Sunday, April 23, 2023

இந்த ஜெபம் தேவனுக்கு ஏற்ற ஜெபம்

ஆதவன் 🌞 819🌻 ஏப்ரல் 26, 2023 புதன்கிழமை






"என் சிறுமையையும் என் துன்பத்தையும் பார்த்து, என்பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்." ( சங்கீதம் 25 : 18 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் தாவீது ராஜா கூறியது. இரண்டே வரிகளைக்கொண்டிருந்தாலும் இந்த   விண்ணப்பம் தாவீது ராஜாவின் மேலான ஆன்மீக அனுபவத்தைக் கூறுகின்றது. 

பொதுவாக சாதாரண மனிதர்கள் என்றால் "ஆண்டவரே என் சிறுமையையும் என் துன்பத்தையும் பார்த்து  அவற்றை நீக்கியருளும்" என்றுதான் மேற்படி ஜெபத்தை ஜெபித்திருப்பார்கள். ஆனால் தாவீது அப்படி ஜெபிக்கவில்லை. மாறாக,  ஆண்டவரே  என்  சிறுமையையும், துன்பத்தையும் பார்த்து என் பாவங்களையெல்லாம் எனக்கு மன்னித்தருளும் என்று ஜெபிக்கின்றார்.

செல்வங்கள், பதவி, அந்தஸ்து இவை அனைத்தையும்விட பாவங்கள் மன்னிக்கப்படுவதே தாவீதின் பார்வையில் முக்கியமானதாக இருந்தது. எனவே அவர் தனது துன்பங்களை நீக்கியருளும் என்று ஜெபிக்கவில்லை. 

இயேசு கிறிஸ்து கூறினார், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று. தாவீது பழைய ஏற்பாட்டு பக்தனாக இருந்தாலும் இந்த தேவ கருத்தை அவர் அறிந்திருந்தார். ஆம், முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத்தான் நாம் தேடவேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் பாவங்கள் அகற்றப்படவேண்டும் என்று அவர் கருதினார். எனவேதான் இப்படி விண்ணப்பம் செய்கின்றார். 

அன்பானவர்களே, நமது ஜெபங்கள் எப்படி இருக்கின்றன என்று சிந்தித்துப்பார்ப்போம். நமது உலக ஆசைகளையும் உலகப் பிரச்சனைகளையும் முன்னிலைப்படுத்தி ஜெபிக்கின்றோமா இல்லை, முதலில் நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் எனும் ஆவல் தாவீதைப்போல நமக்கு இருக்கின்றதா?  

உலகத்தில் நாம் சிறுமைப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கை வாழலாம், நமக்குத் துன்பங்கள் இருக்கலாம், பிரச்சனைகள் இருக்கலாம் இவைகளை மாற்றும் என தேவனிடம் வேண்டுவதைவிட, ஆண்டவரே, எனக்கு இந்தத் துன்பங்களும் பிரச்சனைகளும் உள்ளன.  இவற்றை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றேன். இவைகளுக்கு ஈடாக எனது பாவங்களை மன்னியும் என வேண்டுவோமா? இந்த ஜெபம் தாவீதின் ஜெபத்தைப்போல தேவனுக்கு ஏற்ற ஜெபமாக இருக்கும்.

இதுவே முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவது; இப்படி நாம் வேண்டும்போது  தேவன் நமது மற்ற  தேவைகளைச்  சந்திப்பது மட்டுமல்ல அவைகளை நமக்குக் கூட்டித்  தந்தும்  ஆசீர்வதிப்பார்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, April 22, 2023

எதைக் கேட்பது? எதைத் தேடுவது? ஏன் தட்டுவது?

ஆதவன் 🌞 818🌻 ஏப்ரல் 25, 2023 செவ்வாய்க்கிழமை



























"ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 6 : 3 )

இன்று பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய தெளிவும் நமது வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வுக்கு அவரது தேவையும் உதவியும் பற்றி கிறிஸ்தவர்கள் பலருக்கும் போதிய புரிதலில்லை.  அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவரின் துணை இல்லாமல் நாம் எதனையுமே செய்யமுடியாது. ஆவிக்குரிய வெற்றி வாழ்க்கை வாழ முடியாது.

"உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." ( யோவான் 14 : 17 ) எனத் தனது சீடர்களுக்கு இயேசு கூறினார். இன்றைய வசனம் கூறப்பட்டதன் பின்னணியினைப் பார்ப்போமானால் இது இன்னும் தெளிவாக நமக்குப் புரியும். 

"அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட பந்தி விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 6 : 1 ) அதாவது, உணவு பரிமாறும் வேளையில் தங்களது இனத்து விதவைப் பெண்களை எபிரேயர்கள் சரியாக நடத்தவில்லை என கிரேக்கர்கள் முறுமுறுத்தார்கள். எனவே பந்தி விசாரிப்பைச் சரியாகக் கவனிக்க ஒரு குழு அமைப்பது எனச் சீடர்கள் முடிவெடுக்கின்றனர்.    

"ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்." என்கின்றனர். அதாவது பந்தி விசாரணைச் செய்வது என்பது மிகச் சிறிதான ஒரு பணி. ஆனால் திருச்சபையில் அந்தப் பணியை ஒருவர் செய்வதற்கே பரிசுத்த ஆவியைப் பெற்றவராக இருக்கவேண்டும் எனச் சீடர்கள் முடிவெடுத்தார்கள்.  அப்படியானால் பரிசுத்த ஆவியானவர்  நம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தேவையாக இருக்கின்றார் என்பதை எண்ணிப்பாருங்கள்.

இயேசு கிறிஸ்து கூறினார், "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்." ( யோவான் 14 : 26 ) என்று. எனவே அன்பானவர்களே, நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கவேண்டியது மிக மிகத் தேவையான காரியமாயிருக்கின்றது.   

வெறுமனே சில மதச் சடங்குகளை நாம் கடைபிடிப்பதால் நம்மிடம் பரிசுத்த ஆவியானவர் வந்துவிடுவார் என நாம் எதிர்பார்க்க முடியாது.  ஆவியானவரைப் பெறவேண்டுமெனும் தாகம் நமக்கு வேண்டும். 

"நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்." ( லுூக்கா 11 : 9 ) என்று இயேசு கிறிஸ்து கூறியதைப் பலரும் உலக ஆசீர்வாதங்களுக்காகவே என எண்ணுகின்றனர்.  வசனங்களைத் துண்டு துண்டாக வாசிப்பதால் ஏற்படும் தவறு இது. இயேசு என்னச் சொல்ல வருகின்றார் என்பது தொடர்ந்து வாசித்தால்தான் புரியும். இந்த வார்த்தைகளை இயேசு சொல்லி முடிப்பதைப் பாருங்கள்:- "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா." ( லுூக்கா 11 : 13 )

தேவனிடம் பரிசுத்த ஆவியானவரைக் கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது அவரை அறிந்துகொள்ளும்படி உங்கள் இதயங்களை அவர் திறந்திடுவார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

நல்ல மேய்ப்பன்

ஆதவன் 🌞 817🌻 ஏப்ரல் 24, 2023 திங்கள்கிழமை
























"சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 25 )

ஆடுகள் பொதுவாக மந்தையாக அதாவது கூட்டமாகத்தான் இருக்கும். குறிப்பாக செம்மறி ஆடுகள் கூட்டமாகவே இருக்கும். கூட்டமாக இருக்கும் ஆடுகள் கொடிய விலங்குகள் துரத்தும்போது சிதறி ஓடும். தனித்தனியாக அவை அனாதைபோல அலையும்.  நாம் முன்பு இப்படிச் சிதறிய ஆடுகளைப்போலவே இருந்தோம் என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு.

சரியான வழிநடத்துதல் இல்லாமல், போதிய உணவு கிடைக்காமல், உரிய பாதுகாப்பு இல்லாமல் அலையும் ஆடுகள்போல இருந்த நாம் இப்பொழுதோ கிறிஸ்துவிடம் வந்துவிட்டதால் நம் ஆத்துமாக்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. காரணம் அவர் நல்ல மேய்ப்பனாக இருக்கின்றார்.  

"நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14, 15 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆம், நல்ல மேய்ப்பன் தனது ஒவ்வொரு ஆட்டைப்பற்றியும் அறிந்திருப்பான்; அவைகளுக்குக் காயம் கட்டுவான்; இயலாத ஆடுகளைத் தனது தோளில் தூக்கிச் சுமப்பான். 

தாவீது ராஜா கர்த்தரை நல்ல மேய்ப்பராக பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே கண்டு உணர்ந்திருந்தார். எனவேதான் அவர் கூறுகின்றார், "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்." ( சங்கீதம் 23 : 1) என்று. 

நல்ல மேய்ப்பனுக்கு எங்கு தனது ஆடுகளுக்குப்   போதிய உணவு கிடைக்கும், எங்கு ஆபத்து இருக்கின்றது போன்ற காரியங்கள் தெரிவதால் தனது ஆடுகளைச் சரியான வழியில் நடத்திச் செல்லுவான். மேலும் கொடிய வன விலங்குகள் ஆடுகளைத் தாக்க வரும்போது அவற்றைப் போராடித் துரத்துவான். அப்படித் துரத்தும்போது தனது உயிரையும் அவன் இழக்கக்கூடும். இதனையெல்லாம் அறிந்திருந்த  தாவீது  தொடர்ந்து, "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்." ( சங்கீதம் 23 : 4 ) என்கின்றார்.

தாவீது தீர்க்கதரிசனமாக உணர்ந்து கூறிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், "நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்." ( யோவான் 10 : 11 ) என்று கூறியது மட்டுமல்ல கூறியதுபோல ஆடுகளான  நமக்காகத் தன்  உயிரையும்  கொடுத்தார். 

இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளும் இன்றைய தியானத்தில் அப்போஸ்தலரான பேதுரு கூறும் வார்த்தைகளும் ஆவிக்குரிய அர்த்தமுள்ள உண்மைகளாகும். சிதறுண்ட ஆடுகளாய் எந்த நம்பிக்கையுமில்லாமல் குருட்டாம்போக்கில் நாம் வழிபடும் தேவனல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது ஒரு நல்ல மேய்ப்பனாக இருந்து நம்மை நடத்துவார். 

இனி நாம் சிதறுண்ட அநாதை ஆடுகளைப்போல அலைந்து திரிய வேண்டாம். கர்த்தராகிய இயேசுவை அண்டிக்கொள்வோம். நல்லமேய்ப்பனாகிய அவரே நம்மை  நிலை வாழ்வுக்கு வழி நடத்துவார் என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Friday, April 21, 2023

வேத புரட்டர்கள்

ஆதவன் 🌞 816🌻 ஏப்ரல் 23, 2023 ஞாயிற்றுக்கிழமை


































"வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே." ( தீத்து 3 : 11 )

தேவன் தன்னை எவரிடமும் திணிப்பதில்லை. உலகிலுள்ள எல்லோரும் தன்னை அறியவேண்டுமென்று தேவன் விரும்பினாலும் மனிதர்களது சுய குணமே தேவனை அவர்கள் அறியத் தடையாக இருக்கின்றது.  

கிறிஸ்தவர்களிலும்கூடச்  சிலர் வேத வசனங்களையும், வேத உண்மைகளையும் புரட்டிப் பேசுகின்றனர். காரணம் சுய லாபம். நாம் இத்தகைய மனிதர்களுக்கு வேத உண்மைகளை எடுத்துக் கூறினாலும் இவர்கள் அவற்றை  உண்மையென உள்ளத்தில் உணர்ந்தாலும் தாங்கள் கூறும் தவறான உபதேசத்தையும், தவறான வழிகளையும் விட்டுத் திரும்பமாட்டார்கள். காரணம் சரியான வழியை ஏற்றுக்கொள்வது ஏதோ ஒரு விதத்தில் அவர்களை பாதிப்பதாக இருப்பதால்தான். 

இத்தகைய மனிதர்கள் தங்களை நியாயப்படுத்த, "வேதாகமத்தில் இருப்பது உண்மைதாங்க...ஆனால் அதன்படி யாரும் வாழ முடியாது" என்று தங்கள் தவறுக்கு நியாயம் கற்பிப்பார்கள்.  இப்படி வேத சத்தியத்தை உண்மை என உணர்ந்தாலும் அதனைத் தவிர்ப்பவன்தான் வேத புரட்டன். கிறிஸ்தவத்தில் இத்தகைய வேத புரட்டு ஊழியர்களும் அதிகம்பேர் உள்ளனர். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.

இன்றைய வசனம் கூறுகின்றது, இப்படி வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு என்று. அதாவது இத்தகைய வேதபுரட்டர்களுக்குமுன் நாம் வாதம் செய்து கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை.  அப்படிப்பட்டவன் தானே ஆக்கினைத்தீர்ப்படைய பாவம் செய்தவனாய் இருக்கின்றான். ஆவிக்குரிய மேலான அனுபவங்களை இத்தகைய மனிதர்கள் பெற்றுக்கொள்ளவும் முடியாது.

மேலும், கிறிஸ்துவை அறியாத மக்கள்கூட கிறிஸ்துவைப்பற்றியும் வேத உண்மைகளைப்பற்றியும் நாம் கூறுவதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தங்களை கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் இத்தகைய வேத புரட்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

இதற்கு அடிப்படையான காரணம் உண்மையான மனம் திரும்புதலும் மீட்பு அனுபவமும் இல்லாமல் இருப்பதுதான். ஒருவர் சார்ந்திருக்கும் சபைகளோ ஊழியர்களோ இதற்குக் காரணமாக முடியாது.  யூதாசுக்குக் கிடைத்தது மிக அற்புதமான ஊழியர், வழிகாட்டி, தலைவர், ஆலோசகர். ஆனால் யூதாசின் வாழ்வு தோல்வியடைந்தது. காரணம், தனிப்பட்ட முறையில் அவனிடம் குணங்களில் மாறுதல் ஏற்படவில்லை. மனம்திரும்புதல் இல்லை. கடமைக்காக இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினவன் அவன்.  

அன்பானவர்களே, இத்தகைய மனிதர்கள் நம்மோடு நமது சபைகளில் இருப்பார்கள். ஆனால் எல்லா வேத சத்தியங்களையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவர்களுக்கு உண்மையை இரண்டு மூன்றுமுறை எடுத்துச் சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையானால் அவர்களை விட்டு நாம் விலகிவிடவேண்டும். அதாவது அதற்குமேல் அவர்களிடம் இதுகுறித்து நாம் தர்க்கம் செய்துகொண்டிருக்கக் கூடாது எனத் தனது சீடனான தீத்துவுக்கு அப்போஸ்தலரான பவுல் அடிகள் அறிவுரை கூறுகின்றார்; இந்த அறிவுரை நமக்கும்தான்.

வேத புரட்டர்களை அடையாளம் கண்டு அவர்கள் சத்தியத்தை அறிய ஆலோசனை கூறுவோம். ஏற்றுக்கொள்ளவில்லையானால் நமது முயற்சிகளை அவர்களைத் திருத்துவதிலேயே செலவழிக்காமல் விட்டு விலகுவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Thursday, April 20, 2023

பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

ஆதவன் 🌞 815🌻 ஏப்ரல் 22, 2023 சனிக்கிழமை
























"மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டக்கடவன். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." ( 2 கொரிந்தியர் 10 : 17, 18 )

பெருமை சிலருக்கு உடலோடு ஒட்டிய தோல்போல அவர்களோடு ஒட்டியே இருக்கும். நல்லகாரியங்களில் மட்டுமல்ல பாவ காரியங்களிலும் கூட மேன்மை பாராட்டுகின்ற அற்பர்களாக இருக்கின்றனர் சிலர். ஒரு ஆப் (half) அடித்தாலும் நான் ஸ்டெடியாக இருப்பேன் என பெருமையடிக்கிறான் குடிகாரன். நான் இந்தியாவின் பல்வேறு மாநில பெண்களோடு இன்பம் அனுபவித்துள்ளேன் என பெருமை பேசுகிறான் விபச்சாரக்காரன். இதுபோல தங்களது பதவி, செல்வாக்கு, பணம், அதிகாரம் இவைகளைக்குறித்து பெருமை பேசும்  பலர்  உண்டு.

பொதுவாக பெருமை பேசுபவர்கள் மற்றவர்கள் தங்களை உயர்வாக எண்ணவேண்டும் என்பதற்காகவே இப்படிப் பெருமை பேசுகின்றனர். ஆனால் இத்தகைய பெருமை பேசும் மக்களைவிட்டு சற்று அகன்றவுடன் எல்லோரும் இவர்களது அற்பப் பெருமை பேச்சைக் கேலிபேசிச்  சிரிக்கத்தான் செய்வார்கள்.   மேலும், இப்படிப் பெருமை பேசுபவர்கள் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." என்று கூறுகின்றார். தற்பெருமை பேசி பெருமையோடு அலைந்த அரசியல் தலைவர்கள் அழிந்துபோன உண்மையினை நாம் நேரடியாகக் கண்டுள்ளோம். 

நமது அறிவு, உடல் பலம், செல்வம் இவை எல்லாமே தேவ கிருபையால்தான் நமக்குக் கிடைக்கின்றன. தேவன் நினைத்தால் ஒரே நொடியில் அனைத்தையும் நம்மைவிட்டு எடுத்துக்கொள்ள முடியும். இந்த உணர்வு நமக்கு எப்போதும் இருக்கவேண்டியது அவசியம். எனவேதான், "ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்" ( எரேமியா 9 : 23 ) என எரேமியா மூலம் தேவன் உணர்த்துகின்றார். 

இந்த உலகினில் தேவனை அறியும் அறிவுதான் மேலான அறிவு.  தேவனை வேதாகமத்தைப் படிப்பதாலோ, இறையியல் கல்வி பயில்வதாலோ, ஜெபக்கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதாலோ, பிரசாங்கங்களைக் கேட்பதாலோ, இதுபோன்ற ஆவிக்குரிய தியான கட்டுரைகளை வாசிப்பதாலோ அறிய முடியாது. நம்மை அவருக்கு ஒப்புவித்து, பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரோடு இணைந்த வாழ்க்கை வாழ்வதாலேயே அறிய முடியும். 

இதுவே உலகினில் மேலான அறிவு. தேவனை அறியாத மனிதன் அழிந்துபோகும் மிருகத்துக்கு ஒப்பாயிருக்கின்றான். எனவேதான் "மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 9 : 24 ) என வாசிக்கின்றோம்.

அன்பானவர்களே, தேவன் நமக்கு நல்ல வேலை, அறிவு, அழகு, அந்தஸ்து, செல்வம், புகழ் தந்து உயர்த்தும்போது மனத் தாழ்மையாய் இருக்கக் கற்றுக்கொள்வோம். "பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Monday, April 17, 2023

சூழ்நிலைகளையே மாற்றவல்ல தேவனை நோக்கிப்பார்ப்போம்.

ஆதவன் 🌞 814🌻 ஏப்ரல் 21, 2023 வெள்ளிக்கிழமை
































"எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்." ( சங்கீதம் 57 : 2 )

தேவன் தெரிந்துகொண்ட அபிஷேகிக்கப்பட்ட மனிதனாக இருந்தாலும் தாவீதின் ஆரம்ப வாழ்க்கை போராட்ட வாழ்க்கையாகவே இருந்தது. இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை அவர் சவுலுக்குத் தப்பி ஓடித்  தன் உயிரைக் காப்பாற்ற மலையிலுள்ள குகையில் பதுங்கியிருக்கையில் கூறியது. 

இன்று நாம் இந்த வசனங்களை வீட்டில் பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்துகொண்டோ அல்லது சபை ஆராதனையில் இருந்துகொண்டோ கூறலாம். அது மிகவும் எளிது. ஆனால் எந்தநேரமும் தனது உயிர் பறிபோகலாம் என்ற இக்கட்டான நிலையில் இருந்துகொண்டு தாவீது இந்த விசுவாச அறிக்கையைக் கூறுகின்றார். 

தான் இந்த வசனத்தைக் கூறுகையில் இருந்த நிலைமையைத் தாவீது பின்வருமாறு கூறுகின்றார். 

"என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 57 : 4 )

இந்த இக்கட்டான நிலையிலிருந்து என்னைக் காப்பாற்றும் ஆண்டவரே என்று அவர் கூறவில்லை. மாறாக, தேவன் அவரைக் காப்பாற்றிவிட்டார் எனும் உறுதி தேவன் காப்பாற்றுமுன்னரே தாவீதுக்கு இருந்தது. எனவேதான், "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவன்" என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, இதுதான் விசுவாசம். இன்று நாமும் இத்தகைய விசுவாச அறிக்கையினை நமது வாழ்க்கையில் அறிக்கையிடப் பழகவேண்டும். கடன் பிரச்சனைகள், தீராதநோய்கள், வறுமை, வேலையில்லாமை, சொந்தங்களால் புறக்கணிப்பு போன்ற எந்த நிலையிலுமிருந்தும் தேவன் நம்மைக் காப்பாற்றி விடுவிக்க வல்லவராய் இருக்கின்றார். நமது தற்போதைய நிலைமை அவருக்குத் தெரியும். தாவீதைப்போல, "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்." என்று உறுதியாகச் சொல்வோம். 

சூழ்நிலைகள் தேவனைத் தடுக்க முடியாது. காரணம், சூழ்நிலைகளையே மாற்றவல்லவர் நமது தேவன். எனவே, சூழ்நிலைகளையல்ல சூழ்நிலைகளையே  மாற்றவல்ல தேவனை நோக்கிப்பார்ப்போம். நமக்காக அவர் அனைத்தையும் செய்து முடித்துவிட்டார் என்று விசுவாசிப்போம்; தாவீதைப்போல அதனை அறிக்கையிடுவோம்.  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

மோசேயைப்போல உறுதியுடன்........

ஆதவன் 🌞 813🌻 ஏப்ரல் 20, 2023 வியாழக்கிழமை















"தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." ( சங்கீதம் 90 : 15 )

மனிதர்கள் எல்லோரும் எப்போதும் உயர்ந்த நிலையிலேயே இருந்துவிடுவதில்லை. சிலருடைய வாழ்க்கைப்  பல ஆண்டுகளாக  சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கும். சமுதாயத்தாலும் சொந்தங்களாலும், அற்பமாக எண்ணப்படும் வாழ்க்கையாக இருக்கும். வேறு சிலர் பல ஆண்டுகளாக செல்வம் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை வாழ்வார்கள். ஆனால் ஒரு தலைமுறை மாறி அடுத்த தலைமுறையில் எல்லாமே தலைகீழாகிவிடும். ஆனால் பொதுவாக மனிதர்கள் இதனை எண்ணுவதில்லை. பணம் வந்தவுடன் பெரும்பாலானோர்பிறரை அவமதிக்கின்றனர்.   

ஒருமுறை ஒரு வயதான சகோதரி என்னிடம் தங்களது குடும்ப நிலைமைகுறித்து பேசும்போது, "பிரதர், முன்பு நாங்கள் நல்ல வசதியாக வாழ்ந்தோம். எங்க வீட்டுக்காரர் இறந்தபின்பு வருமானம் இல்லை. படித்த எனது இரண்டு மகன்களுக்கும் வேலை இல்லை, திருமண வயதில் மகள் வேறு இருக்கின்றாள்......எங்களை எங்கள் சொந்தக்காரர்கள் ஒதுக்கியே வைத்துள்ளனர். எங்களோடு பேசினால் ஒருவேளை பண உதவி கேட்டுவிடுவோமோ என்று எங்களை ஒதுக்குகின்றனர்". என்று கூறி வருத்தப்பட்டார். 

அவருக்காக ஜெபித்துவிட்டு, இன்றைய வசனத்தை அவர்களுக்குச்சொல்லி  அவர்களையும் இந்த வசனத்தைச் சொல்லி ஜெபிக்கச் சொன்னேன். ஆம், இன்றைய வசனம் தேவ மனிதனாகிய மோசேயின் ஜெபமாகும். "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." என ஜெபிக்கின்றார் மோசே. 

மோசேயின் வாழ்க்கை நாற்பது நாற்பது நாற்பதாக பகுக்கப்பட்ட வாழ்க்கை. முதல் நாற்பது ஆண்டுகள் பார்வோனின் மகளின் மகனாக அரண்மனை வாழ்க்கை, அடுத்த நாற்பது ஆண்டுகள் வானாந்தர வாழ்க்கை. ஆடுகளோடு வெய்யிலிலும் மழையிலும் வனாந்தரத்தில் ஆடுமேய்க்கும் வாழ்க்கை. இந்தத் துன்பங்களை மோசே ஜெபித்ததுபோல தேவன் மகிழ்ச்சியாக்கினார். ஆம்,  அவரது வாழ்வின் இறுதி 40 ஆண்டுகள் தேவனோடு நடக்கும் வாழ்க்கையினை தேவன் அவருக்குக் கொடுத்தார்.  

அன்பானவர்களே, ஒருவேளை இதனை வாசிக்கும் நீங்களும் துன்பத்தில் இருக்கலாம். ஊராரால், சொந்தங்களால் சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழலாம். கலங்காதிருங்கள். மோசேயைப்போல உறுதியுடன் தேவனைப் பற்றிக்கொண்டு "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்" என்று வேண்டுதல் செய்வதே சரியானது.

சிறுமைப்படுத்தப் பட்டவர்களின் கண்ணீரைப் பார்க்கின்றவர்  நமது தேவன். நிச்சயமாக அற்புதம் செய்வார். நாம்  சிறுமைப்படுத்தப்பட்ட நாட்களுக்குச் சமமாக மட்டுமல்ல, அதற்கும் அதிகமாகவே நம்மை  மகிழச் செய்வார். பக்தனாகிய யோபுவின் சரித்திரம் இதனையே விளக்குகின்றது. தேவன்மேல் அசைக்க முடியாத விசுவாசத்தோடு இருந்த யோபுவின் அவமானங்களையும் கண்ணீரையும் தேவன் மாற்றவில்லையா? 

"கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்" ( யோபு 42 : 12 ) என்று வேதம் கூறுகின்றது. அன்பானவர்களே, நண்பர்களால், ஊராரால் அற்பமாக எண்ணப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட  யோபுவை தேவன்  ஆசீர்வதித்ததுபோல உங்களையும் ஆசீர்வதிப்பார். கலங்காதிருங்கள்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, April 15, 2023

தேவனுக்கு ஒப்பானது உலகினில் எதுவுமே இல்லை.

ஆதவன் 🌞 812🌻 ஏப்ரல் 19, 2023 புதன்கிழமை





















"தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்.....இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்..." (ரோமர்- 1:25,26)

ஆதிகால மனிதன் உலகினில் தான் கண்டு பயப்பட்ட  அனைத்தையும் வணங்கத் தொடங்கினான். சூரியன், நெருப்பு, காற்று, பாம்பு, சிங்கம் எனப் பலவற்றையும் வணங்கியதற்கு மனிதனது பயமே காரணம். இவை அனைத்தும் படைக்கப்பட்டவையே என்றும் இத்தகைய பயப்படத்தக்கவற்றைப் படைத்தவர் எவ்வளவு மகத்துவமுள்ளவராக இருப்பார் எனவும் மனிதன் எண்ணியிருந்தால் இவைகளை வணங்கியிருக்கமாட்டான்.

இப்படி,படைத்தவரை சேவிப்பதுபடைக்கப்பட்ட பொருட்களை சேவிப்பது என இரு வேறு நிலைகளை பவுல்  அடிகள் இங்கு விளக்குகின்றார்.         இப்படி படைக்கபட்டப் பொருட்களை வணங்கக் காரணம் ஒன்று பயம் இன்னொன்று இச்சை. அதாவது, படைக்கபட்டப் பொருட்கள் கண்களுக்குத் தெரிவதால் அவற்றின்மேலுள்ள ஆசை.

அன்று ஏதேனில் துவங்கியது இந்த நிலைஆதாமும் ஏவாளும் படைத்த தேவனது கட்டளையை மீறி தேவன் தடை செய்த படைக்கப்பட்ட பொருளான கனியின்மேல் ஆசை கொண்டார்கள்அதனால் தேவனது சாபத்துக்கு உள்ளானார்கள். காரணம் இச்சை. "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்." ( ஆதியாகமம் 3 : 6 ) என்று வாசிக்கின்றோம்.

இன்றும் மனிதன் இதையே செய்கின்றான்தேவனைவிட உலகப் பொருட்கள்மேல் ஆசை கொள்வது சிருஷ்டியை தொழுது சேவிப்பதுதான்இப்படி தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருள்மேல் ஆசை கொள்வதால்தான் இழிவான "இச்சைமனிதனில் பிறக்கின்றது என இந்த வசனம் சொல்கிறது

தேவனுக்கு ஒப்பானது உலகினில் எதுவுமே இல்லைஆனால் இன்று மனிதர்கள் பணம்பதவி , பெண் ஆசைமண்ணாசை என  இழிவான இச்சைகளில் சிக்கி தேவனது சாபத்துக்கு உள்ளாகின்றார்கள். காரணம், இத்தகைய ஆசை கொள்வதும் படைத்தவரை விட்டு படைக்கப்பட்டதைஆராதிப்பதுதான்.  மட்டுமல்ல இப்படி இழிவான இச்சைகளில் சிக்கி இருப்போர்தங்களைப்போல  "அவைகளை செய்கின்ற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்." (ரோமர் -1;32) என்கின்றார் பவுல் அடிகள். 

படைத்தவரை வணங்கி ஆராதிப்பதும் அவற்றைப் படைத்த வல்லமையான தேவனுடன் இணைவதும்தான் தேவனுடைய சித்தம். ஆனால் இந்தத் தேவ சித்தத்தை பொய் என மாற்றி தேவனை ஆராதிக்காமல் தேவனால் படைக்கப்பட்ட பொருட்களை ஆராதிக்கின்றார்கள்.

அன்பானவர்களேமனிதனது வேசித்தன செயல்பாடுகளுக்கு காரணமும் இச்சையேஇதன்பொருட்டே இழிவான இச்சை  நோய்களும் சாபங்களும்மனிதனைத் தொடர்கின்றன.  ஆம் இவை அனைத்துக்கும்  காரணம் தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருட்கள்மேல்ஆசைகொள்வதே. எனவே, எந்த சூழ்நிலையிலும் படைக்கப்பட்டப் பொருள்களுக்கு முதலிடம் கொடுக்காமல் படைத்த தேவனே போதுமென வாழ்வோம்நமது அனைத்துத் தேவைகளையும் அவரே சந்திப்பார்   


தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

பிரமாண்ட சாம்ராஜ்யத்தின் ராணி

ஆதவன் 🌞 811🌻 ஏப்ரல் 18, 2023 செவ்வாய்க்கிழமை


























"எஸ்தர்,  மொர்தெகாயிடத்தில்  வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்." ( எஸ்தர் 2 : 20 )

இன்றைய காலத்தில் சிலர் பெற்ற தாய்தகப்பனையே  பாரமாக எண்ணி வீட்டைவிட்டுத் துரத்துவதையும் முதியோர் இல்லங்களில் சேர்ப்பதையும் நாம் வாழ்வில்  பார்க்கின்றோம். இன்னும், நன்றி மறக்கும் மக்களையும் நாம் வாழ்வில் சந்திக்கின்றோம்.   தங்களது காரியம் முடிந்தபின்னர் மெதுவாகக் கைகழுவி விடுவார்கள். மேலும் சிலர் அந்தஸ்து கருதி தங்களைவிட பொருளாதாரத்திலும் பதவியிலும் தாழ்ந்தவர்களைத் தங்கள் உறவினர்கள் என்று கூறத் தயங்குவார்கள்.  

ஆனால், சாதாரண மொர்தெகாய் எனும் மனிதனால் வளர்க்கப்பட்ட எஸ்தர் குறித்து நாம் வேதத்தில் வித்தியாசமான செய்தியைப் பார்க்கின்றோம். உண்மையில் எஸ்தர் ஒரு அநாதை. மொர்தெகாய் எனும் யூதனின் சித்தப்பா மகள். "அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்." ( எஸ்தர் 2 : 7 ) என்று வாசிக்கின்றோம். 

இந்த எஸ்தர் இந்தியா முதல் எத்தியோப்பியா வரைக்குமுள்ள 127 நாடுகளை அரசாண்ட பிரமாண்ட சாம்ராஜ்யத்தின் ராணியாகிவிட்டாள். அகாஸ்வேர் ராஜாவின் மனைவியாகிவிட்டதால் இப்போது அவள் இந்த சாம்ராஜ்யத்தின் பட்டத்து ராணி.  ஆனால் அவளை வளர்த்து ஆளாக்கிய மொர்தெகாய் இப்போது ராஜாவின் அரண்மனை வாசல் காக்கும் காவல்காரன்!!  

இப்படி உயர்த்தப்பட்ட எஸ்தரைக் குறித்துதான் இன்றைய வசனம் கூறுகின்றது "எஸ்தர் மொர்தெகாயிடத்தில் வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்" என்று. பெரிய சாம்ராஜ்யத்தின் ராணியானபின்பும் சாதாரண வாயில்காப்போனாகிய மொர்தெகாயை நன்றியோடு நினைவுகூர்ந்ததால்தான் அவனது சொல்கேட்டு நடந்தாள்.   

அன்பானவர்களே, இப்படி அவள் நடந்ததால் ஏற்பட்ட விளைவு நமக்குத் தெரியும். எஸ்தரைக்கொண்டு யூதர்களுக்கு மிகப்பெரிய மீட்பினை தேவன் ஏற்படுத்தினார். அவளால் யூதகுலம் அழியாமல் காப்பாற்றப்பட்டது. இன்றைய மனிதர்களைப்போல  எஸ்தர் நன்றி இல்லாமல் தன்னை வளர்த்த மொர்தெகாயை தவிர்த்து தனது பட்டத்து ராணி வாழ்க்கையையே பெரிதாக எண்ணியிருப்பாளேயானால் அவளது வாழ்வும் யூத குலமும்  அழிந்திருக்கும். 

நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தான் ஜனாதிபதியானபின்பும் மறக்காமல் தனக்குப் பாடம் நடத்திய ஆசிரியரை நினைவுகூர்ந்து அவரை நேரடியாகச் சென்று பார்த்தது செய்தித் தாள்களில் வெளியாகி இருவரது மதிப்பையும் உயர்த்தியதை நாம் அறிவோம். 

வாழ்வில் எவ்வளவு பெரிய உயர்வு நமக்கு வந்தாலும் நாம் கடந்துவந்த பாதைகள், நமக்கு உதவியவர்களை மறக்காமலிருப்போம். ஏனெனில் எல்லா காரியத்துக்கும் ஒரு காரணம் உண்டு. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள உயர் பதவிகள் அந்தஸ்து இவற்றின் வேர் நம்மை ஒருகாலத்தில் தாங்கிப்பிடித்த மக்கள்தான். அவர்களை மதிக்கும்போதுதான்  தேவ சமாதானம் நம்மை நிரப்பும். "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது.......................................நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்." ( கொலோசெயர் 3 : 15 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டாம்

ஆதவன் 🌞 810🌻 ஏப்ரல் 17, 2023 திங்கள்கிழமை





















"என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 30 : 2 )

வேதாகம அடிப்படையில் எகிப்து என்பது அடிமைத்தன வாழ்வைக்  குறிக்கின்றது. அது பாவத்துக்கு அடிமையாகிப்போன வாழ்வு. இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து மோசேமூலம் விடுவித்து வழி நடத்திய தேவன் அவர்களை மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டாம் என்று எச்சரித்தார். எகிப்துக்குத் திரும்புவோம் எனப்  பிடிவாதம்பிடித்த மக்களைத் தண்டித்தார். 

ஆம், பழைய ஏற்பாட்டு சம்பவங்களும் வசனங்களும் புதிய ஏற்பாட்டுக்கு நிழலாட்டமாய் இருக்கின்றன. மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து கானானுக்கு வழி நடத்தியதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து பரம கானானை நோக்கி வழி நடத்துகின்றார். 

எனவேதான் தேவன் பல்வேறு எச்சரிப்புகளைக் கொடுத்தார்.

"கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால், நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்துவரும், அங்கே சாவீர்கள்." ( எரேமியா 42 : 15,16 )

"என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும் (எரேமியா 42:18)

புதிய ஏற்பாட்டில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஒருவர் பழைய பாவ வாழ்கைக்குத் திரும்புவதை எகிப்துக்குத் திரும்பிச்  செல்வதாக எடுத்துக்கொள்ளலாம். எனவேதான் இன்றைய வசனம் எகிப்துக்குப் போகிறவர்களுக்கு ஐயோ என்று கூறுகின்றது. இதனையே அப்போஸ்தலரான பேதுரு தனது நிருபத்தில், "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என எழுதுகின்றார். 

ஒருவர் பழைய பாவ வாழ்க்கையைத் தேடுவதற்கு உலக ஆசைதான் காரணமாய் இருக்கும். செல்வம், பதவி, அந்தஸ்து இவைகளுக்காக ஒருவர் பழைய எகிப்து வாழ்க்கையைத் தேடலாம். அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரைத் தேடாமல் அவரைவிட்டுப் பின்மாறிடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம்.  

"சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ! (எசாயா 31:1) என வேதம் நம்மை எச்சரிக்கின்றது. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 10 : 4, 5 / 1 Corinthians 10:4, 5

  " ஆதவன் " தியானம் - 1993  ஜூலை 23 வியாழன் 2026     "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச...