DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Friday, January 27, 2023

மகிழ்ச்சியுடன் அடுத்து வருவதை எதிர்பார்த்திருப்போம்.

ஆதவன் 🌞 733 🌻 ஜனவரி 30,  2023 திங்கள்கிழமை 

"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 8 : 28 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை நாம் வாசிக்கும்போது அது, "தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மையை நடக்கிறது" என்று கூறாமல் "நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது" என்று கூறுவதைக் கவனிக்கலாம். 

தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கிறது என்று நாம் எண்ணிவிடக் கூடாது. நமது வாழ்க்கையில் நன்மையையும் தீமையும் நடக்கலாம். ஆனால் நாம் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களாக இருந்தால் நமக்கு நடக்கும் தீமையையும் அவர் நன்மைக்கேதுவாக மாற்றிடுவார். 

இதற்கு யோசேப்பின் வாழ்க்கை நமக்குச்  சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது. தேவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் யோசேப்பின் இளமைப்பருவம் துன்பத்திலேயே தொடர்ந்தது. தாயை இழந்து, சகோதரர்களால் பகைக்கப்பட்டு, சகோதரர்களே அவனை இஸ்மவேலருக்கு 20 வெள்ளிக்காசுக்கு விற்றுவிட்ட பின்பும் அவனது துன்பம் முடிவுக்கு வரவில்லை.  எகிப்தில் அநியாய குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைவாழ்க்கை வாழக்கூடிய அவல நிலைமை. 

ஆனால் தேவன் அவனோடே இருந்தார். அவனது அனைத்துத் துன்பங்களையும் நன்மையாக மாற்றினார். ஆம், யோசேப்பின் துன்பம் அவனை எகிப்தின் பிரதம மந்திரியாக மாற்றிட தேவன் அனுமதித்தத்  துன்பம்; அதற்கானத திட்டம்.  "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்". ( ஆதியாகமம் 50 : 20 ) என யோசேப்பு மகிழ்ச்சியுடன் கூறுகின்றான். 

அன்பானவர்களே, நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போதும் நமக்குத் துன்பங்கள் ஏற்படுகின்றதென்றால் தேவன் நமக்கு வேறு திட்டம் வைத்திருக்கின்றார்; நமது துன்பங்களை நன்மைக்கேதுவாக மாற்றுவார் என்று பொருள். மேலும் நாம் மேலும் மேலும் அவரை அறிந்துகொள்ளவும் தேவன் நமது துன்பங்களை  நன்மையாக மாற்றி அவரை அறியச் செய்கின்றார்.  எனவேதான் சங்கீத ஆசிரியர், "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 ) என்கின்றார். 

எனவே, நாம் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது ஏற்படும் துன்பங்களைக்கண்டு அஞ்சிடாமல், கலங்கிடாமல்  அதற்கு அப்பால் தேவன் நமக்கு வைத்திருக்கும் நன்மைகளை எண்ணி மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருப்போம். ஆம்,   தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று கூறப்பட்டுள்ள தேவ வார்த்தைகள் மெய்யானவைகள். மகிழ்ச்சியுடன் அடுத்து வருவதை எதிர்பார்த்திருப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: