இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, September 20, 2024

நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகள்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 23, 2024. திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,323


"சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்." ( கலாத்தியர் 4 : 28 )

ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம் அளித்தபடி அவரது நூறாவது வயதில் பிறந்தவன் ஈசாக்கு.  ஆனால், அவருக்கு  பிள்ளை இல்லாததால் அவர் மனைவி சாராள் தனது அடிமைப்பெண்ணான ஆகாரை அவருக்கு மறுமனைவியாகக் கொடுத்ததால் அவள்மூலம் பிறந்தவன் இஸ்மவேல்.  இதனைக்கொண்டு அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் ஒரு சத்தியத்தை விளக்குகின்றார். 

நாம் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவத்தைப் பெறும்போது நாம் ஈசாக்கைபோல வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவர்கள் ஆகின்றோம். ஆம், கிறிஸ்துவின் வாக்குத்தத்தத்துக்கு உரிமையாளர்கள் ஆகின்றோம். அந்த அனுபவத்தைப் பெறாதவர்கள் இஸ்மவேலைபோல மாம்சத்தின்படி பிறந்தவர்கள். இப்படி மாம்சத்தின்படி பிறந்தவர்களுக்கும் ஆவியின்படி பிறந்தவர்களுக்கும் முரண்பாடு இருந்துகொண்டே இருக்கும். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது. அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது." ( கலாத்தியர் 4 : 29, 30 ) அதாவது, மீட்பு அனுபவம் இல்லாதவர்கள் கிறிஸ்துவோடு சுதந்தரவாளியாயிருப்பதில்லை. 

எனவே, ஈசாக்கைபோல வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஆவிக்குரியவர்களுக்குத்தான் வேதத்திலுள்ள வாக்குத்தத்த வசனங்கள் உரிமையாகுமேத்  தவிர அவரோடு எந்தத் தொடர்புமின்றி வெறும் மாம்ச சிந்தைகொண்டு உலக ஆசீர்வாதங்களையேத் தேடி அலைபவர்களுக்கு அவை உரிமையாவதில்லை. 

ஆம் அன்பானவர்களே, மீட்பு அனுபவம் பெற்றவர்களே ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். மெய்யான ஆசீர்வாதம் அவர்களுக்கே உரியது. இதனையே நாம், "ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்." ( ஆதியாகமம் 26 : 12, 13 ) என்று வாசிக்கின்றோம். 

இஸ்மவேலைப்போன்ற உலக மனிதர்கள் நம்மை நெருக்கலாம். நமது செயல்பாடுகளை விமர்சிக்கலாம், நமக்கு எதிராகச் செயல்படலாம். ஆனால் மெய்யான தேவ ஆசீர்வாதம் ஈசாக்கைபோல வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாக வாழ்பவர்களுக்கே உரியது.  கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு அவரது புதிய உடன்படிக்கையின் மக்களாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே, அந்த அழைப்பைப் புறக்கணிக்காமல் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து பாவங்கள் மன்னிக்கப்பட்டு வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாவோம். மெய்யான ஆசீர்வாதத்தினைச் சுதந்தரித்துக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

No comments: