DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Friday, September 20, 2024

என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

 'ஆதவன்' செப்டம்பர் 22, 2024. ஞாயிற்றுக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,322


"நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை." ( யோவேல் 2 : 26 )

இன்றைய தியான வசனம் தேவனுடைய பிள்ளைகளுக்குரிய வாக்குத்தத்த வசனமாக உள்ளது.  அதாவது கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பாவமன்னிப்பு நிச்சயத்தைப் பெற்றவர்களே அவரது மக்கள். இந்த "என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை." என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இப்படி தேவனது மக்களாக இருப்பவர்கள், சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, தங்களை அதிசயமாய் நடத்திவந்த தங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் ஒரு திருப்தியான வாழ்க்கை வாழ்வார்கள். காரணம் தேவனாகிய கர்த்தர் அவர்களை அதிசயமாக நடத்திவந்துள்ளார் என்று இந்த வசனம் கூறுகின்றது. 

பல்வேறு நெருக்கடிகள் போராட்டங்கள் வாழ்வில் வந்தாலும் தேவனால் மீட்கப்பட்டவர்கள் தேவனால் தனி அன்போடு கவனிக்கப்படுவார்கள். எனவே, தேவ ஜனங்கள் துன்பப்படும்போது மற்றவர்கள் அவர்களை அற்பமாகப் பார்த்தாலும் முடிவில் அப்படி அற்பமாகப் பார்த்தவர்கள் வெட்கப்படுவார்கள். தேவன் ஒருபோதும் தனது மக்களை வெட்கப்பட விடமாட்டார்.   

நமது ஆரம்பத்தில் நாட்கள் மற்றவர்களைவிட அற்பமானதாக இருக்கலாம். ஆனால், அந்த நாளிலும் பிறர் நம்மைப் பார்ப்பதைவிட கர்த்தரது கண்கள் சந்தோஷமாய் நம்மைப் பார்க்கின்றன. அவரது கரங்கள் நம்மை வழிநடத்துகின்றன. ஆம், "அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது". ( சகரியா 4 : 10 )

எனவே நாம் எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரைத் துதிக்கக் கற்றுக்கொள்வோம். "ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்". (எபிரெயர் 13:15) எப்போதும் என்று கூறும்போது வாழ்வில் நல்லது கெட்டது எது நடக்கும்போதும் என்று பொருள்.

எனவே தேவனுடைய பிள்ளைகளே, வாழ்வில் நமது இன்றைய குறைகளை எண்ணி வேதனைப்படாமல் மகிழ்ச்சியாக இருப்போம். தேவனுக்கேற்ற வாழ்வைத் தொடர்வோம். எப்போதும் நமது உதடுகள் தேவனைத் துதிக்கும் உதடுகளாக இருக்கட்டும்.  "நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை." என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

No comments: