இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, September 06, 2024

என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு

 'ஆதவன்' செப்டம்பர் 15, 2024. ஞாயிற்றுக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,315


"இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு." ( ஓசியா 13 : 9 )

இன்றைய தியான வசனம் தேவனது  அளப்பரிய இரக்கத்தை எடுத்துக் கூறுகின்றது. மனிதர்கள் நாம் வலுவற்றவர்கள். எனவே, நாம் பலவேளைகளில் தவறி தேவனுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டுவிடுகின்றோம். ஆனால் தேவன் நமது வலுவற்ற நிலையினை அறிவார். எனவேதான், நீ எனது  வார்த்தைகளை மீறி உனக்கு நீ கேடுண்டாக்கிக்கொண்டாய் ஆனாலும் என்னிடத்தில் உனக்கு மன்னிப்பு உண்டு என்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

எப்படி கேடுண்டாகிக்கொண்டார்கள் என்பதனை இன்றைய தியான வசனத்துக்கு  மூன்று வசனங்களுக்குமுன் நாம் வாசிக்கின்றோம், "தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதனால் என்னை மறந்தார்கள்." ( ஓசியா 13 : 6 )

அதாவது, நல்ல ஒரு வேலை, மனம் விரும்புவதை வாங்கக்கூடிய அளவு பணம்,  மற்றவர்களைவிட உயர்ந்த அந்தஸ்து இவை இருப்பதால் அவற்றின்மேலேயே நம்பிக்கைக்கொண்டு தேவனை மறந்தார்கள் என்று பொருள். இதனையே இந்த வசனம், "தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று" என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனாலும், நீ மனம்திரும்பி என்னிடம் வந்தால் உனக்குச் சகாயம் உண்டு என்கின்றார் தேவனாகிய கர்த்தர். புதிய ஏற்பாட்டின்படி கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட மீட்பு அனுபவம் பெற்ற நாம்தான் ஆவிக்குரிய யூதரும் இஸ்ரவேலருமாய் இருக்கின்றோம்.  உள்ளத்தில் யூதர்களான நாமே யூதர்கள். "ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்" ( ரோமர் 2 : 28, 29 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படி கிறிஸ்துவை  அறிந்துகொண்ட நாமே யூதரும் இஸ்ரவேலருமாக இருக்கின்றோம். எனவே, நாம் மற்ற உலக மனிதர்கள் உலக செல்வத்தால் திருப்தியாகி தேவனை மறந்து வாழ்வதுபோல வாழக்கூடாது என்று இன்றைய தியான வசனம் உணர்த்துகின்றது.  அப்படி நாம் இதுவரை நமக்கு உள்ள வசதிகள் வாய்ப்புகள், பதவிகள் குறித்து மேன்மைபாராட்டி மற்றவர்களை அற்பமாக எண்ணியிருப்போமானால் நாம் நமக்குக் கேடுண்டாக்கிக்கொண்டுள்ளோம் என்று பொருள். 

ஒருவேளை மனம்திரும்பிய வாழ்க்கை வாழ்ந்தாலும் நம்மை அறியாமலேயே இத்தகைய ஒரு சில பாவங்கள் நம்மை மேற்கொண்டு தேவனைவிட்டு நம்மைப் பிரித்துவிடக்கூடும். ஆனாலும், "என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு." என்கிறார் கர்த்தர். 

ஆம் அன்பானவர்களே, இப்படி நாம் இதுவரை வாழ்ந்திருப்போமானால் தேவனிடம் மன்னிப்பு வேண்டி மன்றாடுவோம். நமது தவறான வழியைவிட்டு விலகுவோம்.  அப்படி நாம் மன்னிப்புக்கேட்டு மனம்திரும்புவோமானால் நமக்கு மன்னிப்பு உண்டு. ஆம்,  "ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு." என்கிறார் கர்த்தராகிய தேவன். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

No comments: