நித்திய வழியிலே என்னை நடத்தும்

ஆதவன் 🌞 712 🌻 ஜனவரி 09,  2023 திங்கள்கிழமை

"தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்." ( சங்கீதம் 139 : 23, 24 )

தன்னை முற்றிலும் தேவ வழி நடத்துதலுக்கு ஒப்புக்கொடுத்து தாவீது பாடிய இந்தச் சங்கீதம் நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியான ஜெபத்தைக் கற்றுத் தருகின்றது. 

நாம் மனிதர்கள்;  பலவீனமானவர்கள். நம்மால் நமது குறைகளைக்கூட அறிந்திட முடியாது. எனவேதான் பலரும் தாங்கள் எந்தப் பாவமும் செய்யவில்லை என எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் நம்மில் தேவனது பரிசுத்த ஆவியானவர் வரும்போதுதான் நமக்கு நமது பாவங்கள் தெரியவரும். இதுவரை நாம் பாவம் என்று எண்ணிடாத பல காரியங்கள் தேவனுடைய பார்வையில் பாவமாக இருப்பதை  நாம் உணர்ந்துகொள்ள முடியும்.    

நமது இருதயச் சிந்தனைகளை தேவன் அறிவார். எனவே, வெளிப்படையாக நாம்  பாவம் செய்யாதவர்களாக இருந்தாலும் சிந்தனையில் பாவியாக இருக்கமுடியும். சமுதாயத்துக்குப் பயந்தும்,  வாய்ப்புக் கிடைக்காததாலும் சிலர் பெரிய பாவம் செய்யாமல் வாழ்கின்றனர். ஆனால் உள்ளான மனதில் பாவ அழுக்கு மனிதனுக்குள் இருந்தாலே தேவனது பார்வையில் அது பாவம்தான். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று." ( மத்தேயு 5 : 28 ) என்று. 

இன்றைய தியான வசனத்தில் தாவீது கூறுகின்றார், "வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்." என்று. நாமும் இப்படி ஜெபிக்கவேண்டியது அவசியம்.  இப்படி நம்மை தேவ வழியில் நடத்துவதற்குத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு பரிசுத்த ஆவியானவரை வாக்களித்து அருளியுள்ளார். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 )

அம்  சத்திய ஆவியான பரிசுத்த ஆவியானவர் ஒருவரை அலறி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அருளப்படவில்லை. அவர் நம்மைச் சகல சத்தியத்துக்குள்ளும் வழிநடத்தும்படி அருளப்பட்டுள்ளார்.  இன்று ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளேன் என்று கூறிக்கொள்வோர் எண்ணிப்பார்க்கவேண்டிய சத்தியம் இது. 

பாவத்தைக்குறித்த அருவெறுப்பு உங்கள் உள்ளத்தில் இருக்கின்றதா? 

பாவத்தை வெறுத்து ஒதுக்குகின்றிர்களா ?

இன்னும் நான் பரிசுத்தமாகவேண்டும் எனும் எண்ணம் உங்களுக்குள் இருக்கின்றதா? 

தேவ சமூகத்தில் அதிகநேரம் செலவிட உங்களுக்குள் ஆர்வமிருக்கின்றதா?

இந்தக் கேள்விகளுக்கு ஆம் என்று பதில் இருக்குமேயானால் நம்மிடம் பரிசுத்த ஆவியானவர் இருந்து செயல்படுகின்றார் என்று பொருள்.  இல்லையானால் நாம் வெற்றுக்கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று பொருள். 

தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். எனத் தினம்தோறும் வேண்டுதல் செய்வோம்.  அவரே நம்மை நீதியின் பாதையில் நடத்துவார். 

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்