வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்

ஆதவன் 🌞 715 🌻 ஜனவரி 12,  2023 வியாழக்கிழமை

"என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்"( சங்கீதம் 44 : 6, 7 )

கர்த்தரை நம்பாமல் தங்களது சுய பலத்தையே நம்பி வாழ்கின்றனர் பலர்.  தங்களது வாழ்வின் செழிப்பெல்லாம் தங்களது சுய பலத்தினால்தான் என்று எண்ணுகின்றனர். எனக்கு நல்ல வேலை இருக்கின்றது, நான் சம்பாதிக்கிறேன் என்று கூறிக்கொள்கின்றனர்.  இந்த வேலையும் சம்பாதிக்கும் திறனும் தேவன் கொடுத்தது என்று அவரை மகிமைப்படுத்தத் தவறிவிடுகின்றனர். 

என்னதான் நல்ல வேலை இருந்தாலும் நல்ல உடல் நலம் தேவன் கொடுப்பதுதான். நல்ல உடல் சுகம் இருந்தால் மட்டுமே நமது வேலையாலும் சம்பாத்தியத்தாலும் பலன் உண்டு. 

அன்பானவர்களே, நமக்கு எவ்வளவு அதிக அறிவும், நல்ல வேலையும் சம்பாதிக்கும் திறமையும் இருந்தாலும் நாம் அவற்றின்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன்மேலேயே நம்பிக்கை வைக்கவேண்டும். இன்றைய உலகினில் நாம் பல விஷயங்களை நேரடியாகப் பார்க்கின்றோம். நல்ல வேலையில் இருபவர்களது வேலை திடீரென்று இல்லாமல் போய்விடுகின்றது. உலகின் முன்னணி நிறுவனங்களில் பெருமையோடு உயர் பதவி வகித்தவர்களின் பதவிகள் ஒரு நொடியில் இல்லாமல்போய்விடுகின்றன.

"அவர் வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்." ( சங்கீதம் 46 : 9 ) என வசனம் கூறுகின்றது. அதாவது தனது ஈட்டியையும் இரத்தங்களையும் பெருமையாக எண்ணுபவர்களை தேவன் அழித்து ஒழியப்பண்ணுகின்றார். 

"ஆண்டவரே, என் வேலையை நான் நம்பேன், என் வேலையும் திறமையும் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் வாழ்க்கையினைச் செழிக்கச் செய்பவர்." என்று உண்மையான தாழ்மையுடன் அறிக்கையிடவேண்டும். ஆண்டவர் இதனையே விரும்புகின்றார்.   பலருக்கு இந்த எண்ணம் இல்லாததால் பெருமையும் மற்றவர்களை அற்பமாக எண்ணும் குணமும்  ஏற்படுகின்றது.

நமக்கு எவ்வளவு பெரிய பதவி இருந்தாலும் அதனைவிட மகா பெரிய தேவையே நாம் நம்பவேண்டும்.  "பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்." ( லுூக்கா 1 : 52, 53 ) எனும் வேத வசனங்கள் நமக்கு எப்போதும் ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

தாழ் நிலையிலுள்ளவர்களை ஒரே நொடியில் உயர்த்தவும், உயரத்தில் இருப்பவர்களை ஒரேநொடியில் தாழ்த்தவும் தேவனால் கூடும். எனவே, "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சிக்கிறவர் " என்று நமது வாயினால் அறிக்கையிடுவோம்.   

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்