DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, January 09, 2023

கர்த்தரிடத்தில் திரும்புவோம்

ஆதவன் 🌞 714 🌻 ஜனவரி 11,  2023 புதன்கிழமை

"கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." ( ஓசியா 6 : 1 )

பிள்ளைகள் தவறு செய்யும்போது பெற்றோர்கள் அவர்களைத் தண்டிப்பதுண்டு. இது பிள்ளைகள் நல்லவர்களாக வளரவேண்டும் என்பதற்காகவேதானே தவிர குழந்தைகளைப் பழிவாங்குவதற்காக அல்ல.  சிலவேளைகளில் தாய்மார்கள் கோபத்தில் தங்கள் குழந்தைகளை அடித்துவிட்டு மனம் வருந்தி அவர்களே அழுவதுண்டு. ஆம், நமது தேவனும் இப்படிப்பட்டவர்தான். நம்மைக் கண்டிக்கும்போது அவரும் மனம் வருந்துகின்றார். 

நாம் நமது மீறுதல்களினால் தேவனுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும்போது நம்மைத் திருத்துவதற்காக தேவன் நம்மைத் தண்டிப்பதுண்டு. இது ஒரு தாய் தனது குழந்தைகளைத் திருத்துவதற்குத் தண்டிப்பதைப்போலதான்.   "அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது." ( யோபு 5 : 18 )

நமது தாய் தகப்பன்மார் அவர்கள் நல்ல வழி எனக் கருதும் வழிகளில் நாம் வளரவேண்டும் என்பதறகாகக் சிறிதுகாலம் நம்மைத் தண்டிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவு  வளர்ந்தபின் அவர்கள் நம்மைத் தண்டிப்பது கிடையாது. இதனையே எபிரேய நிருபத்தில் நாம்,  "அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்." ( எபிரெயர் 12 : 10 ) என்று வாசிக்கின்றோம்.

இன்றைய தியான வசனத்தில், "அவரே  நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." என வாசிக்கின்றோம். அன்பானவர்களே, எனவே நாம் துன்பங்களை, பாடுகளை அனுபவிக்கும்போது நம்மை நாமே நிதானித்துப் பார்க்கவேண்டியது அவசியம். மட்டுமல்ல, நம்மிடம் குற்றங்கள் இருக்குமேயானால் அவரிடம் மன்னிப்பு வேண்டுவது அவசியம். "அடிக்கிற கைதான் அணைக்கும்" என்பதற்கேற்ப நம்மை அடித்த அவரே நம்மை அணைத்துக்கொள்வார், அமைத்து காயங்களைக் கட்டுவார், நம்மைக் குணமாக்குவார்.  

"கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்" என்று இன்றைய வசனம் நமக்கு அழைப்புவிடுக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் இன்று அவரிடம் திரும்பவேண்டியது அவசியமாயிருக்கின்றது.  தினமும் பாவ அறிக்கை செய்யவேண்டியது அவசியமாயிருக்கின்றது. ஏனெனில் நாம் அனைவருமே பல விஷயங்களில் தவறுகின்றோம். (யாக்கோபு 3:2)

நாம் மனித அறிவால் பாவம் என்று உணர்ந்திராத பல விஷயங்கள் தேவ பார்வையில் பாவமாக இருக்கலாம். எனவே தினமும் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுவோம். தேவனது கண்டிப்புக்குத் தப்பி நமது உடலையும் ஆத்துமாவையும் வாழ்வையும் காத்துக்கொள்வோம்.

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: