இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, September 24, 2024

வாழ்க்கையில் உண்மையில்லா ஜெபம் அர்த்தமற்றது

 'ஆதவன்' செப்டம்பர் 27, 2024. வெள்ளிக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,327


"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை." ( மத்தேயு 7 : 21 )

வாழ்க்கையில் உண்மையில்லாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்துகொண்டு - தேவ சித்தத்துக்கு முரணான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு - ஒருவர் எவ்வளவு ஜெபித்தாலும் அது அர்த்தமற்றது என்பதனை இன்றைய தியான வசனத்தில்  இயேசு கிறிஸ்து கூறுகின்றார். 

இன்று பலரும் "ஜெபமே ஜெயம்" என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் இந்த வார்த்தைகள் வேதத்தில் கூறப்படவில்லை. காரணம் ஜெபம் மட்டுமே ஒருவருக்கு வெற்றி தருவதில்லை. ஆவிக்குரிய வாழ்வில் ஜெபம் முக்கியம் என்றாலும் தேவ ஐக்கியதோடு கூடிய ஜெபம்தான்  தேவன் விரும்புவது. 

"நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.  உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்" (ஏசாயா 1:15, 16) என்று ஏசாயா மூலம் தேவன் கூறுவதை நாம் வாசித்திருகின்றோம்.  

இதனையே "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை" என்று இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார். அதாவது கர்த்தரை நோக்கி ஜெபிப்பது மட்டும் முக்கியமல்ல, நமது வாழ்க்கையும் அவருக்கு ஏற்ற வாழ்க்கையாக இருக்கவேண்டியது அவசியயம். 

ஆனால் இந்தச் சத்தியத்தை பெரும்பாலான ஊழியர்கள் கூறுவதில்லை. என்ன பிரச்சனைக்கு விசுவாசிகள் அவர்களை அணுகினாலும், "ஜெபியுங்கள்....ஜெபியுங்கள்...நானும் ஜெபிக்கிறேன்" என்று கூறி மக்கள் தங்கள் வாழ்க்கையின் செயல்பாடுகளைத் திருத்திக்கொள்ள வழி கூறாமல் தடுக்கின்றனர். மட்டுமல்ல, "ஆசீர்வாத உபவாச ஜெபம், நள்ளிரவு ஜெபம், வெள்ளிக்கிழமை ஜெபம், வாலிபர் ஜெபம், பெண்கள் உபவாச ஜெபம்......" போன்று பல்வேறு ஜெப அறிவிப்புகளை அறிவித்து ஜெபிக்கின்றனர். அந்த ஜெபங்கள் தேவனுக்கு ஏற்றதாக முதலில் நாம் நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்பதை பெரும்பாலும் கூறுவதில்லை. 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் ஜெபமும் வாழ்க்கையும் இரு கண்களைபோன்றவை. இரண்டு கண்களும் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம். வாழ்க்கை சரியில்லாத ஜெபம் ஒருவரை ஒற்றைக்கண்ணனாகவே மாற்றும். 

"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே" என்று இயேசு கிறிஸ்து கூறுவதன்படி நம் அனைவரைக்குறித்தும் தேவனுக்கு ஒரு பொதுவான சித்தமுண்டு. இது தவிர நம் ஒவ்வொருவரைக்குறித்தும் பிதாவாகிய தேவனுக்கு ஒரு சித்தமுண்டு. அந்தச் சித்தத்தை நாம் அறிந்து அதன்படி வாழவேண்டும். அப்படி வாழும்போது மட்டுமே நமது ஜெபம் அர்த்தமுள்ள ஜெபமாக இருக்கும். வெறுமனே "கர்த்தாவே! கர்த்தாவே!" கூப்பாடுபோட்டு ஜெபிப்பதில் அர்த்தமில்லை. 

நமது ஜெபங்கள் பிதாவுக்கு ஏற்புடையதாக இருக்க முதலில் அவரது சித்தம் அறிந்து அதன்படி வாழ்பவர்களாக மாறுவோம்.  தேவ சித்தத்துக்கு எதிராக நாம் செய்யும் பாவ காரியங்களுக்கு மன்னிப்பு வேண்டுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

No comments: