பிற வழிபாடுகளுக்கும் கர்த்தராகிய இயேசுவின் ஜீவ வழியில் நடப்பதற்கும் உள்ள வித்தியாசம்

ஆதவன் 🌞 707 🌻 ஜனவரி 04,  2023 புதன்கிழமை

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்". (1 யோவான் 5:18)

கிறிஸ்து இயேசுவினால் உண்டாகும் மீட்பு அனுபவம் பற்றி இன்றைய வசனம் கூறுகின்றது.  இயேசு கிறிஸ்துவினால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரை அறியும்போது நாம் தேவனால் பிறந்தவர்கள் ஆகின்றோம். இப்படி தேவனால் பிறந்தவன் பாவம் செய்வதில்லை. "ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்."  (1 யோவான் 3:9) இப்படி தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கின்றான். பொல்லாங்கனாகிய பிசாசு அவனைத் தொடமாட்டான். 

பிற தெய்வங்களை வழிபடுவதற்கும், கர்த்தராகிய இயேசுவின் ஜீவ வழியில் நடப்பதற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இதுதான். கிறிஸ்தவம் வெற்று வழிபாடுகளையும் ஒருசில சடங்குகளையும் கடைபிடிப்பதல்ல.  அது உள்ளான மனிதனில் கிறிஸ்துவினால் ஏற்படும் மாற்றத்தை ஏற்படுத்துவது.  அது உலக ஆசீர்வாதங்களை மட்டுமல்ல,  ஆவிக்குரிய ஆசீர்வாதமான பாவத்திலிருந்து விடுதலையையும் அதன் நிறைவான நித்திய ஜீவனையும் நமக்கு அளிக்கின்றது. 

அன்பானவர்களே, நாம் இந்த அனுபவத்தைப் பெறுவதற்கே அழைக்கப்பட்டுள்ளோம். குறிப்பிட்ட மந்திரங்களை ஜெபிப்பதல்ல, வழிபாடுகளை பக்தியுடன் செய்வதல்ல; கிறிஸ்து நமக்குள் இருபத்தையம் அவர் நம்மோடு பேசி வழிநடத்துவதையும் அறிவதே கிறிஸ்தவம். நாம் பாவங்களிலிருந்து முற்றிலும் ஜெயம்பெற அவர் நமக்கு உதவுகின்றார். அதற்கு நாமும் நமது நிலைமைக்கேற்ப ஒத்துழைக்கவேண்டும். எனவேதான் அப்போஸ்தலரான் பவுல்,  "நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்." (கொலோசெயர் 1:29) என்கின்றார். ஆம், அவர் நமக்குள்ளே வல்லமையாய்ச் செயற்படுகின்றார்.

மேலும்,  இப்படிக் கிறிஸ்துவுக்கேற்ப வாழும்போது நாம் சாத்தானின் வல்லமைகளுக்கு நீங்கி விடுதலை அடைகின்றோம்.  எனவே, நாம் இந்த அனுபவங்களைப்  பெறவேண்டியது அவசியமாயிருக்கின்றது. அதற்கு முதலில் நமக்கு இதுகுறித்த ஆர்வம் இருக்கவேண்டும். 

தேவன் நமது ஆழ்மன எண்ணங்கள் ஏக்கங்கள் இவற்றை நன்கு அறிவார். உண்மையாகவே நாம் அவரை அன்பு செய்வோமெனில் வெற்றுச் சடங்குகளை விட்டு அவரை அறியவேண்டும் எனும் எண்ணத்தோடு அவரைத் தேடுவோம். 

"அன்பான ஆண்டவரே, நான் உம்மை அறிந்து உமக்கேற்ற வாழ்க்கை வாழவும் உம்மால் வழிநடத்தப்படும் உன்னத அனுபவங்களையும் பெற்று மகிழ விரும்புகின்றேன். இதற்குத் தடையாக இருக்கும் எனது பாவங்களை மன்னியும்.  மறுபடி பிறக்கும் அனுபவத்தை எனக்குத் தாரும். நான் வெற்று ஆராதனைக் கிறிஸ்தவனாக வாழ விரும்பவில்லை. உம்மை அறிந்து உம்மோடு நடக்கும் உயிருள்ள மேலான ஆவிக்குரிய வாழ்வு வாழ விரும்புகின்றேன். அத்தகைய வாழ்வு வாழ என்னை முற்றிலும் ஒப்புக்கொடுக்கின்றேன். " என வேண்டுவோம்.

தேவனால் பிறந்த மேலான அனுபவத்தையும் பொல்லாங்கனுக்கு நீங்கலாகி முழு விடுதலையும் பெறுவோம்.

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712


Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்