Tuesday, July 26, 2022

பிசாசின் செயல்பாடுகளுக்கு விலகி நில்லுங்கள்

 

ஆதவன் 🖋️ 546 ⛪ ஜுலை 27, 2022 புதன்கிழமை


"ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்." ( யாக்கோபு 4 : 7 )

தேவனுக்குக் கீழ்படிந்திருத்தல் என்பது அவரது கட்டளைகளைக் கடைபிடிப்பதைக் குறிக்கின்றது. அதுபோல பிசாசுக்கு எதிர்த்து நிற்பது என்று  சொல்வது, கத்தியையும் துப்பாக்கியையும்  எடுத்துக்கொண்டு பிசாசு எங்கே என்று தேடி அதனைத் துரத்துவதோ அல்லது பேய் ஓட்டும் ஊழியர்களைக் கொண்டு பேய் ஓட்டுவதோ அல்ல; மாறாக, பிசாசின் செயல்பாடுகளைச் செய்யாமல் அவற்றுக்கு விலகி நிற்பது. 

இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த வசனத்திற்கு நேர் எதிராகச் செயல்படுகின்றார்கள். ஆம், அவர்கள் தங்கள் செயல்பாடுகளால் பிசாசுக்குக் கீழ்படிந்திருக்கிறார்கள், தேவனுக்கு எதிர்த்து நிற்கிறார்கள்.  எனவே பிசாசு விலகி ஓடிப்போவதற்குப் பதிலாக இவர்களோடு  பாய்போட்டுப் படுத்துக்கொண்டுள்ளான்.

ஆதாம் ஏவாள் செய்த அதே ஆதி பாவமே மக்களிடம் இன்றும் தொடருகின்றது. தேவன் ஆதாம் ஏவாளிடம் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கூறினார். (ஆதியாகமம் 2:17) ஆனால் பிசாசு:-

"நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்"  (ஆதியாகமம் 3 : 4,5 ) என்று கூறியது. அவர்கள் தங்கள் செயல்பாடுகளால் பிசாசுக்குக் கீழ்படிந்து தேவனுக்கு எதிர்த்து நின்றார்கள்.  

இன்று தங்களது பிரச்சனைகளுக்கு தேவனுக்கு எதிரான தங்கள் செயல்பாடுகளே காரணம் என்பதைப்  பல கிறிஸ்தவர்கள் உணர்வதேயில்லை.  அவர்கள் எதற்கெடுத்தாலும் சாத்தான் மேல் பழிபோட்டு, யோபுவைச் சோதித்ததுபோல சாத்தான் தங்களைச் சோதிப்பதாகக் கூறிக்கொண்டு அதற்காக ஊழியர்களைத்தேடி ஓடுகின்றனர். ஆனால் தாங்கள் யோபுவைபோல உத்தமர்களாய் இருக்கின்றோமா என்று எண்ணிப்பார்ப்பதில்லை.

அன்பானவர்களே, எனவேதான் இன்று ஆவிக்குரிய சபை ஊழியர்களில் பேய் ஓட்டும் ஊழியர்கள் அதிகரித்துவிட்டனர். மக்களை தேவனுக்கு நேராக மனம்திரும்பச் செய்யாமல் பேய் ஓட்டும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  பில்லி சூனிய கட்டு அவிழ்க்கப்படும் என்று போஸ்டர், நோட்டிஸ், ஒலிபெருக்கி அறிவிப்பு கொடுத்து  மந்திரவாதி நிலைமைக்கு பல ஊழியர்கள் தங்களை கொண்டுசென்றுவிட்டனர். 

கர்த்தரது மெய்யான இரட்சிப்புக்கு ஏதுவாக மக்களை நடத்தினாலே போதும் என்ற அடிப்படை அறிவற்ற ஊழியர்கள் கிறிஸ்தவத்தின் சாபக்கேடாக இருக்கின்றனர்.

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; கர்த்தரோடு இசைந்திருங்கள்; பிசாசின் செயல்பாடுகளுக்கும்  பிசாசு ஓட்டும் ஊழியர்களுக்கும் விலகி நில்லுங்கள், அப்பொழுது பிசாசு உங்களைவிட்டு ஓடிப்போவான்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Sunday, July 24, 2022

கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறைந்திட ஒப்புக்கொடுப்போம்.

 ஆதவன் 🖋️ 545 ⛪ ஜுலை 26, 2022 செவ்வாய்க்கிழமை


"கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்."( கலாத்தியர் 2 : 20 )

அப்போஸ்தலராகிய பவுல் அடிகள் இந்த வசனத்தில் இரண்டுவித பிழைத்திருத்தலைக் குறித்துப்  பேசுகின்றார். ஒன்று ஆவிக்குரிய பிழைத்திருத்தல் இன்னொன்று சரீர விதமாகப் பிழைத்திருத்தல். இரண்டு பிழைத்திருத்தலும் நமக்கு அவசியம். 

முதலாவது பிழைத்திருத்தல் என்பது, பாவத்தால் மரித்த ஆத்துமம் கிறிஸ்துவால் பிழைத்திருப்பதைக் குறிக்கின்றது.  எனது உடலையும் ஆத்துமாவையும் ஒடுக்கி கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுபோல அறையப்பட ஒப்புக்கொடுத்தேன். எனவே இப்போது கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கின்றேன். இப்போது பழைய பவுல் அல்ல, இயேசு கிறிஸ்துவே எனக்குள் வாழ்கின்றார் என்கின்றார். 

இது நாம் அனைவரும் செய்யவேண்டிய முக்கியமான ஆவிக்குரிய காரியம். நமது உடலையும் ஆத்துமாவையும்  கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து நமது பாவ மனிதன் அழிவுற நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். "அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக் கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்." ( ரோமர் 6 : 11 )

இப்படி நாம் நமது ஆத்துமாவையும் சரீரத்தையும் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து வாழும்போது அவர் நமது உடலையும் நோய்களிலிருந்து காத்துக்கொள்வார். மட்டுமல்ல, இந்த உலகத்தில் ஏற்படும் விபத்துக்கள் சடுதி மரணங்கள் இவைகளிலிருந்தும் நாம் காக்கப்படுகின்றோம். 

உடலளவில் நாம் நோயில்லாமல் பிழைத்து வாழ்கின்றோமென்றால் அது கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால்தான். இதனையே, நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்."( கலாத்தியர் 2 : 20 ) என்கின்றார் பவுல் அடிகள். 

அன்பானவர்களே, நாம் இன்று உலகத்தில் பிழைத்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்றால் அது கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால்தான். உலகினில் கிறிஸ்துவை விசுவாசியாதவர்களும் சுகத்தோடு வாழ்வதை நாம் பார்க்கின்றோம். தேவன் கிருபையுள்ளவரும் மனிதரில் வேற்றுமை பாராட்டத்தவருமாக இருப்பதால் அவர் பலரையும் வாழச் செய்கின்றார். ஆனால், ஏற்கெனவே நாம் பார்த்த முதலாம் பிழைத்திருத்தல் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே சாத்தியம்.  

உடலளவில் இந்த உலகத்தில் பிழைத்து வாழ்வதோடு ஆவிக்கேற்றபடி கிறிஸ்து நமக்குள் வாழக்கூடிய பிழைதிருத்தலோடு வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. அத்தகைய பிழைத்திருத்தலுக்கு தகுதியுள்ளவர்களாக மாறிட நமது பாவத்துக்கு கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறைந்திட நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

செத்தவன்போல இருக்காதே, விழித்துக்கொள்!

 ஆதவன் 🖋️ 544 ⛪ ஜுலை 25, 2022 திங்கள்கிழமை

"ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." ( எபேசியர் 5 : 14 )

அதிகமான தூக்கம் மனிதனின் வாழ்வை நாசமாக்கும். தூங்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து நமது அன்றாட வேலைகளைச் செய்யாமலிருந்தால் தரித்திரம்தான் நம்மைத் தொடரும். " .........................."தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்." ( நீதிமொழிகள் 23 : 21 ) என்கின்றது நீதிமொழிகள். அதாவது சோம்பலாய் தூக்கத்திலேயே நாட்டம்கொண்டு இருப்போமானால் உடுத்துவதற்கு நல்ல ஆடை கூட இல்லாத நிலைமை ஏற்பட்டு கந்தலைக் கட்டிக்கொண்டு திரியவேண்டியிருக்கும்.

ஆனால் பவுல் அடிகள் இங்குக் குறிப்பிடுவது ஆவிக்குரிய தூக்கத்தைக்குறித்து. அதாவது ஆத்தும காரியங்களைக்குறித்து எந்தவித சிந்தனையுமில்லாமல் உலக காரியங்களையே எண்ணி ஆத்மத் தூக்கத்திலேயே இருப்பதைக் குறிப்பிடுகின்றார். அத்தகைய மனிதன் செத்தவர்களுக்குச் சமம் என்று பவுல் கருதுகின்றார். 

எனவேதான், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு. செத்தவன்போல இருக்காதே, விழித்துக்கொள் என்று அறிவுறுத்துகின்றார்.  ஆவிக்குரிய சிந்தனையே இல்லாமல் உலக காரியங்களையே எண்ணி அவற்றுக்காகவே உழைத்துக் கொண்டிருந்தோமானால் நாமும் இருளடைந்தவர்களாக இருப்போம். நம்மைக்கொண்டு யாருக்கும் எந்த பயனுமிராது. 

கிறிஸ்துவோடு நம்மை இணைத்துக்கொண்டு ஆவிக்குரிய வாழ்வில் வளருவோமானால் கிறிஸ்துவின் மெய்யான ஒளி நம்மேல் துலங்கும். இதனையே, "அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." என்கின்றார் பவுல். எனவே நாம் மற்ற உலக மக்களைப்போல இருக்கக்கூடாது. "ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 6 )

ஆவிக்குரிய வாழ்வில் விழிப்புடன் இருக்கும்போது பல்வேறு துன்பங்களும் பிரச்சனைகளும் நம்மை நெருக்கலாம். ஆனால் நாம் இப்போது தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டோம் ஆதலால்,  பகலுக்குரியவர்களாக மாறிவிட்டோம்.    எனவே, பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக் கடவோம். ( 1 தெசலோனிக்கேயர் 5 : 8 )
 
அன்பானவர்களே, ஆதலால் ஆவிக்குரிய தூக்கத்தில் இருக்கின்ற நாம் விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திருக்க வேண்டியது அவசியம்.  அப்பொழுது மட்டுமே கிறிஸ்து நம்மைப் பிரகாசிக்க முடியும். கிறிஸ்து நம்மைப் பிரகாசிக்கும்போது மட்டுமே நம்மூலம் மற்றவர்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளமுடியும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Friday, July 22, 2022

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்

 ஆதவன் 🖋️ 543 ⛪ ஜுலை 24, 2022 ஞாயிற்றுக்கிழமை

"அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 )

காபிரியேல் தூதன் கூறிய செய்தியைக் கேட்டு அன்னை மரியாள் எலிசபெத்தை சந்திக்கச்செல்லுகின்றாள். எலிசபெத்து மரியாளைப்பார்த்து, "என் ஆண்டவரது தாயார் என்னிடத்தில் வரக்கூடிய பாக்கியம் எனக்கு எதனால் கிடைத்தது" என ஆச்சரியப்பட,  அன்னை மரியாள் பாடிய புகழ் பாடலில் இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகளைக் கூறுகின்றார். 

ஆம், கர்த்தரது இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு இந்தத் தலைமுறையில் மட்டுமல்ல, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து இருக்கும் என்பதே இந்த வசனம் கூறுவது. 

கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது ஒரு போலீஸ்காரரைப் பார்த்துப் பயப்படுவதுபோலவோ அல்லது ஒரு ஆசிரியரைப் பார்த்து மாணவன் பயப்படுவதுபோல பயப்படுவதையோ குறிக்கவில்லை.  

"தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்." ( நீதிமொழிகள் 8 : 13 ) என நீதிமொழிகள் நூலில் வாசிக்கின்றோம். 

தீமையை வெறுக்கக்கூடிய மனம் நமக்கு வேண்டும். "பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்." என்று இந்த வசனம் கூறுகின்றது. இத்தகைய குணங்கள் மிகுதியாக அரசியல்வாதிகளிடம் இருப்பதை நாம் அறிவோம். பதவிக்காகவும் தாங்கள் சார்ந்துள்ள கட்சி செய்வதை நியாயப்படுத்தவும் அரசியல்வாதிகள் இப்படிச் செய்கின்றனர்.

ஆனால் இந்தக் குணம் பெரும்பாலான மனிதர்களிடமும் இருக்கின்றது. ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைத்துவிட்டாலே பெருமை, அகந்தை மனிதர்களுக்கு வந்துவிடுகின்றது. பிரபஞ்சத்தையே படைத்து ஆட்சிசெய்யும் தேவன் எல்லா மகிமையையும் விட்டு அற்பமான மனிதனுக்கு ஒப்பானவராக மாறினாரே ? (வாசிக்க - பிலிப்பியர் 2 : 6-11)அவர் எப்படி இந்த அகந்தையும் பெருமையும் உள்ள மனிதர்களை ஏற்றுக்கொள்வார்? 

அன்பானவர்களே, நமது தலைமுறை நன்றாய் இருக்கவேண்டுமென்று சொத்து சுகங்கள் சேர்த்து வைத்து கூடவே தேவ சாபத்தையும் சேர்க்கக்கூடாது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது என்று கூறப்பட்டுள்ளதால், "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்" என்ற வசனத்தின்படி தீமையை வெறுத்து அவருக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்

 ஆதவன் 🖋️ 542 ⛪ ஜுலை 23, 2022 சனிக்கிழமை


"தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." (எபிரெயர் 13: 7, 8) 

கிறிஸ்துவின் சுவிசேஷம் யாரோ ஒருவரால் நமது வாழ்வில் நமக்கு அறிவிக்கப்பட்டு நாம் கிறிஸ்துவில்  விசுவாசம் கொண்டிருப்போம். நம்மை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தியவர்கள் பிற்பாடு ஒருவேளை வழி விலகிப் போயிருக்கலாம். 

எனவேதான், நம்மை இரட்சிப்புக்கு நேராக நடத்தியவர்களின் செயல்பாடுகளை நினைத்து, அவற்றின் முடிவினைக் கவனித்து அவற்றைப் பின்பற்றவேண்டும்.  எனவேதான், "உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்."  என்று எழுதுகின்றார் நிரூப ஆசிரியர்.

இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அப்போஸ்தலர் காலத்தில் அவர் நடத்தியவிதங்களில் இன்றும் தன்னை விசுவாசிப்பவர்களை அவர்  நடத்துகின்றார். நமது  வாழ்வில் கிறிஸ்துவின் செயல்பாடுகள் இல்லாமல் போவதற்கு நமது தவறான செயல்பாடுகள் காரணமாய் இருக்கலாம், எனவே அவற்றை நாம் ஆராய்ந்து பார்த்து திருத்திக் கொள்ளவேண்டுமே தவிர, "பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்". (எபிரெயர் 13:9 ) என்கின்றார். 

இன்று பல கிறிஸ்தவர்கள் இப்படியே இருக்கின்றனர். தங்களது வாழ்வில் ஆசீர்வாதம் இல்லை என எண்ணி மாறி மாறி ஒவ்வொரு ஊழியக்காரர்களாக அலைந்து திரிகின்றனர். இந்த ஊழியர்கள் ஆளாளுக்கு ஒரு உபதேசம் கூறுபவர்களாக இருக்கின்றனர். எனவேதான், "பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. வேதாகம சத்தியங்களுக்கு முரணான போதனைகளே அந்நிய போதனைகள்.

அன்பானவர்களே, நம்மை நாம் வேத வெளிச்சத்தில் நிதானித்துப்பார்த்து  நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர அலைந்து திரிவதால் அர்த்தமில்லை. 

தேவவசனத்தை நமக்குப் போதித்து நடத்தினவர்களை நாம் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுவோம். ஒருவேளை அவர்கள் வழி விலகிச் சென்றிருந்தால், வேத வெளிச்சத்தில் ஆராய்ந்துபார்த்து நேர் வழியில் நடப்போம். 

இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பதால் நம்மை அவர் நேரான வழியில் நடத்துவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Wednesday, July 20, 2022

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுவோம்.

 

ஆதவன் 🖋️ 541 ⛪ ஜுலை 22, 2022 வெள்ளிக்கிழமை


"நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்." ( கொலோசெயர் 3 : 1, 2 )

கிறிஸ்துவுடன் கிறிஸ்துவுக்காக மரித்து (அதாவது பாவத்துக்கு மரித்து) அவருடன் எழுந்திருப்பதே நாம் இரட்சிக்கப்பட்டுளோம் என்பதற்கு அடையாளம். அப்படி இரட்சிப்பு அனுபவத்தைப் பெற்றவர்கள் கிறிஸ்துவைப்போல மேலான எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பார்கள்.

அதனையே,    "நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்" என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார். ஒருவர் கிறிஸ்துவுக்குள் மரித்து உயிர்த்த அனுபவம் உள்ளவரென்றால் (அதாவது இரட்சிக்கப்பட்டவரென்றால் ) இப்படி மேலானவைகளைத் தேடுபவராக இருப்பார்.

தேவனுடைய வலது பாரிசத்தில் இருப்பவை இந்த பூலோகத்திலுள்ளவைகளல்ல. அந்த பரலோக மகிமை காரியங்கள் பவுல் அடிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டது.  அதனையே பவுல் அடிகள், "அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம்...."( 2 கொரிந்தியர் 12 : 7 ) என்று கூறுகின்றார்.

ஆனால் இந்த உலகத்தில் பெரும்பாலான கிறிஸ்தவ பிரசங்கிகளும் தங்களைக் ஆவிக்குரிய சபைகள் என்று  கூறிக்கொள்ளும் சபைகளும்  இந்த அனுபவத்தையோ, இதுபற்றிய தெளிவோ இல்லாமல் நூறு சதவிகிதம் உலக காரியங்களையே பிரசங்கித்து மக்களை இருளுக்கு நேராக நடத்துகின்றனர். இவர்கள் நூதனமான சுவிசேஷத்தை அறிவிக்கின்றனர்.

"நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்களானால் கிறிஸ்துவிடம் உங்கள் எல்லா உலகத்  தேவைகளையும் கேளுங்கள். கிறிஸ்து வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளையல்ல பூமியிலுள்ளவைகளையே  நாடுங்கள். அதற்கு அதிக காணிக்கைகளைக் கொடுங்கள். பத்தில் ஒருபங்கு வருமானத்தை எங்களுக்குத் தாருங்கள்; நீங்கள் கொடுப்பது பலமடங்காக உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படும்." என்பதே இவர்களது நூதன சுவிசேஷம். 

அன்பானவர்களே, ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பிரபல பிரசங்கிகளால் வஞ்சிக்கப்படுகின்றார்கள். மக்களது காணிக்கைப் பணத்தால் இவர்களால் துவக்கப்பட்ட பத்திரிகைகளும் டெலிவிஷன்களும் இருளுக்கு நேராக மக்களை வழிநடத்தவே பயன்படுகின்றன.  

நாம் நம்மைக் காத்துக்கொள்வோம். கிறிஸ்துவுடன்கூட எழுந்த நாம், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளையேத் தேடுவோம். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுவோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Tuesday, July 19, 2022

கர்த்தருடன் இணைந்த வாழ்வை வாழ்வோம்

 ஆதவன் 🖋️ 540 ⛪ ஜுலை 21, 2022 வியாழக்கிழமை


"கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு." ( சங்கீதம் 27 : 14 )


கர்த்தருக்குக் காத்திரு என்று இன்றைய வசனம் வலியுறுத்திக் கூறுகின்றது. "கர்த்தருக்கே காத்திரு" என்று கூறுவது அவருக்காக மட்டுமே காத்திரு எனும் பொருளில்தான். 

காத்திருத்தல் என்பது ஒன்றும் செய்யாமல் ஒரு பேருந்துக்கோ ரயிலுக்கோ காத்திருப்பதுபோல காத்திருப்பதையல்ல. மாறாக, பொறுமையோடு அமைதியாக கர்த்தர் செயல்படும்வரை உன் மனதில் விசுவாசத்தோடு இரு என்பதாகும். அதனைத்தான் திடமானதாயிரு என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், காத்திருத்தல் எனும் வார்த்தைக்கு மூல வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள  கிரேக்க வார்த்தை QAVAH என்பதாகும். இதற்குக்   'காத்திருத்தல்' எனும் பொருளைத் தவிர வேறு   இரண்டு அர்த்தங்களும்  கூறப்பட்டுள்ளன. ஒன்று 'பின்னுதல்' (பெண்கள் தலை முடியைப் பின்னுவதுபோல) இன்னொரு பொருள் 'இணைத்தல்' (bind). அல்லது 'ஒட்டிக்கொள்ளுதல்'. எனவே இந்த வசனத்தின் மெய்யான பொருள், கர்த்தரோடு கர்த்தராக உன்னை பின்னிக்கொள், அவரோடு அவராக ஒட்டிக்கொள்  என்பதாகும். அப்படி இருக்கும்போது அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். 

மேலும் இப்படிக் கர்த்தரோடு தங்களை இணைத்துக் கொண்டவர்களைக் குறித்து ஏசாயா, "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 ) என்று கூறுகின்றார்.

ஆவிக்குரிய வாழ்வில் நாம் நடக்கும்போது நம்மைத் திடப்படுத்தவும் நாம் அவரோடு மேலும் நெருங்கிடவும் தேவன் சில வாக்குத்தத்தங்களை நமக்குத் தரலாம். அவை நமது வாழ்வில் நிறைவேறிட காலதாமதமாகலாம். ஆனால் நாம் அவரோடுள்ள உறவில் விலகிடாமல் நெருக்கமாக இருக்கவேண்டியது அவசியம்.

ஆபிரகாம் எழுபத்தைந்து வயதுள்ளவனாய் இருந்தபோது தேவன் அவருக்கு ஒரு மகனை வாக்களித்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேறிட அவர் தனது நூறு வயதுவரை காத்திருக்கவேண்டியிருந்தது. அவர் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். காரணம், தேவனோடு அவர் தன்னைப் பிணைத்துக்கொண்டார்; அவரோடு ஒட்டிக்கொண்டார். 

அன்பானவர்களே, திடமனதாய் கர்த்தருடன் இணைந்த வாழ்வை வாழ்வோம். வேதாகமத்தை வாசிப்பதும், அன்றாட ஜெபத்தில் தரித்திருப்பதும் அவருக்கேற்ற ஒரு வாழ்வை வாழ்வதும் அவரோடுள்ள நமது நெருக்கத்தை அதிகரிக்கும். அப்போது அவர் நமது இருதயத்தை உறுதிப்படுத்துவார்.  அப்போது எந்த உலகக் கவலையும் பிரச்சனைகளும் நம்மை மேற்கொள்ளாது.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

இரட்சிப்பு ஒருநாளில் நடப்பதல்ல.......


 ஆதவன் 🖋️ 539 ⛪ ஜுலை 20, 2022 புதன்கிழமை

"முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." (மத்தேயு 24:13)

பொதுவாக இன்று ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும், "நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன்" என்று கூறுவது வழக்கம்.   சிலர் அதனை தேதி குறிப்பிட்டு இந்தத் தேதியில் நான் இரட்சிக்கப்பட்டேன் என்றும் கூறுவார்கள். இப்படிக் கூறுபவர்கள் பாவ மன்னிப்புக்கும் இரட்சிப்புக்குமுள்ள வேறுபாட்டை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களே.

நமது மகன் நாம் சொல்லும் அறிவுரைகளைக் கேட்காமல் துன்மார்க்க நண்பர்களோடு சேர்ந்து பழகுகின்றான் என்று வைத்துக்கொள்வோம். ஒருமுறை அப்படி அவர்களோடு சேர்ந்து சிறு தகாத செயலில் ஈடுபட்டு காவல்துறையால் கைதுசெய்யப்படுகின்றான். நமக்குத் தகவல் வருகின்றது. நாம் காவல் நிலையம் செல்லுகின்றோம்.

நம்மைக் கண்டதும் மனம் கசிந்து அழுகின்றான். பின், "அப்பா, உங்கள் அறிவுரையினைக் கேட்காதது தவறுதான். என்னை மன்னியுங்கள்" என்கின்றான். நமது மகன் என்பதால் நாம் அவனை மன்னிக்கின்றோம். இதுவே பாவ மன்னிப்பு. கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிடும்போது இதுபோல அவர் நம்மை மன்னிக்கின்றார்.  அதாவது நாம் அவருடன் ஒப்புரவாக்கப்படுகின்றோம். அப்போது அதுவரை நாம் செய்த பாவங்களை அவர் மன்னிக்கின்றார். 

ஆனால் காவல் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டபின் அந்த மகன் பழைய பாவ நண்பர்களைவிட்டு விலகவேண்டும். தாய் தகப்பனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கை வாழவேண்டும். இறுதிவரை அப்படி இருந்தாலே அவன் பாவ மன்னிப்பைப் பெற்றதில் அர்தமுண்டு. இல்லையானால் மீண்டும் இக்கட்டுக்கு உள்ளாவான்.

இதனையே அப்போஸ்தலரான பவுல், "நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே." ( ரோமர் 5 : 10 ) 

அதாவது இப்படி ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. எனவே இப்படி பாவமன்னிப்பு பெற்று கிறிஸ்துவோடு ஒப்புரவாக்கப்பட்டபின்பு கிறிஸ்துவின் ஜீவனாலே நாம்  இரட்சிக்கப்படுவது நிச்சயம் என்று பவுல் கூறுகின்றார். கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் நம்மைப் பாவத்திலிருந்து விடுதலை அளிக்கும். 

இப்படி இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் ஆவியின் படியே நடப்பார்கள். "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 1, 2)

இது ஒருநாளில் நடப்பதல்ல. அன்றாடம் நாம் பாவத்துக்கு எதிராகப் போராடவேண்டும். இதுவே கிறிஸ்து கூறிய சிலுவை சுமக்கும் அனுபவம். இப்படிச் சிலுவை  சுமந்து, பாவத்துக்கு எதிராகப் போராடி நமது வாழ்வின் இறுதிவரை நம்மைப் பாவமில்லாமல்  காத்துக்கொள்ளவேண்டும். இப்படி வாழ்வின்  "முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." (மத்தேயு 24:13)

அன்பானவர்களே, என்றோ நாம் பெற்றுக்கொண்ட பாவ மன்னிப்பு  அனுபவத்தை வைத்துக்கொண்டு , "நான் இரட்சிக்கப்பட்டேன் " என்று கூறிக்கொண்டு அலைவதால் அர்த்தமில்லை. உலக வாழ்வின் இறுதிவரை நமது வாழ்வு பாவமில்லாமல் நிலை நிற்கவேண்டும். இல்லையானால், நாம் முதலில் பார்த்த சம்பவத்திலுள்ள மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுபோல சாத்தானின் வல்லமைக்குள் கைதியாக இருப்போம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                 தொடர்புக்கு- 96889 33712 

Monday, July 18, 2022

ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தின ....


 ஆதவன் 🖋️ 538 ⛪ ஜுலை 19, 2022 செவ்வாய்க்கிழமை

"பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்." ( மத்தேயு 11 : 25 ) 

ஒருவர் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு துறையில் சிறந்தவராக இருக்கலாம், ஆனால் அதனால் அவர் எல்லாம் தெரிந்தவரோ பெரிய மேதையோ என அர்த்தமல்ல. அவருக்கு ஏதோ பலவீனம் இருக்கும். அவரோடு நெருங்கிப் பழகினால்தான் அது தெரியும்.

இந்த உலகத்தில் மிகப்பெரிய விஞ்ஞானியாக புகழப்பட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.  இவர் விஞ்ஞானத்தில் மேதையாக இருந்தாலும் அவரது அறிவு கடவுளை அறிந்திடத் தடையாகவே இருந்தது. 

இந்த உலக வரலாற்றில் இதுவரைப் பிறந்தவர்களில் அதிக அளவு மூளைத்திறன் உள்ளவராக இருந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.  அவரது அறிவினைக்கண்டு வியந்த விஞ்ஞானிகள் அவர் மரித்தபின் அவரது மூளையைப் பாதுகாத்து  எப்படி இந்த மனிதனது மூளை இப்படி சிந்தித்தது , இவரதுமூளை மற்ற மனிதர்களது மூளையிலிருந்து எப்படி வேறுபட்டதாயிருக்கின்றது ஆராய்ச்சி செய்தனர்.

ஆனால், அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நம்மை வியக்கவைக்கும். ஒருமுறை அவர் ஏதோ காரியமாக ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். ரயிலின் டிக்கெட் பரிசோதகர் அவரிடம் வந்து டிக்கெட்டை காண்பிக்குமாறு கூறினார். ஐன்ஸ்டின் தனது மேல்சட்டை, கால்சட்டை, மேலே அணிந்திருந்த கோட் பாக்கெட் என அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தார். டிக்கெட் கிடைக்கவில்லை.

அவரையே பார்த்துக்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர், "டாக்டர் ஐன்ஸ்டின் அவர்களே, எனக்கு உங்களைத் தெரியும். நீங்கள் நிச்சயமாக டிக்கெட் வாங்கியிருப்பீர்கள். பரவாயில்லை, உங்களைப்போன்ற மேதைகளால் நமது நாட்டுக்கே பெருமை. நியாயப்படி அரசாங்கம் உங்களுக்கு இலவச பயண வசதி செய்துகொடுத்திருக்க வேண்டும்...அமர்ந்துகொள்ளுங்கள் " என்று கூறியபடி நகர்ந்தார்.

அவர் அடுத்த பெட்டியைநோக்கி நகரவும் ஐன்ஸ்ட்டின் கீழே குனிந்து தனது இருக்கையின் அடியில் டிக்கெட்டைத் தேடத் துவங்கினார். அதனைக் கவனித்தத் டிக்கெட் பரிசோதகர், "டாக்டர் ஐன்ஸ்டின் அவர்களே, பரவாயில்லை, எனக்கு அது தேவையில்லை" என்றார். அதற்கு ஐன்ஸ்டின் மறுமொழியாக, " சார், உங்களுக்கு அது தேவையில்லாமல் இருக்கலாம், எனக்கு அது தேவைப்படுகின்றது. நான் எங்கே செல்கிறேன் என்பது அதனைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும்" என்றார்.  

மிகப்பெரிய மேதை என உலகத்தால் புகழப்பட்ட மனிதன் இந்த உலகத்தில் தான் எங்கு செல்கிறேன்  என்று தெரியாமலே பயணம் செய்தது ஆச்சரியமாயில்லையா? தனது இந்த உலக பயணமே தெரியாதபோது மறுவுலகம் பற்றிய சிந்தனை அவருக்கு வேடிக்கையான கதையாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை. 

மேதை எனப் புகழப்பட்ட ஐன்ஸ்டின் ஒருமுறைக் கூறினார், " 'கடவுள்' என்ற வார்த்தை என்னைப் பொறுத்தவரை மனித பலவீனங்களின் வெளிப்பாடு மற்றும் விளைவுகளே தவிர வேறொன்றுமில்லை, பைபிள் மரியாதைக்குரிய, ஆனால் இன்னும் பழமையான சிறுபிள்ளைத்தனமான  கதைகளின் தொகுப்பாகும். இவற்றை நியாயப்படுத்த எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள முடியாது " 

ஆம், மேதையாய் இருப்பதால் எல்லாம் தெரிந்தவர் என எண்ணிவிடக்கூடாது. எனவேதான் இயேசு கிறிஸ்து, "பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்." ( மத்தேயு 11 : 25 ) என்றார். 

அன்பானவர்களே, இதுபோல நமது அறிவும் படிப்பும் தேவனை அறிந்திடத் தடையாக இருக்கலாம். அப்படி இராதபடி பார்த்துக்கொள்வோம். "ஆண்டவரே, நான் புழுதியும் குப்பையுமானவன், என் பாவங்களை எனக்கு மன்னித்து உம்மை நான் அறிந்திட கிருபை செய்யும்" என வேண்டுதல் செய்வோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Hidden from the wise and learned and revealed to children.

 Aathavan  🖋️ 538 ⛪ Tuesday July 19, 2022


"......O Father, Lord of heaven and earth, because thou hast hid these things from the wise and prudent, and hast revealed them unto babes." (Matthew 11:25)

A person may be the best in any field in this world, but that does not mean he is omniscient or a great genius. He will have some weakness. You will know that only if you get close to him.

Albert Einstein is hailed as the greatest scientist in the world. Although he was a genius in science, his knowledge was a barrier to knowing God.

Albert Einstein was the most intelligent person ever born in the history of this world. Amazed by his knowledge, scientists preserved his brain after his death and researched how this man's brain thought like this and how his brain was different from other people's brains.

But one incident in his life will surprise us. Once he was traveling by train to somewhere. The ticket inspector of the train came to him and asked him to show the ticket. Einstein searched everywhere, his shirt, his trousers, the pocket of the coat he was wearing. But ticket was  not available.

The ticket examiner who was looking at him, said, "Dr. Einstein, I know you. You must have bought a ticket. No problem, our country is proud of geniuses like you. In fairness, the government should have given you free travel facility...sit down." and moved to the next compartment, 

But Einstein bent down and searched for the ticket under his seat. Noticing that, the ticket inspector said, "Dr. Einstein, it's okay, I don't need it." To which Einstein replied, "Sir, you may not need it, but I need it. I know where I am going by seeing it only."

Isn't it surprising that the man who was hailed by the world as the greatest genius traveled in the world without knowing where he was going? It is no wonder that the thought of the afterlife was a funny story for him when he did not know his worldly journey.

The acclaimed genius Einstein once said of God, “The word God is for me nothing more than the expression and product of human weaknesses, the Bible a collection of honorable, but still primitive legends which are nevertheless pretty childish. No interpretation no matter how subtle can (for me) change this. ...”

Yes, being a genius doesn't mean you know all things. That is why Jesus Christ said, "Father! Lord of heaven and earth! I praise you because you have hidden these things from the wise and learned and revealed them to children." (Matthew 11:25) He said.

Beloved, in this way our knowledge and study can hinder us from knowing God. Let's make sure it doesn't. Let us pray, "Lord, I am dust and dirt, forgive me of my sins and make me know You."

Bro. M. Geo Prakash,  Contact- 96889 33712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 10 : 4, 5 / 1 Corinthians 10:4, 5

  " ஆதவன் " தியானம் - 1993  ஜூலை 23 வியாழன் 2026     "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச...