கிறிஸ்தவத்தின் மேன்மையே ஆத்தும இரட்சிப்புத்தான்

ஆதவன் 🌞 724 🌻 ஜனவரி 21,  2023 சனிக்கிழமை

"அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்."  ( வெளிப்படுத்தின விசேஷம் 7 : 10 )

"நான் கேட்டதையெல்லாம் தேவன் எனக்குத் தந்துள்ளார், என்னை பல  ஆசீர்வாதங்களால் நிறைத்துள்ளார்,  கார், வீடு, நல்ல வேலை எனக்கு இருக்கிறது. இது தேவன் எனக்குத் தந்த மிகப்பெரிய ஆசீர்வாதம்." என்று பலரும் சாட்சி கூறுகின்றனர்.

ஆனால் நாம் கவனிக்கவேண்டியது  என்னவென்றால்  இந்த ஆசீர்வாதங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களும், எந்தவித மத நம்பிக்கையுமில்லாத நாத்திகர்களும் அனுபவிப்பதுதான். எனவே இப்படி உள்ள ஆசீர்வாதமே போதுமென்றால் நாம் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டியது அவசியமில்லை என்பதுதெளிவு. ஏனெனில் கிறிஸ்து இல்லாமலேயே இவைகளைப் பெற முடியுமானால் நாம் கிறிஸ்துவை ஆராதித்த தேவையில்லைதானே?

கிறிஸ்தவத்தின் மேன்மையே ஆத்தும இரட்சிப்புத்தான். இந்த இரட்சிப்பு அனுபவத்தை பல ஊழியர்களும்கூட  அறியாமலும், இதுபற்றிய தெளிவும் இல்லாமலுமிருப்பதால்தான் இற்று கிறிஸ்தவ போதனைகளிலும் குழப்பங்கள் நிலவுகின்றன. "........... இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 4 ) என வாசிக்கின்றோம். அப்படியானால் இரட்சிப்பு எவ்வளவு மேன்மையானது; முக்கியமானது என்று விளங்கும். ஆம், உலக ஆசீர்வாதங்களல்ல, பாவமன்னிப்பும் பாவத்திலிருந்து விடுதலை அளிக்கும் இரட்சிப்புமே கிறிஸ்தவத்தின் அச்சாணி. 

இன்றைய வசனத்தில் இப்படி இரட்சிப்பு அனுபவம் பெற்று மரித்த மக்கள் கூட்டத்தைத்தான் அபோஸ்தனாகிய யோவான் காண்கின்றார். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

இந்த  மக்கள் அனைத்து ஜாதி, மதம், இனம், நாடுகளைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இதனையே யோவான், "இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 7 : 9 ) என்று கூறுகின்றார். 

உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே தேவனைத் தேடுபவர்கள் இந்த அனுபவத்தைப் பெறமுடியாது. அன்பானவர்களே, "இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்"  என்ற வசனம் நம்மைக் கிறிஸ்துவின் இரட்சிப்பினை அடைந்திட முயற்சியெடுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

ஆட்டுக்குட்டியானவரது இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட உறுதியுடன் வேண்டுவோம்.  நமது பாவங்களை மறைக்காமல் அவரிடம் ஒப்புவித்து மன்னிப்பை வேண்டுவோம்.  பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்வோம். அப்போது நாமும் இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று மறுமையில்  ஆர்ப்பரிக்க முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்