DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, November 09, 2024

"இயேசு எப்படிப்பட்டவரோ?"

 'ஆதவன்' 💚நவம்பர் 18, 2024. 💚திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,380


"ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். " ( லுூக்கா 19 : 2, 3 )

ஒரு மனிதனின் ஆர்வத்தைப்பொறுத்தே ஒன்றினை அவன் பெற்றுக்கொள்கின்றான். உலக காரியங்களானாலும் ஆவிக்குரிய காரியமானாலும் இதுவே உண்மையாக இருக்கின்றது. ஒரு பொருளை விரும்பாத அல்லது அது குறித்து எந்த ஆர்வமுமில்லாதவனிடம் அந்தப் பொருளைக் கொடுத்தால் அவனுக்கு அதன் மதிப்புத் தெரியாது. 

ஆம் அன்பானவர்களே, நமக்கு நமது முன்னோர்கள் தேவனைப்பற்றி பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கலாம், வேதாகமத்தை வாசிக்கும்போது தேவனைப்பற்றி பல செய்திகளை வாசித்திருக்கலாம்,  நம்மை வழிநடத்தும் குருக்கள், பாஸ்டர்கள் தேவனைப்பற்றி கூறியிருக்கலாம். ஆனால் அது முக்கியமல்ல, நாம் தனிப்பட்ட முறையில் அவரை அறிந்திருக்கின்றோமா என்பதே முக்கியம்.  அப்படி நாம் அவரை அறிய அதிக கடின முயற்சி எடுக்கவேண்டிய அவசியமில்லை. இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடிய சகேயு போன்ற மனமிருந்தால் போதும். 

சகேயு பணத்துக்காகவோ, உலக ஆசீர்வாதத்துக்காகவோ, நோய் நீங்குவதற்காகவோ அவரைத் தேடவில்லை. மாறாக "அவர் எப்படிப்பட்டவரோ" என்று அறியும்படித் தேடினான். இப்படி நாமும் இயேசு கிறிஸ்துவை வாழ்வில் தேடினால் அவரைத் தனிப்பட்ட முறையில் இரட்சகராக அறிந்துகொள்ளமுடியும். அவனது இருதய ஆர்வத்தை அறிந்த இயேசு அவன் ஏறியிருந்த அத்திமரத்தடியில் வந்து அவனை நோக்கிப்பார்த்தார். 

"என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்." ( ஏசாயா 65 : 1 ) எனும் வசனத்தின்படி அவரைப்பற்றி எதுவும் விசாரித்து அறியாத, அவரை வாழ்வில்  தேடாத  சகேயு அவரைக் கண்டுகொண்டான். ஒரே காரணம் இயேசு எப்படிப்பட்டவரோ என்று அறிய ஆர்வம் கொண்ட அவனது மனதின் ஆசை.  

அன்பானவர்களே, வேதாகமத்தை வாசிக்கும்போது அல்லது நல்ல பிரசங்கங்களைக் கேட்கும்போது, அல்லது  பரிசுத்தவான்களது அனுபவங்களைக்  கேட்கும்போது இவற்றை நாமும் வாழ்வில் அனுபவிக்கவேண்டும், இவர்கள் கூறும் இந்த இயேசு எப்படிப்பட்டவரோ எனும் எண்ணம் நமக்கு உண்மையிலேயே இருக்குமானால் அவரை நாம் தனிப்பட்ட முறையில் கண்டுகொள்ளலாம். நான் ஏற்கெனவே பல தியானங்களில் குறிப்பிட்டபடி தேவன் தன்னை யாரிடமும் வலுக்கட்டாயமாகத் திணிப்பதில்லை. ஆனால் ஒருவருக்கு அவரை அறியவேண்டுமெனும் சிறிதளவு ஆர்வமிருந்தாலும் அவருக்குத் தன்னை வெளிப்படுத்துவார்.

இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடிய  சகேயுவைப்போல அவரை வாழ்வில் பார்க்க ஆசைகொண்டு தேடுவோமானால் அவன் கண்டுகொண்டதுபோல அவரை நாம் தனிப்பட்ட முறையில் கண்டுகொள்வோம். மட்டுமல்ல, அவன் கண்டதுபோல மெய்யான மன மாற்றத்தையும் காண்போம். "இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே." ( லுூக்கா 19 : 9 ) என்று கூறியதுபோல அவர் நம்மைப்பார்த்தும் கூறி நம்மையும்  ஏற்றுக்கொள்வார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                     

No comments: