சபிப்பவர்கள் மேலேயே அந்த சாபங்கள் வந்து தங்கும்.

ஆதவன் 🌞 720 🌻 ஜனவரி 17,  2023 செவ்வாய்க்கிழமை

"அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது." ( நீதிமொழிகள் 26 : 2 )

சாபமிடுதல்  சிலருக்கு எப்போதுமே அவர்களை அறியாமலேயே வாயில் வரும். எதற்கெடுத்தாலும் மற்றவர்களைச் சபிப்பார்கள். இது ஒரு வியாதிபோல அவர்களுக்கு.

ஒருமுறை ஒரு சகோதரன் என்னிடம், "பிரதர் எங்களது பக்கத்து வீட்டுகார பெண்மணி எதற்கெடுத்தாலும் சாபம்போடுகின்றார். காலை எழும்பியதுமுதல் கேட்கும் "விளங்கமாட்டான்", "நாசமாய்ப்போவான்" எனும் வார்த்தைகளே எங்களை மிகவும் மனம் நோகச்  செய்கின்றது.  எங்களுக்கு இது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்று கூறினார். 

இதுபோல பலர் இந்த உலகத்தில் உண்டு. ஆனால் இந்தச் சாபத்தைக்கேட்டு பலரும் பயப்படுகின்றார்கள். இன்றைய தியானத்துக்குரிய வசனம் நாம் இப்படி காரணமில்லாத சாபங்களை எண்ணிக் கலங்கவேண்டியதில்லை என்று கூறுகின்றது. "அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. எனவே தேவ பிள்ளைகளான நாம் இத்தகைய சாபமிடுபவர்களைக்கண்டு பயப்படவேண்டிய அவசியமில்லை. 

நாம் உண்மையாய்ப் பயப்படவேண்டியது கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்க நாம் தவறும்போது மட்டுமே. ஏனெனில் வேதம் கூறுகின்றது, "அப்படி அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்." ( உபாகமம் 28 : 15 ) என்று.  

மட்டுமல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் வெற்றிச்சிறந்து  நமது சாபங்களையெல்லாம் இல்லாமலாக்கிவிட்டார். நாம் இயேசு கிறிஸ்துவுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போது அவருடைய பிள்ளைகள் ஆகின்றோம். எனவே,   எந்த சாபமும் நம்மை அணுகாது.

மற்றவர்கள் இடும் சாபத்தைப்பற்றி கூடும் வேதம் நமக்கும் பின்வருமாறு அறிவுறுத்துகின்றது:-  "உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்." ( ரோமர் 12 : 14 ). ஆம், தேவனுக்கு உகந்தவர்களாக வாழும்போது மற்றவர்கள் இடும் சாபம் நம்மேல் பலிக்காது. நாமும் பிறரை சபியாமல் இருக்கவேண்டும். 

அப்படி நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது காரணமில்லாமல் நமக்குக் கூறப்படும் சாபம் ஆசீர்வாதமாக மாறும். மட்டுமல்ல, நம்மைச் சபிப்பவர்கள் மேலேயே அந்த சாபங்கள் வந்து தங்கும்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்