மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், தூஷணங்களால் கலங்காமலும் இருப்போம்.

ஆதவன் 🌞 708 🌻 ஜனவரி 05,  2023 வியாழக்கிழமை

"நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்." (ஏசாயா 51:7)

இன்றைய தியானத்துக்குரிய வசனம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும் மக்களுக்கு கூறப்பட்டுள்ள ஆறுதல் வார்த்தைகள். நமது நம்பிக்கை வீண்போகாது, ஏற்றவேளையில் தேவன் நமக்குத்  தனது ஒத்தாசையினை அளிப்பார் எனும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்.  

இந்த உலகத்தில் துன்பங்களும், துயரங்களும், பிரச்சனைகளும் எல்லோருக்கும் பொதுவானவை. ஒருவர் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்தாலும் துன்பங்கள் உண்டு. "எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்" (பிரசங்கி 9:2) இயேசு கிறிஸ்துவும், "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" என்றுதான் கூறினார். ஆனாலும் அவர் துணிவுடன் நின்று உலகை ஜெயித்ததுபோல நாமும் ஜெயிக்கவேண்டும். 

சில வேளைகளில் பல்வேறு துன்பங்களோடு மனிதர்கள் நம்மைக்குறித்துப் பேசும் நிந்தையான பேச்சுக்களையும் நாம் எதிர்கொள்ளவேண்டியது இருக்கும். கிறிஸ்துவுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்து நாம் துன்பப்படும்போது, "என்ன இவன் பெரிய பரிசுத்தவான்போல பேசினான், கர்த்தர் கர்த்தர் என்று கூறிக்கொண்டிருந்தான்....இவனைவிட நாம் நன்றாகத்தானே இருக்கிறோம்?"  என்று பிறர் கூறலாம், எண்ணலாம். ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது அந்த அனுபவம் இல்லாத நமது உறவினர்களே இப்படிப் பேசுவார்கள். இது நாம் அனுபவிக்கும் துன்பங்களை மேலும் அதிகரிக்கச்செய்யும். 

இந்த நிலையில் இருக்கும் மக்களுக்கு தேவன் அளிக்கும் ஆறுதல் வார்த்தைகள், "நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்."

அதாவது, மனிதர்கள் நம்மைக்குறித்துப் பேசும் நிந்தையான பேச்சுக்களை நினைத்து நாம் பயப்படக்கூடாது, கலக்கமடையக்கூடாது. 

திருவிழா காலங்களில் பலூன் விற்பவர்கள் சாதாரண காற்றடைத்த பலூனோடு சில வேளைகளில் ஹீலியம் வாயு அடைத்த பலூனையும் விற்பனைச் செய்வார்கள். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்றுபோலவே தெரியும். ஆனால் கட்டிவைக்கப்பட்ட நூலை நாம் அறுத்துவிடுவோமானால் சாதாரண காற்றடைத்த பலூன் தரையில் கிடக்கும். ஹீலியம் வாயு அடைத்த பலூனோ உயர உயர வானத்தில் எழும்பிச் சென்று எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்.   

அன்பானவர்களே, நமக்குள்ளே இருக்கும் ஆவியானவரைப்பற்றி வெளிப்பார்வைக்கு மக்களுக்குத் தெரியாது. ஆனால் ஏற்றகாலத்தில் அந்த ஆவியின் வல்லமை வெளிப்படும்போது மற்றவர்களைவிட நாம் விசேஷித்தவர்கள் என்பது உலகுக்குப் புரியும். 

எனவே, நீதியை அறிந்து, வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களாகிய நாம் மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருப்போம். 

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்