வாழ்க்கையாலும் பிறருக்கு உதவுவதன்மூலமும்

ஆதவன் 🌞 717 🌻 ஜனவரி 14,  2023 சனிக்கிழமை

"இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்." ( யோவான் 6 : 9 )

இயேசு கிறிஸ்து ஒருமுறை மக்களுக்கு வனாந்தரமான இடத்தில போதனை செய்துகொண்டிருந்தார். மிகுதியான மக்கள்கூட்டம் சேர்ந்துவிட்டது. பொழுதும் அதிகநேரம் ஆகிவிட்டது. அந்த மக்களை அப்படியே அனுப்பிவிட இயேசு கிறிஸ்து விரும்பவில்லை. அவர்களது பசியை ஆற்றவேண்டும் என்று விரும்பினார். எனவே தனது சீடர்களில் ஒருவராகிய பிலிப்புவிடம், " இவர்கள் சாப்பிட அப்பங்களை நாம் எங்கே வாங்கலாம்? என்று கேட்டார். அப்போது பிலிப்பு, "ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் இருநூறு பணத்துக்கு அப்பம் வாங்கினாலும் போதாதே?" என்று  கைவிரித்தார். 

அப்போது இன்னொரு சீடனான அந்திரேயா என்பவர் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறினார்.  இயேசு கிறிஸ்து அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வாங்கி ஆசீர்வதித்து அவைகளை வர்த்திக்கப்பண்ணி ஐயாயிரம்பேருக்கு உணவளித்தார். 

இன்று நம்மிடம் இருக்கும் திறமைகளும், பணமும் கொஞ்சமாக இருக்கலாம். இவற்றைக்கொண்டு நாம் தேவனுக்கென்று  என்னதான் பெரிதாகச் செய்துவிடமுடியும் என நாம் எண்ணலாம். ஆனால், தேவனது கரம் நம்மோடு இருக்கும்போது எந்தச் சிறியச் செயலாக இருந்தாலும் அது மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்டுவரும். அந்தச் சிறியச் செயல் பல ஆயிரம் மக்களது ஆவிக்குரியப் பசியைத் தணிக்கமுடியும்.  

மேலும், இன்றைய வசனம் கூறப்பட்ட சூழ்நிலையையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். இயேசு கிறிஸ்து மக்களுக்குப் போதனைச் செய்தபின்பு அவர்களது பசியைத் தணித்தார். இன்று நாமும் வெறும் சுவிசேஷ அறிவிப்பு செய்துவிட்டு மக்களது உலகுசார்ந்த தேவைகளைக் கவனிக்காமல் இருந்தால் அதில் அர்த்தமிருக்காது. நம்மால் இயன்றவரை மக்களது உலகத் தேவைகளைச் சந்திக்க முயலவேண்டும்.  
  
"ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?" ( யாக்கோபு 2 : 15, 16 ) என்கிறார் அப்போஸ்தலரான  யாக்கோபு.

நாம் நமது வார்த்தையால் கிறிஸ்துவை அறிவிப்பதோடு வாழ்க்கையாலும் பிறருக்கு உதவுவதன்மூலமும் கிறிஸ்துவை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். பெரிய அளவில் இவற்றைச் செய்ய இயலாவிட்டாலும் இரண்டு மீன்கள் ஐந்து அப்பங்களைப்போல சிறிய அளவில் செய்தாலும் தேவன் அதனை மிகப்பெரிய ஆசீர்வாதமாக மாற்றி பலருக்குப் பயனுள்ளதாக்குவார்.   இத்தனை ஜனங்களுக்கு நாம் செய்யும் உதவி எம்மாத்திரம் எனத் தயங்கிடாமல் நமது பணியைத் தொடர்ந்து செய்வோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்