கர்த்தரைத் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தேடுவோம்

ஆதவன் 🌞 732 🌻 ஜனவரி 29,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 : 26 )

நாம் இந்த பாரத நாட்டில், தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட ஊரில் பிறந்துள்ளோம் என்றால் அது தேவனால் முன் குறிக்கப்பட்டது. நாம் எங்கு, யாருக்குக் குழந்தையாக பிறக்கவேண்டுமென்பது தேவனால் முன் குறிக்கப்பட்டது. நாம் நமது குடியிருப்பை மாற்றுகின்றோம் அல்லது திருமணமாகி வேறு ஒரு இடத்துக்குச் செல்கிறோம் என்றால் அதுவும் தேவனால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது.  இதனையே, "முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்தேனே நகரில் மார்ஸ் மேடையில் நின்று அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வசனத்தைக் கூறுகின்றார். இப்படி நம்மை குறிப்பிட்ட இடத்தில வாழச் செய்ய காரணம் என்ன என்பதையும் அவர் அடுத்த வசனத்தில் கூறுகின்றார்:-  "கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார். அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 : 27 ) 

இந்த மனிதர்கள் எப்படியாவது தன்னை அறியவேண்டும் என்பதற்காக தேவன் இப்படி மனிதர்களைக் குறிப்பிட்ட இடங்களில் வாழச் செய்துள்ளார் என்று கூறுகின்றார். நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர் நமக்குத் தூரமானவர் அல்ல.  நமது வேதாகமம் இப்படி பல்வேறு இடங்களில் வாழ்ந்த சுமார் 35 நபர்களால்தான் எழுதப்பட்டது. பல்வேறு சூழல்களில் வாழ்ந்து உண்மை தேவனைக் கண்டறிந்தவர்கள் இவர்கள். 

சிலர், "இந்த ஊரில் வாழவே எனக்குப் பிடிக்கவில்லை"  என்று  முறுமுறுப்பார்கள்.  சிலர் வெளிநாடுகளில் வாழ்ந்து அந்த அனுபவத்தால் நமது நாட்டைக் குறைகூறிக்கொண்டிருப்பார்கள். எதெற்கெடுத்தாலும் பிற வளர்ந்த நாடுகளுடன் நமது நாட்டைஒப்பிட்டு குறைகூறிக் கொண்டிருப்பார்கள்.

இருப்பதைக்கொண்டு நிறைவடைவதையே தேவன் விரும்புகின்றார். மேலும் எப்போதும் குறைகளையே பார்க்காமல் நமது நாடு, நமது ஊர் இவற்றின் சிறப்புகளையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். பொதுவாக நமது நாட்டிற்கு  பிற நாடுகளைவிட சிறப்புகள் பல உண்டு.  இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல நாம் இங்கு இருக்கும்வரை நமக்கு தேவன் இந்த நாட்டில் தந்துள்ள நன்மைகள் தெரியாது. வெளி நாடுகளில் சென்று தங்கியிருக்கும் பெரும்பாலான மக்கள் நமது சொந்த நாட்டில் உள்ள சூழ்நிலைகளையே விரும்புகின்றனர். 

எனவே தேவன் நமக்குத் தந்துள்ள நாட்டிற்காக; நமது வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்காக நன்றி சொல்பவர்களாக வாழ்வோம்.  "மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்." என்கின்றது இன்றைய வசனம். ஆம், உலகின் கோடிக்கணக்கான மனிதர்களது இரத்தமும் வெறும் நான்கே நான்கு முக்கிய வகைகளுக்குள் அடக்கமாகியுள்ளது. இது தேவன் நாடு, மொழி, இனம் இவைகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்புரிபவர் என்பதை நமக்கு உணர்த்துகின்றது. 

தேவன் தந்துள்ள வாழ்க்கைச் சூழலுக்கு நன்றி கூறுவோம். நாடு, மொழி, கலாச்சாரம் இவைகளுக்கு அப்பாற்பட்டக்  கர்த்தரைத் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தேடுவோம். "தேடுகிற எவனும் கண்டடைகிறான்."

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்