இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, September 06, 2024

தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவை

 'ஆதவன்' செப்டம்பர் 16, 2024. 💚திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,316


"தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;" ( 1 கொரிந்தியர் 2 : 9 )

தேவனிடத்தில் அன்புகூருபவர்களுக்கு மற்றவர்களைப்போல உலக ஆசீர்வாதங்கள் இல்லாமல் இருந்தாலும் மற்றவர்கள் உணர்ந்துகொள்ளாத பரம ஆசீர்வாதங்கள் உண்டு. ஆனால் அவைகளை எல்லோரும் கண்டுகொள்வதில்லை. கிறிஸ்துவுக்காக பலர் வைராக்கியமாகச் செயல்படக் காரணம் அவர்கள் இந்த பரம ஆசீர்வாதங்களைக் கண்டுகொண்டதால்தான். 

தங்களிடம் உலக ஆசீர்வாதமிருப்பதால் சிலர் அந்த ஆசீர்வாதங்கள் எதுவுமில்லாத மற்றவர்களை அற்பமாக எண்ணுவதுண்டு. ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்கள் உலகத்தின்முன் அற்பமாக எண்ணப்பட்டாலும் தேவன் அவர்களிடம் அன்புகூருகின்றார்.  அப்படித்  தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு தேவன்  ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

தேவன் ஆயத்தம்பண்ணின இந்த ஆசீர்வாதங்களை ஆவிக்குரியவர்களுக்கு அவர் வெளிப்படுத்திக் கொடுக்கின்றார். இதனையே, "நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." ( 1 கொரிந்தியர் 2 : 10 ) என்று இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். 

தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருந்தால் மட்டுமே நாம் இதனைக் கண்டுகொள்ளமுடியும். ஆம், "மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்." ( 1 கொரிந்தியர் 2 : 11 )

இயேசு கிறிஸ்துவும் இதனைத் தனது சீடர்களுக்கு எடுத்துக்கூறினார். "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்." ( யோவான் 14 : 2 ) பிதாவின் வீட்டிலுள்ள வாசஸ்தலம் தான் ஆவிக்குரிய மக்களது ஆசீர்வாதம். அதற்காகத்தான் இயேசு கிறிஸ்து பரலோகம் சென்றார். "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்." ( யோவான் 14 : 3 ) என்று வாக்குறுதியும் அளித்துள்ளார். 

ஆம் அன்பானவர்களே, விசுவாசத்தோடு தேவனது வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்வோம். ஆவியானவர் அந்த விசுவாச சத்தியத்தை நாம்  உணர்ந்துகொள்ளும் மனதினை  நமக்கு அருளும்படி வேண்டுதல் செய்வோம். தேவனிடத்தில் தொடர்ந்து அன்புகொண்டு ஆவிக்குரிய வாழ்வைத் தொடருவோம். அப்போது தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளை விசுவாசத்தால் கண்டு உணரும்படியான உள்ளத்தை அவர் நமக்குத் தந்து நம்மைத் திடப்படுத்துவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                   

No comments: