தீர்க்கத்தரிசிக்கும் தீர்க்கத்தரிசியை நாடுபவனுக்கும் தண்டனை

ஆதவன் 🌞 705 🌻 ஜனவரி 02,  2023 திங்கள்கிழமை

"தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும். இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." (எசேக்கியேல் 14 : 10, 11 )


புத்தாண்டு துவங்கிவிட்டதால் கிறிஸ்தவ ஊழியர்கள் பலரும் ஆசீர்வாத தீர்க்கதரிசனம் கூறத்துவங்கி விடுகின்றனர். இன்னும் ஒரு சில வாரங்கள் ஆசீர்வாதச் செய்திகளும், வாக்குத்தத்தங்களும் அனல் பறக்கும். ஆண்டுக்கு ஆண்டு நடக்கும் இந்தக் கூத்தைப் பல கிறிஸ்தவர்களும் தவறு என்று உணர்வதில்லை. ஊழியர்களும் பணம் சேர்க்கும் காலமாக இதனைப் பயன்படுத்தித் தீர்க்கதரிசனம் என்று ஏதேதோ கூறிக்கொண்டிருக்கின்றனர்.  

அன்பானவர்களே, மனிதர்கள் தன்னை நாடி, தனது சித்தம்செய்து தனக்காக வாழவேண்டுமென்றும் தன்னிடம் பேசி உறவாடி தன்னிடமே  அனைத்துக் காரியங்களையும் குறித்து விசாரிக்கவேண்டுமென்றும்  தேவன் விரும்புகின்றார்.  ஆனால் இன்று மனிதர்களுக்கு காத்திருந்து தேவனிடம் பேசி அவரது சித்தம் அறிய மனமும் பொறுமையும் இல்லை. எனவே, மனிதர்கள் குறுக்கு வழிகளாக ஊழியர்களை  நாடுகின்றார்கள். ஊழியர்களும் மக்களுக்கு தேவனிடம் பேசி உறவாடி அன்புறவில் வளரும் அனுபவத்தைச் சொல்லிக்கொடுப்பதும் இல்லை. காரணம், பெருவாரி ஊழியர்களுக்கும்கூட அந்த அனுபவம் இல்லை. 

இப்படி  தேவ உறவை விரும்பாமல் ஊழியர்களிடம் தீர்க்கதரிசனம் கேட்பதை தேவன் விரும்புவதில்லை. அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது, "தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும்." என்று. ஆம், இப்படி விசாரிப்பது தவறு என்பதால் தண்டனையும் உண்டு. 

இதனைத் தொடர்ந்து இந்த வசனம் கூறுகின்றது, "இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்." அதாவது, இஸ்ரவேல் மக்கள் தேவனை விட்டு வழிதப்பித் போகாமலிருக்க தேவன் இந்தத் தண்டனையைக் கூறுகின்றார்.

இப்படித் தீர்க்கதரிசன ஊழியர்களை நாடாமல் தேவனையே நாடி, அவர் சித்தம்கொண்டு நமக்கு வெளிப்படுத்தும் வெளிப்படுத்தல்களைப் பெற்று, அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது, "அவர்கள்  என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." 

அன்பானவர்களே, தேவனிடம் நாம் அன்புறவில் வளரும்போது நமக்கு தேவனே போதும் என்ற நிறைவும், அவர் நமக்குத் தருவதை ஏற்றுக்கொள்ளும் மன நிறைவும் ஏற்படும். இந்த அனுபவம் இருந்ததால் தான் தாவீது கூறுகின்றார்,  "அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்." ( சங்கீதம் 23 : 3, 4 )

நமக்கு ஆறுதலும் தேறுதலும் உலக ஊழியர்களால் தர முடியாது. இன்று ஒரு சில உண்மையான தேவ ஊழியர்கள் உலகில் உண்டு. ஆனால் அவர்கள் வெறும் ஆசீர்வாதத்தை மட்டும் தீர்க்கதரிசனமாகக்  கூறுவதில்லை. அவர்கள் நாம் தேவ வழியில் நடந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வழி காட்டுவார்கள். 

இன்றைய வசனம் குறிசொல்வதுபோல தீர்க்கதரிசனம் கூறும் ஊழியர்களுக்கும் அவர்களை நாடி ஓடும் அப்பாவி விசுவாசிகளுக்கும் ஒரு எச்சரிக்கை. திருந்திக் கொள்வோம்.  "தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும்." என்கிறார் கர்த்தராகிய ஆண்டவர். கர்த்தரையே நாடுவோம்; தண்டனைக்குத் தப்பித்துக்கொள்வோம் 

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்