"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"

ஆதவன் 🌞 722 🌻 ஜனவரி 19,  2023 வியாழக்கிழமை


"மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7 )

"வினை விதைத்தவன்வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்" என்பது தமிழ் பழமொழி. கோதுமையை விதைத்துவிட்டு நெல்லை அறுவடைசெய்ய முடியாது. எதனை விதைக்கின்றோமோ அதனையே நாம் அறுவடை செய்ய முடியும். உலக காரியங்களில் மட்டுமல்ல; ஆவிக்குரிய காரியங்களிலும் இதுவே உண்மை. 

இருபத்திநான்கு மணி நேரமும் உலகத்துக்காக உழைத்துவிட்டு அல்லது உலக காரியங்களையே தேடி ஓடிவிட்டு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 8 )

மாம்ச சிந்தை என்பது எப்போதுமே உலக காரியங்களை நினைத்துக்கொண்டிருப்பது, அவற்றை அடைந்திட என்று பணத்தையும் நேரத்தையும் உடல் உழைப்பையும் செலவழிப்பதைக் குறிக்கின்றது. நாம் உலகினில் வாழ்ந்திட பணம் தேவைதான். ஆனால் மனிதன் அப்பத்தினால் மட்டும் உயிர்வாழ்வதில்லை. தேவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர் வாழ்கின்றான் எனும் தேவனுடைய வார்த்தைகளை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் நாம் அமைதியான வாழ்க்கை வாழ தேவனுடைய ஆசீர்வாதம் தேவை. 

"மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்." ( ரோமர் 8 : 6 )

"மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக் கூடாமலும் இருக்கிறது." ( ரோமர் 8 : 7 )

"தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 8 )

தீமை செய்பவர்களுக்கான பதில் இந்த  உலகத்திலேயே சரிக்கட்டப்படுவதை நாம்  சிலவேளைகளில் நேரடியாகக் கண்டிருக்கலாம். இதனையே நம் முன்னோர்கள், "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" எனப் பழமொழியாகக் கூறியுள்ளனர். கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் இதனை இயற்கையின் நியதி என்பார்கள். நாம் அந்த இயற்கையினையே கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ள தேவாதி தேவனை ஆராதிப்பவர்கள்; அவரை அறிந்தவர்கள். எனவே நாம் அதிக எச்சரிகையுடன் வாழவேண்டியது அவசியம்.

நாம் ஆவிக்குரிய சிந்தை  உடையவர்களாக   வாழும்போது மட்டுமே ஆவிக்குரிய   ஆசீர்வாதங்களைப் பெற முடியும். இருபத்திநான்கு மணிநேரமும் உலக  ஆசையில் அலைந்துவிட்டு பின்னர்    ஆவிக்குரிய கூட்டங்களில்   கலந்துகொண்டு ஆவியானவரே என்னை அபிஷேகத்தால் நிரப்பும் எனக் கத்திக் கூப்பாடுபோடுவதில் அர்த்தமில்லை.       

ஆம், ஆவிக்குரிய காரியங்களுக்கே முன்னிரிமைகொடுத்துச் செயல்படுவோம். அப்போது நாம் உலக காரியங்களிலும் மேலான ஆசீர்வாதங்களைப் பெற முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712



Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்