இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, September 25, 2024

கனிகளோடுகூடிய நற்செயல்கள்

 'ஆதவன்' செப்டம்பர் 29, 2024. ஞாயிற்றுகிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,329


"ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்." ( எபேசியர் 2 : 10 )

இன்றைய தியான வசனம் "ஏனெனில்", எனும் வார்த்தையோடு ஆரம்பிக்கின்றது. அப்படியானால் இதற்குமுன் ஏதோ ஒன்று கூறப்பட்டுள்ளது, அத்தனையும் சேர்த்து வாசித்தால்தான் உண்மை விளங்கும். அது என்ன? இன்றைய வசனத்துக்கு முந்தின வசனங்கள் கூறுகின்றன, "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" ( எபேசியர் 2 : 8, 9 )

அதாவது, கிறிஸ்துவின்மேல் கொண்டிருந்த விசுவாசத்தாலும்  கிருபையாலும் நாம் இரட்சிக்கப்பட்டுள்ளோம். இதுதேவனால் உண்டானது. இப்படி நாம் கிருபையால் இரட்சிக்கப்பட்டது ஏனென்றால், நற்செயல்கள் செய்கிறதற்கு.  அப்படி நாம் நற்செயல்கள்  செய்து நடக்கும்படி அவர் முன்னதாக இந்த மீட்பு அல்லது இரட்சிப்பை நமக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.

ஆம் அன்பானவர்களே, எல்லோரும் நற்செயல்கள் செய்யலாம். பலரும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், மீட்பு அனுபவம் பெற்று ஒருவர் நற்செயல் செய்யும்போது அது மற்றவர்கள் செய்வதிலிருந்து வித்தியாசமாக இருக்கும். இப்படி நாம் வித்தியாசமானவர்களாக இருக்கும்படிக்கே - அவைகளில் நாம் நடக்கும்படிக்கே - அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

கிறிஸ்துவோடு இணைந்த வாழ்க்கை இல்லாமல் நாம் கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ முடியாது. நற்செயல்கள் செய்வது என்பது வேறு; கனியுள்ள வாழ்க்கை வாழ்வது என்பது வேறு. கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது மட்டுமே நாம் கனிகளோடு சேர்ந்து நற்செயல்கள் செய்ய முடியும். இதனையே இயேசு கிறிஸ்து கூறினார், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 )

மட்டுமல்ல, தொடர்ந்து அடுத்த வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறினார், "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15 : 5 ) ஆம் அன்பானவர்களே, அவர் நமக்குள் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இப்படி நாம் கனியுடன் கூடிய வாழ்க்கையுடன் நற்செயல்கள் செய்யவே அவர் மீட்பு அல்லது இரட்சிப்பு அனுபவத்தை ஏற்பாடு செய்துள்ளார்.  

மேலும் இன்றைய வசனம் சொல்கின்றது, நாம்  படைக்கப்பட்டதே கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து நற்செயல்கள் செய்வதற்காகவே. எனவேதான் எபிரெயர் நிருப ஆசிரியர் கூறுகின்றார், "அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 4 )

அன்பானவர்களே, கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து நமது பாவங்களை அறிக்கையிட்டு அவரது மன்னிப்பை வேண்டுவோம்.  அப்போதுதான்  நாம் கனிகளோடுகூடிய நற்செயல்கள் செய்து தேவனை மகிமைப்படுத்த முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

No comments: