DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, January 29, 2023

புரியாத சத்தியத்தைப் புரியாமல் "ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறுவது நாம் பொய்யர்கள் என்பதையே காட்டும்.

ஆதவன் 🌞 734 🌻 ஜனவரி 31,  2023 செவ்வாய்க்கிழமை 

"சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 1 : 18 )

சிலுவையைப்பற்றிய உபதேசம் என்பது என்ன?  "கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காகவே பாடுபட்டு சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டு இரத்தம்சிந்தி அதன்மூலம் நித்திய இரட்சிப்பை ஏற்படுத்தினார் என்பதும், இந்தச் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிப்பு அனுபவத்தைப் பெறுவோம்" என்பதும்தான்.

இது சாதாரண மனித அறிவினால் புரிந்துகொள்ளமுடியாததும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமாகும். காரணம் மனித ஜென்ம சுபாவம் ஆவிக்குரிய சத்தியங்களுக்கு முரணாகவே எப்போதும் இருக்கின்றது. இதனால்தான் பவுல் அடிகள், "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." ( 1 கொரிந்தியர் 2 : 14 ) என்று கூறுகின்றார். ஆம், கெட்டுப்போகின்ற உலக மனிதர்களுக்கு இது பைத்தியக்கார உபதேசம்போலவே இருக்கும்.

1993 ஆம் ஆண்டுக்குமுன் கம்யூனிச சித்தாந்தத்துக்கு அடிமையாகியிருந்தபோது நானும் இப்படியே எண்ணிக்கொண்டிருந்தேன். இயேசு கிறிஸ்து எனும் ஒரு மனிதன் இறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆன்பின்பும் அதுபற்றியே முட்டாள்தனமாகப் பேசிப் பேசி கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டேன். ஆனால் வெறுப்போடு அல்ல; புரியாமல் நான் அப்படி எண்ணியதால் இரக்கம் பெற்றேன். கிறிஸ்துவை அறிந்துகொண்டேன். 

 இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் மரணமடைந்த ஒருவரது இரத்தம் நமது பாவங்களை எப்படி மன்னிக்க முடியுமென்று மனித அறிவின் மூலம் ஆராய்ச்சி செய்தால் நாம் கெட்டுபோனவர்களும் பைத்தியமானவர்களுமாகவே இருப்போம். 

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும்கூட சிலுவையின் சத்தியங்களை வெறுமனே வாயினால் கிளிப்பிள்ளைபோலக் கூறிக்கொள்கிறார்களே தவிர அனுபவபூர்வமாக இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறுவதற்கு முயலுவதில்லை. ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் படித்தவற்றையும் பிரசங்கத்தில் கேட்பதைவைத்தும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்பு உண்டு என்று கூறிக்கொள்கின்றனர். 

புரியாத சத்தியத்தைப் புரியாமல் "ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறுவது நாம் பொய்யர்கள் என்பதையே காட்டும். ஆண்டவரே எனக்கு உண்மையைப் புரியவைக்க கிருபைசெய்யும் என வேண்டும்போது மேலான சத்தியங்களை அறிந்துகொள்வோம். 

தேவனது வல்லமை மகத்தானது. ஆம், சுவிசேஷ சத்தியங்களை பைத்தியக்கார உபதேசம் எனக் கூறிக்கொண்டிருந்த பலர் அதிசயப்படத்தக்க விதத்தில் பிரசங்கங்களைக் கேட்டு இரட்சிப்பு அனுபவம் பெற்றுள்ளனர். பல சாட்சிகள் இதற்கு உண்டு. சுவிசேஷ கூட்டங்களைக் கேலி செய்தவர்கள்,  கூட்டங்கள் நடத்தவிடாமல் தடைசெய்தவர்கள், வேதாகமத்தை தீயிட்டு எரித்தவர்கள் பலர் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்வதை நாம் இன்றும் காண்கின்றோம்.  

இதனையே, "தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." ( 1 கொரிந்தியர் 1 : 21 ) என்று பவுல் அடிகள் கூறுகின்றார். சுய லாபம் தேடும் கடின மனதுள்ள துன்மார்க்கருக்கு சிலுவையைப்பற்றிய உபதேசம் பைத்தியமாயிருக்கிறது, ஆனால் அதனை ஏற்றுக்கொண்டு வாழும் இரட்சிக்கப்பட்டிருக்கின்ற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: