DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, September 22, 2024

அந்த நாளை பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 26, 2024. வியாழக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,326



"அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்." ( மாற்கு 13 : 32 )

இன்றைய தியான வசனம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக் குறித்து அவர் கூறியது. இயேசு கிறிஸ்து வருவார் என்பது நிச்சயமேத் தவிர, எப்போது வருவார் என்பது இன்னும் வெளிப்படுத்தப்படாத சத்தியம். அதனை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியமில்லை. 

தனது வருகைக்கு முன்அடையாளமாக இயேசு பல காரியங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவைகளில் பலவும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் வருகை எப்போது என்பது இரகசியமான சத்தியம். அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான் என்று இயேசு கிறிஸ்து கூறிவிட்டார். 

ஆனால் இன்று ஆவிக்குரிய போதகர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள்  சிலர் தங்கள் மேதாவித்தனத்தைக் காண்பிக்க வேத ஆராய்ச்சி என்று பல்வேறு வேத வசனங்களை எடுத்து கணக்குப்பார்த்து இயேசு எப்போது வருவார் என்று கணித்துக்கொண்டிருக்கின்றனர். பொதுவாக ஆவிக்குரிய போதகர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களே இத்தகைய மூடத்தனத்தைச் செய்துகொண்டிருக்கின்றனர். பிற பாரம்பரிய சபைகளில் இந்தக் கணக்குப்பார்த்தல் இல்லை.

தானியேல் புத்தகத்தின் சில வசனங்களை எடுத்து  தங்கள் கணித அறிவைப் பயன்படுத்தி இயேசுவின் வருகைக்கு நாள்குறிக்கின்றனர் இவர்கள்.  இத்தகைய ஆராய்ச்சி தேவையற்றது என்பதையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 'முகநூல்', 'யூடியூப்', 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களில் இத்தகைய கணித அறிவு ஊழியர்களின் வீடியோக்களை நாம் அதிகம் பார்க்க முடிகின்றது. ஆனால் இவை அனைத்தும் தேவையற்ற குப்பைகளே. ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவுக்கே தெரியாத இரகசியத்தை நாம் அறிய முயற்சிப்பது குப்பையைக் கிளறுவதுபோலத்தான்.

கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழ்ந்தாலும் வருகையின்போது அவர்  நம்மைத்  தன்னோடு சேர்த்துக்கொள்ளத்  தகுதியாக வாழவேண்டியதே நாம் செய்யவேண்டியது.  மக்களை அதற்குத் தகுதிப்படுத்தவேண்டியதே உண்மை ஊழியர்களின் கடமை.  ஆனால் இன்று இத்தகைய கணிதமேதை ஊழியர்களின் போதனைகளைக்கேட்டு பல விசுவாசிகள் அதனை மற்றவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதில் பெருமைகொள்கின்றனரேத் தவிர தங்களைத் திருத்திக்கொள்ள முயல்வதில்லை. இவர்களில் சிலர் என்னிடம், "சகோதரரே, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குறித்து எழுதுங்கள்" என்கின்றனர். 

அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்றபடி வாழவேண்டிய வழிமுறைகள் வேதத்தில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளன. அவற்றின்படி வாழ்வதே கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுதல். அப்படி வாழும்போது அவர் எப்போது வந்தாலும் நாம் அவரை எதிர்கொள்ளமுடியும். எனவே நாம் அவர் எப்போது வருவார் என்று கணக்குப் போடாமல் எச்சரிக்கையோடு வாழ்வோம். "அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்." ( மாற்கு 13 : 33 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: