DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, September 18, 2024

நல்ல மேய்ப்பன்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 21, 2024. 💚சனிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,321


"என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." ( எசேக்கியேல் 34 : 15 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பனாய் இருக்கின்றார். இந்த நல்ல மேய்ப்பரைக்குறித்து எசேக்கியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாகக் கூறும் வார்த்தைகளே  இன்றைய தியான வசனம். "அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும் இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்." ( எசேக்கியேல் 34 : 14 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இந்த உலகத்தில் வாழ்ந்தபோது கிறிஸ்துவும் இதனையே கூறினார். "நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14, 15 ) என்றார் அவர். 

இன்றைய தியான வசனத்தில் ஆடுகள் என்று வெறுமனே கூறாமல், 'என் ஆடுகள்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நல்ல மேய்ப்பனாம் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி நடப்பவர்களே அவரின் ஆடுகள். அப்படி அவரது வார்த்தையின்படி வாழும் மக்களை அவரே மேய்த்து வழிநடத்துவார். "அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்" எனும் தீர்க்கதரிசன வார்த்தைகள் கிறிஸ்து அருளும் ஆசீர்வாதங்களையும் சமாதானத்தையும் கூறுகின்றது. 

அன்பானவர்களே, நாம் நல்ல மேய்ப்பனாம் கிறிஸ்துவின் குரலுக்குக் கீழ்படியும்போது  மட்டுமே அவரை அறிந்திருக்கின்றோம் என்று கூறமுடியும். அப்படி அறியும்போது மட்டுமே அவரது இரத்தத்தாலான மீட்பினை நாம் அனுபவிக்கமுடியும். இதனையே அவர், "நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." என்று கூறுகின்றார். ஆம், அவர் சிலுவையில் நமக்காக பலியானதையே இது குறிக்கின்றது. 

மட்டுமல்ல, இந்த மீட்பு அனுபவத்தை உலக மக்கள் அனைவரும் பெற்று அனுபவிக்கவேண்டுமென்று கிறிஸ்து விரும்புகின்றார். அதனையே அவர் கூறினார், "இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்." ( யோவான் 10 : 16 ) 

ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும் ஏற்படவேண்டுமானால் உலகிலுள்ள மக்கள் அனைவரும் முதலில் அந்த நல்ல மேய்ப்பனை அறியவேண்டியது அவசியம். அதற்கு அவரை அறிந்தவர்கள் அவரை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டியது அவசியம். எனவே அன்பானவர்களே, நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையினாலும் வார்த்தைகளினாலும் அவரை மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களாக வாழ்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

No comments: