இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, September 07, 2024

தேவ ஞானம் Vs சுய ஞானம்

 'ஆதவன்' செப்டம்பர் 17, 2024. செவ்வாய்க்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,317


"தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." ( 1 கொரிந்தியர் 1 : 21 )

ஆன்மீகத் தேடல் என்பது இயற்கையிலேயே ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது. எனவேதான் நமது நாட்டில்கூட பல்வேறு பெரியவர்கள், மகான் என அழைக்கப்படுகின்றவர்களும் தோன்றி தங்களுக்கு எது சரியோ அதனைக் கடவுளை அறியும் வழியாகப் போதித்து வந்துள்ளனர். இப்படி போதிக்கப்பட்ட அனைத்தும் சரி என்று நாம் கூறிவிடமுடியாது.  அதற்குக் காரணம் என்ன என்பதையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

தேவ ஞானம், சுய ஞானம் எனும் இரு காரியங்கள் இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ளன. சுய ஞானம் என்பது மனிதனது சுயபுத்தியால் கற்றுக்கொடுக்கப்படும் அறிவு. தேவ ஞானம் என்பது விண்ணகத்திலிருந்து தேவனால் அருளப்படுகின்ற வெளிப்படுத்துதல் மூலம் அடையும் அறிவு. 

இன்று கடவுளை அறிந்துகொண்டவர்கள்போல பேசும் பலரும் தங்களைத் துறவிகள் என்று கூறிக்கொள்பவர்களும், சாதுக்களும்  தங்களது சுய ஞானத்தால் கடவுளைப் பற்றி பேசுபவர்கள்தான். காரணம், இப்படிப் பேசும் பலரும் பெரும்பாலும் உலகம் அருவருக்கும்  செயல்களைச் செய்பவர்களாக இருக்கின்றனர். இதுவே இவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்பதனை வெளிப்படுத்துகின்றது. இதற்கு ஆதாரமாக நாம் இவர்களைப்பற்றிய பல்வேறு செய்தித் சான்று காட்டமுடியும். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இவர்களைப்பற்றிய இத்தகையைச் செய்திகளை வெளியிடும்போது பலரும் அதிர்ச்சியடைகின்றனர். ஆனால் நாம் அப்படி அதிர்ச்சி அடைவதில்லை. காரணம், சுய ஞானம் இப்படித்தான் இருக்குமென்பது நமக்குத் தெரியும். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீத்துவுக்கு எழுதும்போது;- "அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்." ( தீத்து 1 : 16 ) என்று கூறுகின்றார். 

ஆனால், கிறிஸ்துவைக்குறித்து நாம் பிரசங்கிப்பது பலருக்கு பைத்தியக்காரத்தனம்போல இன்று தெரிகின்றது. பலரும், "இந்தக்காலத்தில்போய் இதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்களே" என்று கிண்டலாகக் கூறுகின்றனர். ஆனால் இந்தப் பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  

ஆம் அன்பானவர்களே, சிலுவையைப்பற்றிய உபதேசம் வெறும் போதனையல்ல, அது மனிதனில் உள்ளான மாற்றத்தைக் கொண்டுவரும் வல்லமை உடையது. காரணம், அவை தேவனது வார்த்தைகள். பல்வேறு மத சாதுக்களும், கடவுளைக்குறித்து போதிக்கும் சந்நியாசிகளும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்காத பரிசுத்தத்துக்கு நேராக இந்த வார்த்தைகள் நம்மை வழிநடத்துகின்றன. காரணம் அவை தேவ குமானாகிய கிறிஸ்துவின் உயிருள்ள வார்த்தைகள். "அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்." ( 1 கொரிந்தியர் 1 : 31 ) எனவே, உலகத்துக்குப் பைத்தியமாகத் தோன்றுகிற அவரது வார்த்தைகளை யார் கேலிசெய்தாலும் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

No comments: