DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, January 18, 2023

அவர்மேல் உறுதியான விசுவாசத்தோடு வாழ்வோம்

ஆதவன் 🌞 723 🌻 ஜனவரி 20,  2023 வெள்ளிக்கிழமை

"இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்." ( சங்கீதம் 48 : 14 )

இன்றைய வசனம் நமக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் தரும் தேவ வார்த்தைகளாகும். இன்று நமக்கு உலகினில் வரும் பிரச்சனைகள், துன்பங்கள் இவைகளைக்கண்டு நாம் மனம் தளராமல் இருக்க இந்த வசனம் நமக்கு உதவுகின்றது.  இந்த தேவன் என்றென்றுமுள்ள சதாகாலமும் நமது தேவன் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உலகினில் உள்ள மனிதர்கள், நமக்கு உதவும் தாய், தகப்பன் மற்றும் உறவுகள் இவர்களெல்லாம் கொஞ்சகாலம் நமக்கு உதவ முடியும். சில குறிப்பிட்ட காரியங்களில் மட்டும் நமக்கு உதவிட முடியும். ஆனால் நமது தேவன் உயிருள்ளவராக நம்மோடே இருப்பதால்  நமது மரண காலம்வரை நம்மை நடத்துபவராக இருக்கின்றார். 

இதனையே ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே அறிந்தேன்;"  ( எரேமியா 1 : 5 ) என்று. 

"என் கருவை உம்முடைய கண்கள் கண்டன; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது." ( சங்கீதம் 139 : 16 ) என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார்.  அதாவது நாம் உருவாகுமுன்பே நம்மைக் கண்டவர், நமது உறுப்புகளில் ஒன்றுகூட உருவாகுமுன்பே நம்மை அறிந்தவர் நம்மைக் கைவிடுவாரா?

அன்பானவர்களே, எனவே நாம் தைரியமாய் இருப்போம். நம்மைப் படைத்து நம்மைப் பல்வேறு உறுப்புகளால் அலங்கரித்தவர்  நம்மோடுகூட இருக்கின்றார். இறுதி மூச்சுவரை அவர் நம்மை நடத்திட வல்லவர். இந்த நம்பிக்கை நம்மிடம் இல்லாவிட்டால் நாம் இறுதிவரை வாழ்க்கையோடு போராடிக்கொண்டேதான் இருப்போம்.

இஸ்ரவேல் மக்களை வழிநடத்திய தேவன் அவர்களோடு தான் வருவதாக வாக்களித்து, தான் அவர்களோடு வருவதைப் பல்வேறு தெளிவான முறைமைகளில்  வெளிப்படுத்தியும் இஸ்ரவேல் மக்கள் அவிசுவாசம்கொண்டு, "இந்தப் பாலை நிலத்தில் நம்மை அழித்துப்போடவா எங்களை எகிப்திலிருந்து வரவழைத்தீர்" என முறுமுறுத்தனர். ஆனால் அவர்கள் கானானைக் காணும்முன்பே அழிந்துபோயினர். 

நாம் அப்படி அழிந்துபோகாமலிருக்க அவர்மேல் உறுதியான விசுவாசத்தோடு வாழ்வோம். இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் என்று அறிக்கையிடுவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: