Tuesday, November 12, 2024

"என்னத்திற்காக வந்திருக்கிறாய்?"

 'ஆதவன்' 💚நவம்பர் 22, 2024. 💚வெள்ளிக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,384


"அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார்." ( மத்தேயு 26 : 49, 50 )

இன்றைய தியான வசனம் கெத்சமெனி தோட்டத்தில் இயேசுவைக் கைதுசெய்ய  பிரதான ஆசாரியனும் மூப்பர்களும் திரளான மக்களும் யூதாஸ்  இஸ்காரியாத்தோடு வந்தபோது நடந்த சம்பவத்தைக் குறிக்கின்றது. 

இந்த யூதாஸ் இயேசு கிறிஸ்துவோடு மூன்றரை ஆண்டுகள் வாழ்ந்தவன்தான்; அவரைபற்றியும் அவர் செய்த அற்புதங்களையும் கண்ணால் பார்த்தவன்தான். இப்போதும் அவன் இயேசுவை வாழ்த்தவே செய்தான், அவரை முத்தமிட்டான்.  இந்தச் சம்பவம் அவன் வெளிப்பார்வைக்கு  இயேசு கிறிஸ்துவோடு வாழ்பவனாக இருந்தாலும்  உண்மையில் அவரோடு வாழவில்லை என்பதையே குறிக்கின்றது. 

இந்த சம்பவங்கள் நம்மை நாமே நிதானித்துப்பார்க்கவும்  நம்மைத் திருத்திக்கொள்ளவும்  அறிவுறுத்துகின்றது. ஆம் அன்பானவர்களே, இந்த யூதாசைபோலவே நம்மில் பலரும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆலய ஆராதனைகளில் பல ஆண்டுகள் கலந்துகொண்டு இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ளோம் என்று கூறிக்கொள்கின்றோம். யூதாஸ் அவரைப் புகழ்ந்ததுபோல அவரை நமது நாவினால் துதிக்கின்றோம். அவரது சிலுவையை முத்தமிடுகின்றோம். 

ஆனால் இயேசு கிறிஸ்து யூதாஸிடம் கேட்டது போல நம்மிடம், "சிநேகிதனே / சிநேகிதியே  என்னத்திற்காக வந்திருக்கிறாய்?" என்று  கேட்டால் என்ன பதில் கூறுவோம்?  இதுவே நாம் சிந்திக்கவேண்டியது. நம்மில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகித மக்களும் இந்தக் கேள்விக்கு ஏதாவது ஒரு உலக ஆசீர்வாதம் சம்பந்தமான பதிலையே கூறுவார்கள். ஆனால் இந்தக் கேள்விக்கு யூதாஸ் எந்தப்பதிலும் கூறவில்லை. 

நாம் உண்மையில் எதற்காக இயேசு கிறிஸ்துவைத் தேடுகின்றோம்? எதற்காக அவரிடம் வந்து அவரை முத்தம் செய்கின்றோம். உலக ஆசீர்வாதங்களை மட்டுமே நாடி நாம் அவரிடம் வருவோமானால் நாமும் யூதாசைப் போன்றவர்களே. ஆம் அவன் முப்பது வெள்ளிக்காசு கிடைக்கும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்துவிடம் வந்து அவரை வாழ்த்தி முத்தமிட்டான். நாம் அவனைப்போல அறிவிலிகளாக இருக்கக்கூடாது. 

நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவம் பெறவேண்டும் எனும் ஆர்வத்தில் அவரிடம் வருவோமானால் நாம் அவரை வாழ்வில் நம்முள் பெற்று அனுபவிக்கலாம். இல்லாவிட்டால் நாமும் யூதாசைப் போலவே அவரை முத்தமிட்டு நெருங்குகின்றவர்களாகவே இருப்போம். 

"சிநேகிதனே / சிநேகிதியே  என்னத்திற்காக வந்திருக்கிறாய்?" என்று நம் ஒவ்வொருவரிடமும் இயேசு கிறிஸ்து இப்போதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 10 : 4, 5 / 1 Corinthians 10:4, 5

  " ஆதவன் " தியானம் - 1993  ஜூலை 23 வியாழன் 2026     "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச...