DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, September 22, 2024

காத்திருப்போம்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 25, 2024. 💚புதன்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,325


"நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." ( எபிரெயர் 10 : 36 )

மனிதர்கள் நாம் எதிலும் அவசரமாகச் செயல்படுகின்றோம். எனவே அதுபோன்ற அவசரத்தை நாம் தேவனிடமும் எதிர்பார்க்கின்றோம். ஆனால் தேவன் நம்மைப்போல எதையும் அவசரகதியில் செய்பவரல்ல. தேவனிடம் நாம் எதையாவது பெறவேண்டுமானால் முதலில் நாம் அவரது சித்தத்தின்படி வாழவேண்டும். இரண்டாவது பொறுமையாக அவர் செயல்படுவதற்குக் காத்திருக்க வேண்டும். 

தேவன் நமக்குச் சில வாக்குறுதிகளைத் தந்திருக்கலாம். ஆனால் அவை நிறைவேறுமளவும் நாம் காத்திருக்கவேண்டும். நாம் ஒரு காரியத்துக்காக ஜெபிக்கும்போது தேவன் அதற்கு பதில் தருவாரேத் தவிர எப்போது நாம் கேட்பதைத் தருவேன் என்று பெரும்பாலும் சொல்வதில்லை. ஆபிரகாமுக்கு எழுபத்தைந்து வயதானபோது தேவன் அவருக்கு ஒரு மகனை வாக்களித்தார். ஆனால் எப்போது அந்த மகனைத் தருவேன் என்பதை அவர் கூறவில்லை. அந்த வாக்குத்தத்தம் நிறைவேற ஆபிரகாம் இருபத்தைந்து வருடங்கள் காத்திருக்கவேண்டியதிருந்தது. 

தேவன் இப்படி நம்மைக் காத்திருக்கச் செய்வது நமது விசுவாசத்தைச் சோதிக்கவும் உறுதிப்படுத்தவுமே. இதனையே இன்றைய தியான வசனம்,  "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." என்று கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே, பொறுமையோடிருந்து நாம் தேவனிடமிருந்து நமது விண்ணப்பங்களைப்  பெறவேண்டியதாயிருக்கின்றது. 

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." (யாக்கோபு 5:11) என்று கூறுகின்றார். 

கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கின்ற படியால்  இப்படி நம்மைப் பொறுமையாக காத்திருக்கச் செய்து தனது வாக்குத்தத்ததை நமக்கு அருளுகின்றார். காரணம்,  இப்படித் தேவனுக்காகக் காத்திருந்து அவர் வாக்களித்ததைப் பெறும்போதுதான் மேலான மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கின்றது.   ஒரு தகப்பனிடம் மகனோ மகளோ ஒரு பொருளை ஆசைபட்டுக் கேட்கும்போது அந்தத் தகப்பன் உடனே அதனை வாங்கிக்கொடுக்காமல் அதனை வாங்குவதற்கான பணத்தைச் சம்பாதித்துத் தாமதமாக அந்தப் பொருளை வாங்கிக்கொடுக்கும்போது அந்தப் பிள்ளைகள் அதிக மகிழ்ச்சியடையும்.  

"நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்." ( நீதிமொழிகள் 13 : 12 ) என்று வேதம் கூறுகின்றது.  ஆம் அன்பானவர்களே, தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, அவர் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியதை  பெறும்படிக்குப் பொறுமையாகக் காத்திருப்போம். அப்போது அது நிறைவேறும்போது பூரணமான மகிழ்ச்சி நமக்கு ஏற்படும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

No comments: