DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, November 09, 2024

தந்திரமானக் கட்டுக்கதையல்ல

 'ஆதவன்' 💚நவம்பர் 19, 2024. செவ்வாய்க்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,381


"நாங்கள் தந்திரமானக்  கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்." ( 2 பேதுரு 1 : 16 )

கிறிஸ்தவர்களாக இருந்தாலும்கூட பலர் வேதத்தில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்களை உறுதியாக நம்புவதில்லை. சில  குருக்கள்கூட பல வேதாகமச் சம்பவங்களுக்கும் இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களுக்கும் வேறு அர்த்தம் கற்பிக்கின்றனர். 

விடுதலை இறையியல் என்ற தப்பறையில் மூழ்கி வாழும் குருவானவர் ஒருவர் பிரசங்கத்தில் இயேசு அப்பங்களைப் பலுக்கச்செய்தது அற்புதமல்ல; மாறாக,  அது  பகிர்தலை விளக்க கூறப்பட்ட சம்பவம் என்று கூறினார். அன்று இயேசு பிரசங்கித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த பலரிடமும் அப்பமும் மீன்களும் இருந்தன. ஆனால் எவரும் உணவு இல்லாத மற்றவர்களோடு அதனைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் முதலில் அந்தச் சிறுவன் தன்னிடம் இருந்ததைக் கொடுத்தவுடன் மற்றவர்களும் தங்களிடம் இருந்ததைக் கொடுக்க முன்வந்தனர். இப்படிச் சேகரித்த அப்பங்களை 12 கூடைகளில் நிரப்பினார்கள். இதுபோலவே தங்களிடம்  குவிந்து கிடக்கும் செல்வத்தை  அனைவரும் பகிர்ந்துகொடுத்தால்  நாட்டில் இல்லாமை நீங்கிவிடும் என்று பிரசங்கித்தார். 

இப்படி முட்டாள்த்தனமாக கிறிஸ்தவ குருக்களே பிரசங்கித்தால் விசுவாசி எப்படி இருப்பான் என்று சிந்தித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட அறிவிலிகளுக்குத்தான், "நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்." என்று இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார்.  

தொடர்ந்து இதனை உறுதிப்படுத்த அவர் கூறுகின்றார், "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்." ( 2 பேதுரு 1 : 17, 18 )

ஆம் அன்பானவர்களே, வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்களைத் தங்களுக்கு ஏற்பத் திரித்துக் கூறுபவர்கள் ஒருபோதும் சத்தியத்தை அறிந்துகொள்ளமுடியாது. மட்டுமல்ல, இயேசு கூறுகின்றார், "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் இயந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்." ( மத்தேயு 18 : 6 ) என்று. 

வேதாகம சத்தியங்களை எழுதியுள்ளபடி விசுவாசிப்போம். அப்போதுதான் அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோலவும் அவர் கண்டுகொண்டதுபோலவும் தேவனுடைய மகத்துவத்தை நாமும்  கண்ணாரக் காணமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

No comments: