அரசாங்கத்திடம் லஞ்சம் கொடுத்துக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதவன் 🌞 725 🌻 ஜனவரி 22,  2023 ஞாயிற்றுக்கிழமை

"இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்." ( எஸ்றா 7 : 6 )

வேத அறிஞனான எஸ்றா  எனும் தேவ மனிதனைக் குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. தேவனுடைய ஆலயத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்ட அவரது சிறப்புகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன. 

முதலாவது, "எஸ்றா தேறின வேதபாரகனாயிருந்தான்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தேறின வேத அறிஞராக அவர் இருந்தார். மட்டுமல்ல, அவர் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கவில்லை. மாறாக, "கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்." ( எஸ்றா 7 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. 

எஸ்றா அப்படி இருந்ததால், தேவனாகிய கர்த்தரின் கரம் அவர் மேல் இருந்தது. எனவே, "அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்." 

வேத அறிஞரான எஸ்றா தனது சுய லாபத்துக்காக அரசாங்கத்திடம் உதவி கேட்கவில்லை; மாறாக தேவனுடைய பழுதுபட்ட ஆலயத்தைக் கட்டி எழுப்ப உதவிகோரினார். 

ஆனால் தங்களை வேத அறிஞர்கள் என்றும் கிறிஸ்தவத்தின் பிரதிநிதிகள் என்றும் கூறிக்கொள்ளும் இன்றைய பிரபல ஊழியர்களை நினைத்துப்பாருங்கள். இவர்கள் தங்களது பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்குத் தேவையான உதவிகளுக்கு அரசாங்கத்திடம் லஞ்சம் கொடுத்துக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.  தாங்கள்  வருமானவரி மோசடியிலிருந்து விடுபடவும், தங்கள்மேலுள்ள கோர்ட்கேஸ் தள்ளுபடியாகவும் அரசாங்க உதவியை நாடித் திரிகிறார்கள். 

தேவனாகிய கர்த்தருடைய கரம் அவர்கள்மேல் இல்லாதபடியினால்,  அதிகாரத்திலுள்ளவர்கள்  கேட்டவைகளையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்துத் தங்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் சாதாரண மக்கள் இந்த அறிவு இல்லாமலிருப்பதால் இந்தப் பிரபலங்களை கடவுளின் பிரதிநிதிகளாக நம்பி இவர்கள்பினால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எஸ்றாவைப்போல உண்மையும் உத்தமுமான ஊழியர்கள் இன்றும் உண்டு. அவர்களை நாம்தான் தேடிக் கண்டுகொள்ளவேண்டும். ஆனால் அப்படித் தேடி அவர்களைகூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லையானால் அத்தகைய  விசுவாசி எப்படி தேவனைக் கண்டுகொள்ளமுடியும்?  

பரிதாபத்துக்குரிய நிலையில் கிறிஸ்தவ விசுவாசிகள்! பரிசுத்த ஆவியானவர் நமது மனக்கண்களைத் திறந்திட வேண்டுதல்செய்வோம்; உண்மையின் வெளிச்சத்தில் தேவனைத் தேடுவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்