Saturday, November 16, 2024

கலாத்தியர் 3:29

 'ஆதவன்' 💚நவம்பர் 24, 2024. ஞாயிற்றுக்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,386


"நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்". (கலாத்தியர் 3:29)

சுதந்திரவாளி,  சுதந்திரம் எனும் வார்த்தைகளை நாம் வேதாகமத்தில் பல இடங்களில் வாசிக்கின்றோம். இது முறையே உரிமையுடையவன், உரிமை எனும் அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. இன்றைய தியான வசனம் கூறுகின்றது, நாம் கிறிஸ்துவுக்கு உரிமையுடையவர்களாக இருப்போமானால் நாமே ஆபிரகாமின் சந்ததி. வாக்குத்தத்தங்களுக்கு உரிமையுள்ளவர்கள். 

ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார்  அதுவே அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆம் அன்பானவர்களே, தேவன் நமது நீதிசெயல்களைப்பார்த்து நம்மை இரட்சிப்பதில்லை. மாறாக அவர்மேல்கொள்ளும் விசுவாசத்தால் நாம் இரட்சிக்கப்படுகின்றோம். "அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக." ( கலாத்தியர் 3 : 6, 7 )

கிறிஸ்தவ மார்க்கமே விசுவாச மார்க்கம்தான். கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே நம்மை மீட்படையச் செய்கின்றது. மட்டுமல்ல, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தும் ஆபிரகாமுக்குப் பலித்ததுபோல கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்ளும் நமக்கும் பலிக்கின்றது. "................................அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது." ( ரோமர் 4 : 16 ) என்று வாசிக்கின்றோம். 

எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்" என்று. நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்களாகும்போது நாமே ஆபிரகாமின் சந்ததியாக இருக்கின்றோம். மட்டுமல்ல, அந்த வாக்குறுதியின்படி நாம் உரிமைக் குடிமக்களாகின்றோம். 

அடிமைக்கும் உரிமைக் குடிமகனுக்கும் வித்தியாசமுண்டு. அடிமைகளாக நாம் இருப்போமானால் கிறிஸ்துவிடம் நமக்கு உரிமைகள் எதுவும் இல்லாதவர்களாக இருப்போம். "அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது." ( கலாத்தியர் 4 : 30 )

நாம் அடிமைகளாக புறம்தள்ளப்படாமல் இருக்கவேண்டுமானால் நாம் விசுவாசத்தால் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு உரிமையுள்ளவர்களாக மாறவேண்டியது அவசியம். நாம் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருப்போம். எனவே கிறிஸ்துவின்மேல் பூரண விசுவாசமுள்ளவர்களாக வாழ்வோம். பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரது வாக்குறுதிகளுக்கு உரிமையுள்ளவர்களாக மாற முயலுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

Thursday, November 14, 2024

யோவான் 4 : 42

 'ஆதவன்' 💚நவம்பர் 23, 2024. 💚சனிக்கிழமை              வேதாகமத் தியானம் - எண்:- 1,385


"அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்." ( யோவான் 4 : 42 )

இன்று கிறிஸ்துவை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் பலரும் பொதுவாக இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களையே பெரிதாகக் கூறிக்கொண்டு வாழ்கின்றனர். அன்றும் இதுபோலவே அவரதுபின்னே  சென்ற திரளான மக்களில் பலரும் அவர் செய்த அற்புதங்களைப் பார்க்கவும் அனுபவிக்கவுமே சென்றனர். எனவே அவர்களில் பலரும் அவரை ஆத்தும இரட்சகராக கண்டுகொள்ள முடியவில்லை. 

ஆனால் இதற்கு மாறாக, அவரது அற்புதங்களையல்ல, அவரது வாயின் வார்த்தைகளை நாம் வாசித்து உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இரட்சிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். இப்படியே சமாரியா மக்கள் அவரை உலக இரட்சகராக அறிந்துகொண்டனர். அதனையே அவர்கள் இன்றைய தியான வசனத்தில் "அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம்." என அறிக்கையிடுகின்றனர். அதாவது, அற்புதங்களைக் கண்டு அல்ல மாறாக, அவருடைய உபதேசத்தைக் கேட்டு அறிந்துகொண்டோம் என்கின்றனர்.   

யூதர்கள் சமாரியர்களை அற்பமாக, தீண்டத்தகாதவர்களாக எண்ணினார்.  ஆனால் அந்தச் சமாரியர்கள்தான்  இயேசுவின் வார்த்தைகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அவரை உலக இரட்சகராகக் கண்டுகொண்டனர். ஆனால் அவரது வல்ல செயல்களைக் கண்டும் அவரது வார்த்தைகளைப் புறக்கணித்த  யூதர்களில் பலரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தன்னை நம்பவேண்டும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியில் வல்ல செயல்கள் பல செய்தார். 

நான் சொல்வதை நம்புங்கள் அல்லது நான் செய்யும் வல்ல செயல்கள் அற்புதங்களைக் கண்டாவது என்னை நம்புங்கள் என்றார் அவர். "நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்." ( யோவான் 14 : 11 ) என்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் வெறுமனே இயேசு கிறிஸ்துவிடம் அற்புதங்களையும் அதிசயங்களையும் எதிர்பார்த்து அவரிடம் வருவதைவிட அவரது வார்த்தைகளை அறியும் ஆர்வமுள்ளவர்களாகவும் அவற்றை முழுவதுமாக ஏற்றுக்கொள்பவர்களுமாகவும் வாழவேண்டியது அவசியம்.  இறுதிநாளில் அவர் தனது வசனத்தின்படியே நியாயம்தீர்ப்பார். "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 ) என்றார் இயேசு. 

உலக ஆசீர்வாதங்களைக் கண்டு அனுபவிக்க ஓடிய பெரும்பாலான யூதர்களைப்போல அல்லாமல் அவருடைய உபதேசத்தை கேட்டு அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசித்த சமாரியர்களைப்போல நாமும் மாறவேண்டியதே நாம் செய்யவேண்டியது.  அப்போதுதான்  நல்ல சமாரியன் இயேசு என்றும் நம்மோடு இருப்பார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

Tuesday, November 12, 2024

"என்னத்திற்காக வந்திருக்கிறாய்?"

 'ஆதவன்' 💚நவம்பர் 22, 2024. 💚வெள்ளிக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,384


"அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார்." ( மத்தேயு 26 : 49, 50 )

இன்றைய தியான வசனம் கெத்சமெனி தோட்டத்தில் இயேசுவைக் கைதுசெய்ய  பிரதான ஆசாரியனும் மூப்பர்களும் திரளான மக்களும் யூதாஸ்  இஸ்காரியாத்தோடு வந்தபோது நடந்த சம்பவத்தைக் குறிக்கின்றது. 

இந்த யூதாஸ் இயேசு கிறிஸ்துவோடு மூன்றரை ஆண்டுகள் வாழ்ந்தவன்தான்; அவரைபற்றியும் அவர் செய்த அற்புதங்களையும் கண்ணால் பார்த்தவன்தான். இப்போதும் அவன் இயேசுவை வாழ்த்தவே செய்தான், அவரை முத்தமிட்டான்.  இந்தச் சம்பவம் அவன் வெளிப்பார்வைக்கு  இயேசு கிறிஸ்துவோடு வாழ்பவனாக இருந்தாலும்  உண்மையில் அவரோடு வாழவில்லை என்பதையே குறிக்கின்றது. 

இந்த சம்பவங்கள் நம்மை நாமே நிதானித்துப்பார்க்கவும்  நம்மைத் திருத்திக்கொள்ளவும்  அறிவுறுத்துகின்றது. ஆம் அன்பானவர்களே, இந்த யூதாசைபோலவே நம்மில் பலரும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆலய ஆராதனைகளில் பல ஆண்டுகள் கலந்துகொண்டு இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ளோம் என்று கூறிக்கொள்கின்றோம். யூதாஸ் அவரைப் புகழ்ந்ததுபோல அவரை நமது நாவினால் துதிக்கின்றோம். அவரது சிலுவையை முத்தமிடுகின்றோம். 

ஆனால் இயேசு கிறிஸ்து யூதாஸிடம் கேட்டது போல நம்மிடம், "சிநேகிதனே / சிநேகிதியே  என்னத்திற்காக வந்திருக்கிறாய்?" என்று  கேட்டால் என்ன பதில் கூறுவோம்?  இதுவே நாம் சிந்திக்கவேண்டியது. நம்மில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகித மக்களும் இந்தக் கேள்விக்கு ஏதாவது ஒரு உலக ஆசீர்வாதம் சம்பந்தமான பதிலையே கூறுவார்கள். ஆனால் இந்தக் கேள்விக்கு யூதாஸ் எந்தப்பதிலும் கூறவில்லை. 

நாம் உண்மையில் எதற்காக இயேசு கிறிஸ்துவைத் தேடுகின்றோம்? எதற்காக அவரிடம் வந்து அவரை முத்தம் செய்கின்றோம். உலக ஆசீர்வாதங்களை மட்டுமே நாடி நாம் அவரிடம் வருவோமானால் நாமும் யூதாசைப் போன்றவர்களே. ஆம் அவன் முப்பது வெள்ளிக்காசு கிடைக்கும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்துவிடம் வந்து அவரை வாழ்த்தி முத்தமிட்டான். நாம் அவனைப்போல அறிவிலிகளாக இருக்கக்கூடாது. 

நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவம் பெறவேண்டும் எனும் ஆர்வத்தில் அவரிடம் வருவோமானால் நாம் அவரை வாழ்வில் நம்முள் பெற்று அனுபவிக்கலாம். இல்லாவிட்டால் நாமும் யூதாசைப் போலவே அவரை முத்தமிட்டு நெருங்குகின்றவர்களாகவே இருப்போம். 

"சிநேகிதனே / சிநேகிதியே  என்னத்திற்காக வந்திருக்கிறாய்?" என்று நம் ஒவ்வொருவரிடமும் இயேசு கிறிஸ்து இப்போதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

செத்த ஈக்களும் சொற்ப மதியீனமும்

 'ஆதவன்' 💚நவம்பர் 21, 2024. 💚வியாழக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,383

  

"செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்." ( பிரசங்கி 10 : 1 )

பரிமளத்தைலம் இனிமையான நறுமணம் கொண்டது. இன்றும் ஜெருசலேம் திருப்பயணம் செல்பவர்கள் பரிமளத்தைலத்தை வாங்கி வருவதுண்டு. சாதாரண நறுமணப் பொருட்களைவிட பரிமளத்தைலம் வித்தியாசமான நறுமணம் கொண்டது. ஆனால் இந்த நறுமணத்தைலம் அதனுள் ஈக்கள் விழுமானால் கெட்டு நாறிப்போகும். இதனையே பிரசங்கி மதிகெட்டச் செயல் புரிபவனுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். 

நாம் சிறப்பான பட்டங்கள் பெற்றிருக்கலாம், மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றவர்களாக இருக்கலாம், ஆனால் நாம் மதிகெட்டத்தனமாக ஒரு சிறிய செயலைச் செய்துவிட்டாலும் அது நமது பெயர் நாறிப்போகச் செய்துவிடும். 

நல்ல பெயரும் புகழும் கொண்ட ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரைக்குறித்து அறிவேன். அவர் பல பட்டங்கள்  பெற்றவர். மட்டுமல்ல நல்ல இரக்ககுணம் கொண்டவர். பலருக்கும் உதவக்கூடியவர். அந்தக் கிராமத்தில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. அனைவரும் அவரை மதித்து ஊரில் நடக்கும் எந்த கூட்டத்திலும் அவரை முன்னிலைப்படுத்தி வந்தனர். இந்தப்  பேராசிரியர் நமது ஊருக்குக் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் என்று பெருமையாகக் கூறிக்கொண்டனர். ஆம், அந்தப் பேராசிரியரின் பெயர் உண்மையிலேயே பரிமளத்தைலம்போல நறுமணமானதாக இருந்தது. 

ஆனால் ஏதோ ஒரு சூழலில் அந்தப் பேராசிரியர் அந்த ஊரிலுள்ள கணவனை இழந்த ஒரு பெண்ணிடம் ஒருமுறை தகாத உறவு கொண்டுள்ளார். அதனை அவர் யாருக்கும் தெரியாது என்று எண்ணிக்கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பெண் கர்ப்பமடைந்துவிட்டார். அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது அவள் தனது கர்ப்பத்துக்கு இவர்தான் காரணம் என்று இந்தப் பேராசிரியரைக் கைகாட்டினார்.  ஊர் மக்களால் அதனை நம்ப முடியவில்லை. இவரா?  ..இவரா? என்று வாய் பிளந்து கூறினர்.

அந்தப் பேராசிரியரால் இந்த அவமானத்தைத் தாங்கமுடியவில்லை. திருமணமான மகன், மகள் அவருக்கு உண்டு. பேரக்குழந்தைகள் உண்டு. இதுவரை அவரது மருமக்கள் அவரைக்குறித்து  பெருமைபட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று எல்லோரும் அவரை அற்பமாகப் பார்த்தனர். அவரால் அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை; அவரால் இந்த அவமானத்தைத் தாங்கமுடியவில்லை. அன்று இரவோடு இரவாக தற்கொலைசெய்து தனது வாழ்வை முடித்துக்கொண்டார். 

செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் என இன்றைய தியான வசனம் சொல்வதுபோல சொற்பமான மதிகெட்டச் செயல் அந்தப் பேராசிரியரை அழிவுக்குநேராகக் கொண்டு சென்றுவிட்டது.  

ஆம் அன்பானவர்களே, இத்தகைய மதிகேடுகள் நமது வாழ்வில் வந்துவிடாமல் நம்மை நாம் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். நமது சுய முயற்சியால் நல்லவராக வாழ முயலும்போது இத்தகைய மதிகேடுகள் நமது வாழ்வில் வந்துவிடலாம். எனவே நாம் தேவனையும் அவரது ஆவியின் வல்லமையையும் நம்பி வாழவேண்டியது அவசியம். சொற்ப மதியீனமும் நம்மைக் கெடுக்காமல் அவர் மட்டுமே நம்மைக் காப்பாற்றி நடத்த முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                  

Sunday, November 10, 2024

வெள்ளியும் பொன்னும் விடுவிக்காது

 'ஆதவன்' 💚நவம்பர் 20, 2024. 💚புதன்கிழமை             வேதாகமத் தியானம் - எண்:- 1,382

 

"கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை," ( எசேக்கியேல் 7 : 19 )

கர்த்தருடைய இறுதி நியாயத்தீர்ப்பு நாளையே இன்றைய தியான வசனத்தில் சினத்தின் நாள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நியாயத்தீர்ப்பு நாளில் நாம் உலகினில் சேர்த்துவைத்துள்ள நமது செல்வங்கள் நம்மை விடுவிக்காது என்கின்றார் கர்த்தர். 

இந்த உலக வாழ்க்கையில் நாம் சேர்த்து வைத்துள்ள செல்வத்தைக்கொண்டு உலகிலுள்ள அநியாய நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிடலாம். இன்று பல ஊழல் அரசியல் தலைவர்கள் அதனைத்தான் செய்கின்றார்கள். பெரிய பெரிய ஊழல்வாதிகளெல்லாம் நீதிபதிகளுக்கு கையூட்டுக் கொடுத்து எளிதில் விடுதலைப்பெற்று சிறைக்குத் தப்பிவிடுகின்றனர். 

ஆனால் சத்திய நியாயாதிபதி கிறிஸ்துவின் முன்னால் நாம் நிற்கும்போது இப்படிச் செய்து தப்பிவிடமுடியாது. ஆம், அவரது சினத்தின் நாளிலே நமது வெள்ளியும் பொன்னும் நம்மை விடுவிக்கமாட்டாது; அவைகளால் அப்போது நமது  ஆத்துமா திருப்தியாக்குவதும் இல்லை. காரணம் தேவன் கைக்கூலி வாங்குபவரல்ல. "உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல." ( உபாகமம் 10 : 17 )

நாம் நியாயத்தீர்ப்பு நாளில் தப்பவேண்டுமானால் உலகத்தில் பொன்னையும் வெள்ளியையும் சேகரித்து வைப்பதைவிட நாம் செய்யும் நற்செயல்கள்மூலம், பரிசுத்த வாழ்க்கையின் மூலம் பரலோகத்தில் நமது செல்வத்தைச் சேர்த்துவைக்கவேண்டும். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார்,  "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை." ( மத்தேயு 6 : 19, 20 )

ஆம், அன்பானவர்களே, கோடி கோடியாக சேர்த்துவைக்கும் பொருள் இந்த உலகத்தில் வேண்டுமானால் நமக்குக் கைகொடுக்கலாம் ஆனால் தேவனுக்குமுன் நாம் நிற்கும்போது அவற்றால் ஒரு பயனும் இல்லை. இயேசு கிறிஸ்து கூறினார், "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல." ( லுூக்கா 12 : 15 )

பூச்சியும் துருவும் அழிக்காத, திருடர்களால் திருடமுடியாத பரலோக  செல்வத்தை நாம் சேர்த்துவைக்கும்போது அவையே நமது இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் நமக்குக் கைகொடுக்கும். அப்போது நரகத்துக்குத் தப்பும் நமது ஆத்துமாவும் திருப்தியாகும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                                      

Saturday, November 09, 2024

தந்திரமானக் கட்டுக்கதையல்ல

 'ஆதவன்' 💚நவம்பர் 19, 2024. செவ்வாய்க்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,381


"நாங்கள் தந்திரமானக்  கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்." ( 2 பேதுரு 1 : 16 )

கிறிஸ்தவர்களாக இருந்தாலும்கூட பலர் வேதத்தில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்களை உறுதியாக நம்புவதில்லை. சில  குருக்கள்கூட பல வேதாகமச் சம்பவங்களுக்கும் இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களுக்கும் வேறு அர்த்தம் கற்பிக்கின்றனர். 

விடுதலை இறையியல் என்ற தப்பறையில் மூழ்கி வாழும் குருவானவர் ஒருவர் பிரசங்கத்தில் இயேசு அப்பங்களைப் பலுக்கச்செய்தது அற்புதமல்ல; மாறாக,  அது  பகிர்தலை விளக்க கூறப்பட்ட சம்பவம் என்று கூறினார். அன்று இயேசு பிரசங்கித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த பலரிடமும் அப்பமும் மீன்களும் இருந்தன. ஆனால் எவரும் உணவு இல்லாத மற்றவர்களோடு அதனைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் முதலில் அந்தச் சிறுவன் தன்னிடம் இருந்ததைக் கொடுத்தவுடன் மற்றவர்களும் தங்களிடம் இருந்ததைக் கொடுக்க முன்வந்தனர். இப்படிச் சேகரித்த அப்பங்களை 12 கூடைகளில் நிரப்பினார்கள். இதுபோலவே தங்களிடம்  குவிந்து கிடக்கும் செல்வத்தை  அனைவரும் பகிர்ந்துகொடுத்தால்  நாட்டில் இல்லாமை நீங்கிவிடும் என்று பிரசங்கித்தார். 

இப்படி முட்டாள்த்தனமாக கிறிஸ்தவ குருக்களே பிரசங்கித்தால் விசுவாசி எப்படி இருப்பான் என்று சிந்தித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட அறிவிலிகளுக்குத்தான், "நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்." என்று இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார்.  

தொடர்ந்து இதனை உறுதிப்படுத்த அவர் கூறுகின்றார், "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்." ( 2 பேதுரு 1 : 17, 18 )

ஆம் அன்பானவர்களே, வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்களைத் தங்களுக்கு ஏற்பத் திரித்துக் கூறுபவர்கள் ஒருபோதும் சத்தியத்தை அறிந்துகொள்ளமுடியாது. மட்டுமல்ல, இயேசு கூறுகின்றார், "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் இயந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்." ( மத்தேயு 18 : 6 ) என்று. 

வேதாகம சத்தியங்களை எழுதியுள்ளபடி விசுவாசிப்போம். அப்போதுதான் அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோலவும் அவர் கண்டுகொண்டதுபோலவும் தேவனுடைய மகத்துவத்தை நாமும்  கண்ணாரக் காணமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

"இயேசு எப்படிப்பட்டவரோ?"

 'ஆதவன்' 💚நவம்பர் 18, 2024. 💚திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,380


"ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். " ( லுூக்கா 19 : 2, 3 )

ஒரு மனிதனின் ஆர்வத்தைப்பொறுத்தே ஒன்றினை அவன் பெற்றுக்கொள்கின்றான். உலக காரியங்களானாலும் ஆவிக்குரிய காரியமானாலும் இதுவே உண்மையாக இருக்கின்றது. ஒரு பொருளை விரும்பாத அல்லது அது குறித்து எந்த ஆர்வமுமில்லாதவனிடம் அந்தப் பொருளைக் கொடுத்தால் அவனுக்கு அதன் மதிப்புத் தெரியாது. 

ஆம் அன்பானவர்களே, நமக்கு நமது முன்னோர்கள் தேவனைப்பற்றி பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கலாம், வேதாகமத்தை வாசிக்கும்போது தேவனைப்பற்றி பல செய்திகளை வாசித்திருக்கலாம்,  நம்மை வழிநடத்தும் குருக்கள், பாஸ்டர்கள் தேவனைப்பற்றி கூறியிருக்கலாம். ஆனால் அது முக்கியமல்ல, நாம் தனிப்பட்ட முறையில் அவரை அறிந்திருக்கின்றோமா என்பதே முக்கியம்.  அப்படி நாம் அவரை அறிய அதிக கடின முயற்சி எடுக்கவேண்டிய அவசியமில்லை. இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடிய சகேயு போன்ற மனமிருந்தால் போதும். 

சகேயு பணத்துக்காகவோ, உலக ஆசீர்வாதத்துக்காகவோ, நோய் நீங்குவதற்காகவோ அவரைத் தேடவில்லை. மாறாக "அவர் எப்படிப்பட்டவரோ" என்று அறியும்படித் தேடினான். இப்படி நாமும் இயேசு கிறிஸ்துவை வாழ்வில் தேடினால் அவரைத் தனிப்பட்ட முறையில் இரட்சகராக அறிந்துகொள்ளமுடியும். அவனது இருதய ஆர்வத்தை அறிந்த இயேசு அவன் ஏறியிருந்த அத்திமரத்தடியில் வந்து அவனை நோக்கிப்பார்த்தார். 

"என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்." ( ஏசாயா 65 : 1 ) எனும் வசனத்தின்படி அவரைப்பற்றி எதுவும் விசாரித்து அறியாத, அவரை வாழ்வில்  தேடாத  சகேயு அவரைக் கண்டுகொண்டான். ஒரே காரணம் இயேசு எப்படிப்பட்டவரோ என்று அறிய ஆர்வம் கொண்ட அவனது மனதின் ஆசை.  

அன்பானவர்களே, வேதாகமத்தை வாசிக்கும்போது அல்லது நல்ல பிரசங்கங்களைக் கேட்கும்போது, அல்லது  பரிசுத்தவான்களது அனுபவங்களைக்  கேட்கும்போது இவற்றை நாமும் வாழ்வில் அனுபவிக்கவேண்டும், இவர்கள் கூறும் இந்த இயேசு எப்படிப்பட்டவரோ எனும் எண்ணம் நமக்கு உண்மையிலேயே இருக்குமானால் அவரை நாம் தனிப்பட்ட முறையில் கண்டுகொள்ளலாம். நான் ஏற்கெனவே பல தியானங்களில் குறிப்பிட்டபடி தேவன் தன்னை யாரிடமும் வலுக்கட்டாயமாகத் திணிப்பதில்லை. ஆனால் ஒருவருக்கு அவரை அறியவேண்டுமெனும் சிறிதளவு ஆர்வமிருந்தாலும் அவருக்குத் தன்னை வெளிப்படுத்துவார்.

இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடிய  சகேயுவைப்போல அவரை வாழ்வில் பார்க்க ஆசைகொண்டு தேடுவோமானால் அவன் கண்டுகொண்டதுபோல அவரை நாம் தனிப்பட்ட முறையில் கண்டுகொள்வோம். மட்டுமல்ல, அவன் கண்டதுபோல மெய்யான மன மாற்றத்தையும் காண்போம். "இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே." ( லுூக்கா 19 : 9 ) என்று கூறியதுபோல அவர் நம்மைப்பார்த்தும் கூறி நம்மையும்  ஏற்றுக்கொள்வார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                     

Friday, November 08, 2024

மனிதர்களை நம்புவதைவிட...

 'ஆதவன்' 💚நவம்பர் 17, 2024. ஞாயிற்றுக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,379



"மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்." ( சங்கீதம் 118 : 8, 9 )

நாம் ஒரு சமூகமாக வாழ்வதால் பொதுவாக நம்மில் அனைவரும் பல காரியங்களில் மற்றவரைச் சார்ந்து வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. எவர் துணையும் எனக்குத் தேவையில்லை என்று நாம் உலகினில் வாழ முடியாது. இன்றைய தியான வசனம் மனுஷனையும் பிரபுக்களையும் நம்பக்கூடாது என்று கூறவில்லை. மாறாக, அவர்களை நம்புவதைவிடவும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்று கூறுகின்றது. 

சில காரியங்களில் நமக்கு சிலர் உதவுவதாக  உறுதி கூறியிருப்பார்கள்; வாக்களித்திருப்பார்கள். ஆனால் நாம் அதனையே நம்பி இருப்பதைவிட கர்த்தர்மேல் பற்று உள்ளவர்களாக நாம் வாழவேண்டும். காரணம், நமக்கு உதவுவதாக வாக்களித்தவர்களது எதிர்காலம் நமக்குத் தெரியாது. உதாரணமாக, வசதியுள்ளவர்களாக இருந்து நமது குழந்தைகளின் கல்விக்கு இறுதிவரை உதவுவதாக  வாக்களித்த மனிதன் ஏதோ காரணங்களால் பொருளாதாரத்தில் நலிவுற்றுப் போய்விடலாம். அல்லது ஒருவேளை திடீரென்று இறந்துபோகலாம்.  

மட்டுமல்ல, மனிதர்களது குணங்கள் எப்போது மாறும் என்று நாம் சொல்லமுடியாது. எனவேதான் வேதம் கூறுகின்றது, "நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்." ( ஏசாயா 2 : 22 ) என்று. அதாவது, நாம் மனிதர்களது தயவு உதவி இவற்றைப் பெறவேண்டுமானாலும் தேவனது கிருபை நமக்கு அதிகமாகத் தேவையாக இருக்கின்றது.  எனவேதான் இன்றைய தியான வசனம், "கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்" என்று இருமுறை கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே, தேவன் மனிதர்களைபோன்றவரல்ல. "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?" ( எண்ணாகமம் 23 : 19 ) என்று தேவனைப்பற்றி நாம் வாசிக்கின்றோம். மட்டுமல்ல, உலகினில் கர்த்தரால் கூடாத காரியமென்று எதுவுமில்லை. "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? " ( ஆதியாகமம் 18 : 14 ) 

எனவே, மனிதர்களிடம் நாம் உதவியையும் தயவையும் பெற்றாலும் அவர்களை முற்றிலும் சார்ந்து வாழாமல் அவர்கள்மூலம் நமக்கு உதவும் தேவனையே நாம் சார்ந்துகொள்ளவேண்டும். காரணம்,  "அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ." ( தானியேல் 2 : 21 ) எனவே எந்த எதிர்மறையான சூழ்நிலையிலும் அவர் நமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வல்லவராய் இருக்கின்றார். 

யார் நமக்கு உதவுவதாக வாக்களித்தாலும் அதனை நாம் தேவ பாதத்தில் வைத்து ஜெபிப்போம். எந்தச் சூழ்நிலையிலும் தேவன்மேல் உறுதியான நம்பிக்கைகொண்டு வாழ்வோம். மனிதர்களது வாக்குறுதிகள் மேல் முழு நம்பிக்கைவைக்காமல் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்போம்.  ஒரு வழி அடைந்தாலும் அவரால் மறுவழி திறக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் அவரால் நமக்கு உதவிட முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Thursday, November 07, 2024

ஏசாயா 41 : 17

 'ஆதவன்' 💚நவம்பர் 16, 2024. 💚சனிக்கிழமை           வேதாகமத் தியானம் - எண்:- 1,378

"சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்." ( ஏசாயா 41 : 17 )

நமது தேவன் எளிமையும் சிறுமையுமானவர்களை மறந்துவிடுபவரல்ல. மாறாக மற்ற அனைவரையும்விட அவர்களை அவர் அதிக அக்கறையுடன் கவனிக்கின்றார். தாவீது ராஜா இதனை அனுபவபூர்வமாக அறிந்திருந்தார். அவரது குடும்பத்தில் அவர் அற்பமானவராக இருந்தார். எளிமையான ஆடுமேய்ப்பவனாக வாழ்ந்தார். ஆனால் அவரைத்தான் தேவன் இஸ்ரவேலின் ராஜாவாக உயர்த்தினார். இந்த அனுபவத்தில் அவர் கூறுகின்றார், "எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை." ( சங்கீதம் 9 : 18 )

இதனையே இன்றைய தியான வசனத்தில்,  "சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்" என்று தேவனும் கூறுகின்றார். அதாவது எந்த மனித உதவியும் கிடைக்காமல் வெய்யில் காலத்தில் தண்ணீரைத் தேடி அலைந்து நாவறண்டு போனவன்போல அலையும் சிறுமையானவர்களை நான் கைவிடாதிருப்பேன் என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.   

நம்  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தனது மலைப் பிரசங்கத்தில், "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்." ( மத்தேயு 5 : 4 ) என்றும் "நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 10 ) என்றும் கூறவில்லையா? 

தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போதும் துன்பம் நமது வாழ்வில் தொடர்கதையாக இருக்குமானால் நாம் பாக்கியவான்கள். நமக்குத் தேவன் ஆறுதல் தருவார். அதுபோல அநியாயமாக நாம் உலக மனிதர்களால் நெருக்கப்படும்போது, நமக்கு இந்த உலகத்தில் நீதி கிடைக்காமல் போகும்போது நாம் பாக்கியவான்கள் என்கின்றார். 

இந்த உலகத்தில் கோடிக்கணக்கான ஏழைகளும், நீதி மறுக்கப்பட்டவர்களும் உண்டு. ஆனால் ஏன் எல்லோரையும் தேவன் அப்படி உயர்த்தவில்லை என நீங்கள் எண்ணலாம். காரணம் என்னவென்றால், தேவனது பார்வையில் எல்லோரும் தேவனுக்கேற்ற நீதி வாழ்க்கை வாழ்பவர்களல்ல; தேவனுக்காக காத்திருப்பவர்களுமல்ல. இன்றைய தியான வசனம் தேவனுக்கேற்ற வழக்கை வாழ்பவர்களைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகின்றது. வேதாகம வசனங்களை நாம் எப்போதும் ஆவிக்குரிய கண்ணோட்டத்திலேயே பார்க்கப் பழகவேண்டும். உலக அர்த்தம்கொண்டு பார்ப்போமானால் அவை பார்வைக்குப் பைத்தியக்காரத்தனம்போலத் தெரியலாம். 

ஆம் அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் இன்று ஒருவேளை இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளதுபோல சிறுமையும் எளிமையுமானவர்களாகத்   தண்ணீரைத் தேடி (உலக மக்களது உதவியைத்தேடி) அது கிடையாமல்,  தாகத்தால் நாவு வறண்டவர்களாக இருக்கலாம். ஆனால், தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்பவர்களென்றால் கர்த்தராகிய ஆண்டவர் உங்களைப்பார்த்துக் கூறுகின்றார், "கர்த்தராகிய நான் உங்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் உங்களைக் கைவிடாதிருப்பேன்". கலங்காதிருங்கள்.
 
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

காலத்தைப் பயன்படுத்திக்கொள்வோம்

 'ஆதவன்' 💚நவம்பர் 15, 2024. 💚வெள்ளிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,377


"நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 16 )

இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் தேவன் குறிப்பிட்ட நாட்களைக் குறித்துள்ளார். நமது இந்த உலக வாழ்க்கையின் அடிப்படையிலேயே நமது மறுவுலக வாழ்க்கை அமையும். மேலும், இந்த உலகம் பொல்லாத உலகமாய் இருக்கின்றது. நமது ஆன்மாவை பாவத்துக்கு நேராக இழுத்து அதனைத் தீட்டுப்படுத்த உலகினில் பல காரியங்கள் உண்டு. இவை அனைத்தையும் நினைவில்கொண்டு நாம் நமக்குத் தேவன் கொடுத்துள்ள காலத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 17 ) என்கின்றார். ஆம் அன்பானவர்களே, நாம் மதியற்றவர்களைப்போல வாழாமல் நம்மைக்குறித்த தேவச் சித்தம் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். "நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது." (1 தெசலோனிக்கேயர் 4;3) என்று வாசிக்கின்றோம். 

எனவே, பரிசுத்தராகவேண்டும் எனும் எண்ணம் சிறிதளவும் இல்லாமல் வாழ்வது, தேவனைக்குறித்த எண்ணமில்லாமல் வாழ்வது, பாவத்திலேயே  மூழ்கி ஆவியில் மரித்த வாழ்க்கை வாழ்வது போன்ற செயல்கள்   நமக்குக் கொடுக்கப்பட்டக் காலத்தை வீணாக்குவதாகும். "ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து" ( எபேசியர் 5 : 14, 15 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆம் அன்பானவர்களே, எனவே நாம் நமக்குக் கொடுக்கபட்டக் காலத்தை பயனுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு மாணவன் தேர்வுக்குத் தயாராகும்போது எவ்வளவு கவனமுடன் இருப்பான் என்பது நமக்குத் தெரியும். அதுபோல காலத்தை வீணாக்கும் மாணவன் இறுதியில் எப்படி தேர்வு முடிவு வெளியாகும்போது வெட்கப்பட்டு அவமானம் அடைவான் என்பதும் நமக்குத் தெரியும். எனவே நாம் நமது ஆவிக்குரிய காரியங்களில் அதிக அக்கறையுடன் செயல்பட அழைக்கப்படுகின்றோம். 

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய கால ஓட்டத்தில் நாம் முன்னேறிச்செல்ல நமது சுய இச்சைகளும், நமது நண்பர்களும், நமது உடன் பணியாளர்களும் மட்டுமல்ல நமது மனைவியோ கணவனோகூட தடையாக இருக்கலாம். இந்தத் தடைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.  

தேவன் எப்போது வருவார் என்றோ, நமது இறுதி நாட்கள் எப்போது வருமென்றோ நமக்குத் தெரியாது. ஆனால் ஒருவரும் கெட்டுப்போகக்கூடாது என்று தேவன் விரும்புவதால் ஒவ்வொருவருக்கும் தங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கின்றார்.   "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) எனவே  நமக்குக் கொடுக்கபட்டக் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 10 : 4, 5 / 1 Corinthians 10:4, 5

  " ஆதவன் " தியானம் - 1993  ஜூலை 23 வியாழன் 2026     "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச...