DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, January 04, 2023

யார் அந்திக்கிறிஸ்து (Anti Christ) ?

ஆதவன் 🌞 709 🌻 ஜனவரி 06,  2023 வெள்ளிக்கிழமை

"மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக் கிறிஸ்துவுமாயிருக்கிறான்." ( 2 யோவான்  1 : 7 )

நாம் ஒருவரது கொள்கைகள் கோட்பாடுகள் இவற்றை ஏற்றுக்கொள்வோமானால் அவற்றைக் கடைபிடிப்போம். அவர்களது கொள்கைகளை மாற்றிப்  புரட்டாமல் பேசுவோம். இன்று நாட்டில் கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், காந்தீயவாதிகள் என்று பல கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் உண்டு. அவர்கள் பெரும்பாலும் இந்தக் கொள்கைகளின்படி வாழ்வதில்லை. ஆனால், தாங்கள் போற்றி புகழும் இந்தத் தலைவர்கள் கூறிய கொள்கைகளை மாற்றி பேசுவது கிடையாது. அதாவது அவர்கள் தாங்கள் பேசும் கொள்கைகளின்படி வாழாவிட்டாலும் கொள்கையினை மாற்றிப்  பேசுவதுகிடையாது.  

ஆனால் இன்று கிறிஸ்தவத்தில் இதற்கு மாறுபாடான நிலை உள்ளது. பெரும்பாலான கிறிஸ்த ஊழியர்கள் இயேசு கிறிஸ்துவின் மைய போதனையினையும் அவர் உலகத்தில் வந்த நோக்கத்தையும் மாற்றி, திரித்து போதிக்கின்றனர். "எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ஒரு புண்ணியனின் மடியினிலே புதல்வனாகினார்" என தப்பும் தவறுமாக பாடுகின்றார்கள். அதிசயம் செய்யும் மந்திரவாதியாகத் தன்னைக் காட்டவா கிறிஸ்து உலகில் வந்தார்?திருச்சபைத் தலைவர்களும் இதனைக் கண்டுகொள்வதில்லை.  

"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது"
( 1 தீமோத்தேயு 1 : 15 ) என்றல்லவா வேதம் கூறுகின்றது? இங்கு அதிசயம் அற்புதம் எப்படி நுழைந்தது?

மனிதனாக உலகினில் வந்த தேவகுமாரனான கிறிஸ்துவை மறுதலிப்பது என்பது இதுதான். கிறிஸ்துவின் பெயர் பிரசித்தமாகின்றதோ இல்லையோ  தங்களைக்குறித்தும் தங்களது வல்லமையினைக்குறித்தும் ஆளுயர போஸ்டர்களும் பேனர்களும் வைத்துத் தங்களைத்  தாங்களே புகழ்வதும் "விசுவாசிகள்" எனும் அப்பாவி மக்களைக்கொண்டு தங்களைப் புகழ்ந்து சாட்சிகூற வைப்பதும்தான் கிறிஸ்துவை மறுதலிப்பது. கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் பாவமன்னிப்பையும் மீட்பு அனுபவத்தையும் எடுத்துக்கூறாமல் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் ஆசீர்வாதம் என உலக ஆசீர்வாதங்களையே கூறுவதுதான்  கிறிஸ்துவை மறுதலிப்பது. 

எனவேதான், இப்படி "மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்." ( 2 யோவான்  1 : 7 ) என்கின்றார் அப்போஸ்தலனாகிய யோவான். 

கிறிஸ்துவின் போதனையினை ஏற்றுக்கொள்ளாமல் திரித்துப்பேசும் இவர்களே வஞ்சகனும் அந்திகிறிஸ்துவும் (எதிர்க்கிறிஸ்து)  என வேதம் மிகத் தெளிவாகக் கூறியிருந்தும் இத்தகைய வஞ்சகர்களைக்கொண்டுதான் பெரும்பாலான நற்செய்தி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. "ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்." ( 2 யோவான்  1 : 10 ) என யோவான் கூறுகின்றார். 

அன்பானவர்களே, நற்செய்தி கூட்டங்களில் கலந்துகொள்வது நல்லதுதான். ஆனால் அங்கு யார் செய்தி அளிக்கிறார் என்று பார்த்து பிரபலங்களை நோக்கி ஓடி நமது ஆத்துமாவை இழந்துபோய்விடக்கூடாது.  

இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத வஞ்சக அந்திக்கிறிஸ்து ஊழியர்களுக்கும் போதனைகளுக்கும் நம்மைக் காத்துக்கொள்வோம்.  

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: