DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Tuesday, November 12, 2024

செத்த ஈக்களும் சொற்ப மதியீனமும்

 'ஆதவன்' 💚நவம்பர் 21, 2024. 💚வியாழக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,383

  

"செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்." ( பிரசங்கி 10 : 1 )

பரிமளத்தைலம் இனிமையான நறுமணம் கொண்டது. இன்றும் ஜெருசலேம் திருப்பயணம் செல்பவர்கள் பரிமளத்தைலத்தை வாங்கி வருவதுண்டு. சாதாரண நறுமணப் பொருட்களைவிட பரிமளத்தைலம் வித்தியாசமான நறுமணம் கொண்டது. ஆனால் இந்த நறுமணத்தைலம் அதனுள் ஈக்கள் விழுமானால் கெட்டு நாறிப்போகும். இதனையே பிரசங்கி மதிகெட்டச் செயல் புரிபவனுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். 

நாம் சிறப்பான பட்டங்கள் பெற்றிருக்கலாம், மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றவர்களாக இருக்கலாம், ஆனால் நாம் மதிகெட்டத்தனமாக ஒரு சிறிய செயலைச் செய்துவிட்டாலும் அது நமது பெயர் நாறிப்போகச் செய்துவிடும். 

நல்ல பெயரும் புகழும் கொண்ட ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரைக்குறித்து அறிவேன். அவர் பல பட்டங்கள்  பெற்றவர். மட்டுமல்ல நல்ல இரக்ககுணம் கொண்டவர். பலருக்கும் உதவக்கூடியவர். அந்தக் கிராமத்தில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. அனைவரும் அவரை மதித்து ஊரில் நடக்கும் எந்த கூட்டத்திலும் அவரை முன்னிலைப்படுத்தி வந்தனர். இந்தப்  பேராசிரியர் நமது ஊருக்குக் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் என்று பெருமையாகக் கூறிக்கொண்டனர். ஆம், அந்தப் பேராசிரியரின் பெயர் உண்மையிலேயே பரிமளத்தைலம்போல நறுமணமானதாக இருந்தது. 

ஆனால் ஏதோ ஒரு சூழலில் அந்தப் பேராசிரியர் அந்த ஊரிலுள்ள கணவனை இழந்த ஒரு பெண்ணிடம் ஒருமுறை தகாத உறவு கொண்டுள்ளார். அதனை அவர் யாருக்கும் தெரியாது என்று எண்ணிக்கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பெண் கர்ப்பமடைந்துவிட்டார். அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது அவள் தனது கர்ப்பத்துக்கு இவர்தான் காரணம் என்று இந்தப் பேராசிரியரைக் கைகாட்டினார்.  ஊர் மக்களால் அதனை நம்ப முடியவில்லை. இவரா?  ..இவரா? என்று வாய் பிளந்து கூறினர்.

அந்தப் பேராசிரியரால் இந்த அவமானத்தைத் தாங்கமுடியவில்லை. திருமணமான மகன், மகள் அவருக்கு உண்டு. பேரக்குழந்தைகள் உண்டு. இதுவரை அவரது மருமக்கள் அவரைக்குறித்து  பெருமைபட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று எல்லோரும் அவரை அற்பமாகப் பார்த்தனர். அவரால் அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை; அவரால் இந்த அவமானத்தைத் தாங்கமுடியவில்லை. அன்று இரவோடு இரவாக தற்கொலைசெய்து தனது வாழ்வை முடித்துக்கொண்டார். 

செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் என இன்றைய தியான வசனம் சொல்வதுபோல சொற்பமான மதிகெட்டச் செயல் அந்தப் பேராசிரியரை அழிவுக்குநேராகக் கொண்டு சென்றுவிட்டது.  

ஆம் அன்பானவர்களே, இத்தகைய மதிகேடுகள் நமது வாழ்வில் வந்துவிடாமல் நம்மை நாம் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். நமது சுய முயற்சியால் நல்லவராக வாழ முயலும்போது இத்தகைய மதிகேடுகள் நமது வாழ்வில் வந்துவிடலாம். எனவே நாம் தேவனையும் அவரது ஆவியின் வல்லமையையும் நம்பி வாழவேண்டியது அவசியம். சொற்ப மதியீனமும் நம்மைக் கெடுக்காமல் அவர் மட்டுமே நம்மைக் காப்பாற்றி நடத்த முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                  

No comments: