கர்த்தரோடு நம்மை இணைத்துக்கொள்ளும் அனுபவம் வேண்டுவோம்

ஆதவன் 🌞 718 🌻 ஜனவரி 15,  2023 ஞாயிற்றுக்கிழமை

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்." ( சங்கீதம் 31 : 24 )

கர்த்தருக்குக் காத்திருத்தல் என்பது உறுதியான விசுவாசத்தோடு கர்த்தரையே சார்ந்துகொல்வதைக்  குறிக்கின்றது. நாம் ஏதும் செய்யாமல் வெறுமனே ஒரு பேரூந்துக்காகக் காத்திருக்கும் பயணியைப்போல இருக்கவேண்டும் என்று பொருளல்ல, மாறாக கர்த்தரிடம் நாம் உறுதியாகத் தரித்திருப்பதையே குறிக்கின்றது. காத்திருத்தல் என்று கூறப்படும் இந்த வார்த்தைக்கு எபிரேய மூல மொழியில் கூறப்பட்ட வார்த்தை QUVAH  என்பது என்று எபிரேயம் தெரிந்த எனது நண்பர் ஒருவர் கூறினார். 

இதற்கு, பின்னுதல், ஒட்டுதல் (bind) என்ற பொருளும் உண்டு என்று கூறினார் அவர். அதாவது கர்த்தரோடு கர்த்தராகத் தங்களைப் பின்னிக்கொண்டவர்கள் அல்லது கர்த்தரோடு தங்களை ஒட்டிக்கொண்டவர்கள் என்று பொருள். 

இப்படிக் "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 )

இன்றைய வசனம் கூறுகின்றது இப்படிக் "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்" என்று. அதாவது இப்படிக் கர்த்தரோடு ஒரு ஒட்டுதலான வாழ்க்கை வாழ்ந்தால் அவர் நமது இருதயத்தை உறுதிப்படுத்துவார். இந்த வசனம், நாம் கேட்பதையெல்லாம் அவர் தருவார் என்று கூறாமல் "உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்" என்று கூறுகின்றது. நமது இருதயம் உறுதிப்படும்போது நாம் கேட்பது கிடைக்காவிடினும் அவரது சித்தத்தை ஏற்றுக்கொள்ளும் பலத்தை நமக்குத் தரும்.

இதற்கொத்த வேத வசனங்கள் பல சங்கீத புத்தகத்தில் உண்டு. 

"கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு" ( சங்கீதம் 37 : 7 )

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்." ( சங்கீதம் 37 : 9 )

அன்பானவர்களே, கர்த்தரோடு நம்மை இணைத்துக்கொள்ளும் அனுபவம், கர்த்தரோடு கர்த்தராக நம்மைப் பின்னிக்கொள்ளும் அல்லது ஒட்டிக்கொள்ளும் அனுபவத்தில் நாம்  வளரவேண்டியது அவசியம். அப்படி வளரும்போது மட்டுமே நாம் உலகத் துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவதைப் பெற முடியும். உலக ஆசீர்வாதங்களையல்ல, கர்த்தரையே முதன்மையாக வேண்டுவோம். அப்போது நமது இருதயம் கர்த்தரில் உறுதிப்படும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்