத்துக்கொண்டு அந்த ஆசைகளை நிறைவேற்றவேண்டி மன்றாடவே ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொண்டு, தான் செல்லும் ஆலய வழிபாடே மெய்யானது மற்றவர்களது வழிபாட்டு முறைகள் பொய்யானவை என்று தர்க்கம்செய்துகொண்டு வாழும் மனிதர்கள் சிந்திக்கவேண்டிய வசனம் இது. 

"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள்." என்று தெளிவாகக் கூறுகின்றது இன்றைய வசனம். அதாவது நமது உள்ளத்தில் கிறிஸ்துவின் ஆவி இருக்குமானால் நமது சிந்தனை, செயல்கள் ஆவிக்குரிய செயல்பாடாக மாறும். அதாவது உலக ஆசைகள் குறைத்து கிறிஸ்துவின்மேலுள்ள ஆசைகள் அதிகரிக்கும். கிறிஸ்து விரும்பும் செயல்பாடுகளை செய்யவேண்டும் எனும் ஆர்வம் நமக்குள் ஏற்படும். அப்படியானால்மட்டுமே நமக்குள் தேவனுடைய ஆவியானவர் இருக்கின்றார் என்று பொருள். 

அன்பானவர்களே, நாம் இந்த நிலைக்கு உடனடியாக வந்துவிடமுடியாது. ஆனால், இந்த நிலைக்கு வரவேண்டும் எனும்ஆர்வம் நமக்குள் இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது அதனைச் செயல்படுத்த கிறிஸ்து  உதவுவார்.  "பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும்" என்று கூறியுள்ளாரே? (2 கொரிந்தியர் 12:9) இந்த விஷயத்தில் நமது பலவீனத்தை நாம் ஒத்துக்கொண்டு அவரது துணையை  வேண்டும்போது தேவன் நமக்கு உதவிசெய்வார்.  

ஆண்டவரே, நான் மாம்சத்துட்பட்டவனாய் இராமல் ஆவிக்குட்பட்டவனாக வாழ விரும்புகின்றேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. எனக்கு உதவும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள்." எனும் வார்த்தைகள் என்னில் செயல்பட உதவிசெய்யும் என வேண்டுவோம். 

"கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." எனும் வார்த்தைகள் நம்மை பயமுறுத்தத் துவங்கிவிட்டால் நாம் இன்னும் கிறிஸ்தவர்கள் ஆகவில்லை என்று உணருவோம். அப்படி உணரும்போது நாம் ஆவிக்குரிய வாழ்வின் முதல்படியை அடைந்துவிட்டோம் என்று பொருள். 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்