நமக்காகச் சிலுவையில் அறையுண்டது ஊழியனா, கிறிஸ்துவா?

ஆதவன் 🌞 726 🌻 ஜனவரி 23,  2023 திங்கள்கிழமை





உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்?  (1 கொரிந்தியர் 1:11,12) 

கிறிஸ்துவைவிட்டு ஊழியர்களைத் தேடி  ஓடும் மக்கள் கூட்டம் இன்று பெருகிவிட்டது. சினிமா நடிகர்களுக்கு  ரசிகர்கள் பட்டாளம் இருப்பதுபோல இன்று கிறிஸ்தவ ஊழியர்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் பெருகிவிட்டது. இது இன்று நடப்பதல்ல; கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்திலேயே இருந்துள்ளது. இதனையே அப்போஸ்தலனாகிய பவுல் கண்டிக்கின்றார். 

தனிப்பட்ட ஊழியர்களை முன்னுதாரணமாகக் கொண்டு வாழும்போது நாம் கிறிஸ்துவைவிட்டு விலகிவிடுகின்றோம். ஊழியரின் தவறான போதனைகளை அங்கீகரிக்கின்றோம் என்று பொருள்.  ஊழியர்கள் என்பவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட நட்சத்திர அந்தஸ்து கொடுப்பது தவறு. ஊழியர்களுக்கு மரியாதையும் கனமும் கொடுக்கவேண்டுமேத் தவிர அவர்களை அரசியல் தலைவனைப்போலோ, சினிமா நடிகனைப்போலோ பின்பற்றவேண்டிய அவசியமில்லை. 

கிறிஸ்துவின் ஒளியை உள்வாங்கி நற்செய்தி அறிவிப்பவர்களே ஊழியர்கள். ஆனால் தனிப்பட்ட ஊழியர்களை நாம் சார்ந்துகொள்ளும்போது கிறிஸ்துவின் நற்செய்தியை அவர்கள் தவறாகவோ திரித்தோ பிரசங்கித்தாலும் கைதட்டி ரசிக்கும் ரசிகர்கள் ஆகிவிடுகின்றோம். 

"நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்." என்கிறார் பவுல் அடிகள். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் ஊழியர்களாது பெயர்களை எடுத்துவிட்டு அந்த இடத்தில் உங்களது தற்போதைய அபிமான ஊழியரின் பெயரைப் போட்டு இந்த வசனத்தைச்சொல்லிப்பாருங்கள்.

இந்த வசனத்தின் இறுதியில் பவுல் கேட்கின்றார்:- "பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? " என்று. அன்பானவர்களே, நீங்கள் தேடி ஓடும் இந்த குறிப்பிட்ட ஊழியனா உகளுக்காகச் சிலுவையில் அறையப்பட்டார்? சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே நோக்கிப்பார்க்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

எவ்வளவு பிரபல பிரசங்கியாக இருந்தாலும், எவ்வளவு ஆழமான இறையியல் கட்டுரைகளை ஒருவர் எழுதினாலும் நாம் அவரது கருத்தை நமக்காக எடுத்துக்கொள்ள வேண்டுமேதவிர அவரை சினிமா நடிகர் போலக் கருதி அவர்  பின்னால் ஓடுபவர்களாக  இருப்போமானால் நாம் கிறிஸ்துவைவிட்டு விலகி விக்கிரக ஆராதனை செய்கின்றோம் என்று பொருள்.  

நமக்காகச்  சிலுவையில் அறையுண்டது ஊழியனா, கிறிஸ்துவா?
  
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்