இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, September 28, 2024

நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.

 'ஆதவன்' 💚செப்டம்பர் 30, 2024. திங்கள்கிழமை        வேதாகமத் தியானம் - எண்:- 1,330


"அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்." ( 1 சாமுவேல் 8 : 7 )

இஸ்ரவேல் மக்களை தேவனே வழிநடத்தி வந்தார். பல்வேறு நியாயாதிபதிகள், தீர்க்கத்தரிசிகள்  அவர்களை வழிநடத்தினர். காரணம், தேவன் தனது மக்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்களாக, தனது நேரடி பராமரிப்பில் வாழவேண்டுமென்று விரும்பினார். ஆனால் இஸ்ரவேல் மக்களைச் சுற்றிலும் இருந்த பல்வேறு இன  மக்களுக்கு அரசர்கள் இருந்தனர். அந்த அரசர்கள் அவர்கள் வழிநடத்தி அவர்களுக்காக யுத்தங்களையும் செய்தனர். 

இவைகளைப் பார்த்த இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. மற்ற மக்களுக்கு இருப்பதுபோல நமக்கும் தனி ராஜா இருக்கவேண்டும், அவர் நம்மை ஆட்சிசெய்யவேண்டும் என்று விரும்பினர். இதற்கு காரணம் சாமுவேலுக்குப்பின் அவர்களை வழிநடத்திய அவரது புதல்வர்கள் நல்லவர்களாக இல்லை. 

"இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகலஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்." ( 1 சாமுவேல் 8 : 5 ) என்று கூறப்பட்டுள்ளது. இங்கு நாம் இந்த மூப்பர்கள் செய்த தவறினை கவனிக்கவேண்டியது அவசியம். தேவன் இஸ்ரவேல் மக்களை தானே ஆட்சி செய்யும்படி விரும்பி தீர்க்கதரிசிகளையும் நியாதிபதிகளையும் ஏற்படுத்தினார். அவர்களிடம் தவறு இருக்குமானால் அதனை அவர்கள் தேவனிடம்தான் சொல்லி தீர்வு கண்டிருக்கவேண்டும். 

ஆனால் இஸ்ரவேலின் மூப்பர்கள் தேவனை நோக்கிப் பார்க்காமல் தங்களைச் சுற்றிலுமிருந்த மற்ற மக்கள் இனங்களைப் பார்த்தனர். அவர்களைபோலத் தங்களுக்கும் ஒரு ராஜா இருக்கவேண்டுமென்று விரும்பினர். எனவே அவர்கள் கடைசி நியாயாதிபதியான சாமுவேலிடம் வந்து தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டுமென்று கூறினர்.  மக்கள் இப்படிக் கூறியது தேவனுக்கும் சாமுவேலுக்கும்  மன வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே தேவன் சாமுவேலிடம் வேதனையுடன் கூறினார், "அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்." என்று. 

ஆம் அன்பானவர்களே, இதனையே இன்றும் நம்மில் பலரும் செய்துகொண்டிருக்கின்றோம். தேவன் நம்மை வழிநடத்த அனுமதிக்காமல் நம்மைச் சுற்றிலுமிருக்கும் மக்களைப்போல நாமும் வாழவேண்டுமென்று விரும்பி தேவனுக்குப் பிரியமில்லாத செயல்களைச்  செய்துகொண்டிருக்கின்றோம்; அவரைப் புறக்கணிக்கின்றோம். இப்படி வாழும் மக்களைப்பார்த்துத்  தேவன் அன்று சாமுவேலிடம் கூறியதுபோலவே   "நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தள்ளினார்கள்." என்று வேதனையுடன் கூறுகின்றார்

உலக மக்களின் செழிப்பு, பகட்டு இவைகளைப்பார்த்து நாம் தேவனைவிட்டு விலகிப்போகும்போது தேவன் மனதில் வருத்தமடைகின்றார். காரணம் அப்படி விலகும்போது நாம் அவரது ஆளுகையைவிட்டு விலகிப்போகின்றோம். தேவனை விட்டு விலகிய இஸ்ரவேல் மக்கள் பட்டப்பாடுகளும் பல்வேறு அந்நிய ராஜாக்களுக்கு அடிமைகளாகி அவதிப்பட்டதும் நமக்கு ஒரு எச்சரிப்பு. எனவே அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் தேவனது கரத்தின் ஆட்சிக்கு விலகி நாம் சென்றுவிடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம். அவரே நம்மை எப்போதும் ஆளுவாராக. !!

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

No comments: