இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, September 16, 2024

"என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் ?"

 'ஆதவன்' 💚செப்டம்பர் 20, 2024.வெள்ளிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,320


"அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்." ( மத்தேயு 16 : 15 )

தன்னை ஏற்றுக்கொள்பவர்கள் வெறுமனே தன்னிடம் அன்புகூராமல் தான் யார் என்பதனை அறிந்து அன்புகூரவேண்டுமென்று இயேசு கிறிஸ்து விரும்புகின்றார். இன்று கிறிஸ்துவை அறியாத பிறமத அன்பர்களும் பலர் இயேசுவை அன்புசெய்கின்றனர். ஆனால் அவர்கள் மற்ற தெய்வங்களைப்போல அவரும் ஒருவர் என்று எண்ணிக்கொள்கின்றனர். எனவே தங்களது தொழில் நிறுவனங்களில் பிறமத தெய்வங்களது படங்களுடன் இயேசு கிறிஸ்துவின் படத்தையும் வைத்து மாலை அணிவித்து நறுமண தூபம் காட்டுகின்றனர். ஆனால் இவை கிறிஸ்துவைத் திருப்திச் செய்யாது என்பதனை அவர்கள் உணர்வதில்லை. 

இதுபோலவே இயேசு கிறிஸ்து உயிருடன் இருந்த காலத்தில் வாழ்ந்த யூதர்கள் பலரும் அவரை மதித்தனர். ஆனால் அவர் யார் என்பதனை அவர்கள் உணர்ந்து மதிக்கவில்லை. மாறாக, முற்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசி உயிர்பெற்று எழுந்து வந்துள்ளதாக எண்ணிக்கொண்டனர். சிலர்  அவரை யோவான் ஸ்நானகன் என்றனர், சிலர் எலியா என்றனர், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று எண்ணிக்கொண்டனர். எனவே, முதலில் தனது சீடர்களிடம் இயேசு, "மக்கள் என்னை யார் என்று கூறுகின்றனர்?" என்று கேட்டபோது சீடர்கள் இந்தப் பதிலையே கூறினர்.

ஆனால் இயேசு கிறிஸ்து, மக்கள் கூறுவது இருக்கட்டும், "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார். ஏனெனில் நீங்கள் ஆரம்பம்முதல் என்னோடு இருக்கிறீர்கள், என்னோடு பழகியிருக்கிறீர்கள் எனவே மக்கள் எண்ணத்துக்கும் உங்கள் எண்ணத்துக்கும் வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதனை உணர்த்துவதற்குத்தான் இப்படிக் கேட்டார்.  அப்போது, "சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்." ( மத்தேயு 16 : 16 )

ஆம் அன்பானவர்களே, இன்று நாம் கிறிஸ்துவை எப்படிப் பார்க்கின்றோம்.? நம்மில் சிலர் அவரை நோய்தீர்க்கும் மருத்துவராக, கடன் தீர்க்க உதவும் நிதிஉதவி செய்பவராக, வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது வீட்டைக் காக்கும் காவல்காரராக, அனைத்துவித உலக ஆசீர்வாதங்களையும் வழங்குபவராகவே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.  இது யூதர்கள் அவரைப் பார்த்ததுபோன்ற பார்வையாகும்.   

அப்போஸ்தலரான சீமோன் பேதுரு கூறியபடி அவரை நாம்  ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாகப் பார்ப்போமானால் மட்டுமே நமக்கும் அவருக்கும் உறவு சரியாக இருக்கின்றது என்று பொருள். அப்போதுதான் நமது பாவங்களை அவரால் மன்னிக்கமுடியுமென்ற உறுதி நமக்கு ஏற்படும். இப்படி பாவங்கள் மன்னிக்கப்படும்போது நாம் கிறிஸ்துவோடு நெருங்கிய உறவினர்களாக மாறிவிடுகின்றோம். அப்போது நாம் அவரை ஒரு தகப்பனாக, தாயாக, நண்பனாக, சகோதரனாகப் பார்க்கமுடியும். 

இப்படி நாம் அவரை ஏற்றுக்கொள்வதையே கிறிஸ்து விரும்புகின்றார். எனவே அன்பானவர்களே, இதுவரை அவரை நாம் யூகர்களைப்போல பார்த்திருப்போமானால் அந்தப் பார்வையை மாற்றுவோம். அவரை ஆத்தும இரட்சகராக,  ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாகப் பார்க்கப் பழகுவோம். அப்போது நமது ஆவிக்குரிய வாழ்க்கை அடுத்த உயர்ந்த நிலைக்குச் செல்வதை கண்டுகொள்ளலாம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Monday, September 09, 2024

பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? நீ சமபூமியாவாய்.....".

 'ஆதவன்' 💚செப்டம்பர் 19, 2024. வியாழக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,319


பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்....." 

பாபிலோனில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரை கோரஸ் ராஜா (King Syrus ) விடுவித்து நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து  கைப்பற்றிச்சென்ற பொருட்களையும் திருப்பிக்கொடுத்து ஆலயத்தைத் திரும்பவும் கட்ட அனுமதியளித்தான். அப்போது செருபாபேல் தலைமையில் ஆலயம் கட்டப்பட்டது. ஆலயம் கட்டத் துவங்கியபோது யூதருக்கு எதிரானவர்கள் ஆலயம் கட்டுவதை எதிர்த்தனர்; தடைசெய்தனர். ஆலயப்பணி பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுக் கிடந்தது. 

அப்போது சக்கரியா தீர்க்கதரிசிமூலம் கர்த்தரது வார்த்தை வந்தது.  அப்போது அவர் கூறியதுதான் இன்றைய தியான வசனம். மட்டுமல்ல, கர்த்தர் தொடர்ந்து கூறுகின்றார், "செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்." ( சகரியா 4 : 9 )

ஆம் அன்பானவர்களே, இன்று நாமே தேவனுடைய ஆலயமாய் இருக்கின்றோம். ஒருவேளை நமது உடலாகிய ஆலயம் சந்துருவின் முயற்சியால் இன்று தேவனற்றதாக மாறிப்போயிருக்கலாம். அல்லது நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை நாம் இழந்துபோயிருக்கலாம். பெரிய மலைபோன்ற பிரச்சனைகள் நம்மை நெருக்கலாம். நாம் எப்படி வாழ்வைத தொடருவோம் என அங்கலாய்த்துக் கொண்டிருக்கலாம். நம்மைப்பார்த்து தேவன் கூறுகின்றார், "பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்.....". எந்த மலைபோன்ற பிரச்சினை நம்மை நெருக்கினாலும்  அது நொறுங்கி சமபூமியாகும். 

ஆனால் செருபாபேலுக்கு இருந்ததுபோன்ற ஆர்வம் நமக்கு இருக்கவேண்டியது அவசியம்.   சும்மா இருந்துகொண்டு தேவனே எல்லாம் செய்வார் என்று எண்ணிடாமல் நம்மை அவரது பலத்தக்  கரத்தினுள் ஒப்புக்கொடுத்து நமது உடலாகிய ஆலயத்தைக் கட்டி எழுப்ப ஒப்புக்கொடுக்கவேண்டும். 

பலமில்லாத நம்மைக்கொண்டே தேவன் இதனை நமது வாழ்வில் செய்துமுடிப்பார். இதனையே, "செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். இன்றைய வசனத்தில் செருபாபேல் எனும் பெயர் வருமிடத்தில் உங்கள் பெயரைச் சேர்த்துச் சொல்லி இதனை விசுவாச அறிக்கையாகக் கூறுங்கள். எந்தப் பெரிய பர்வதமானாலும் அது எம்மாத்திரம்? நமக்கு முன்பாக அது சமபூமியாகிடும். 

தேவனது அற்புதமான ஆற்றல்மூலம் எருசலேம் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டதை நாம் எஸ்றா நூலில் வாசிக்கலாம். சகரியா தீர்க்கத்தரிசி மூலம் தேவன் கூறிய வார்த்தைகள் நிறைவேறின. ஆம், "செருபாபேலுக்குச் (நமக்கு) சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

Sunday, September 08, 2024

ஏழைகளைப் பரிகாசம் பண்ணுகிறவன்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 18, 2024. 💚புதன்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,318



"ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்..." ( நீதிமொழிகள் 17 : 5 )

பரிகாசம் பண்ணுதல் என்பது வெறுமனே கேலி கிண்டல் செய்வதைமட்டுமல்ல, ஏழைகளை அற்பமாக எண்ணுவது, அவர்களைப்  புறக்கணிப்பது, அவர்களோடு பேசத் தயங்குவது, மற்றவர்களோடு அவர்களை ஒப்பிட்டு அற்பமாகப் பேசுவது போன்ற அனைத்துக் காரியங்களையும் குறிக்கும். 

ஒருமுறை ஏழைப் பெண் ஒருவர் வழக்கமாக அவர் அணிவதைவிட நல்ல ஆடை அணிந்து ஆலயத்துக்கு  வந்தார். அன்று ஆராதனை முடிந்து ஆலய வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த இரு பெண்கள் அந்தப் பெண்ணைக்குறித்துப் பேசும்போது ஒருத்தி, "இன்றைக்கு இன்னாரது மகளைப் பார்த்தாயா?"  என்று அந்தப் பெண்ணின் தகப்பன் பெயரைச்சொல்லி  ஒருவிதக் கேலியாகக் கேட்க,  மற்றவள், " யாராவது தர்மம்  செய்திருப்பார்கள்" என்றாள். 

இந்தமாதிரி பேச்சுக்களைச்  சம்பந்தப்பட்ட அந்தப்பெண்  கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவரைப் பரிகாசம் பண்ணுவதுதான்.  இதுபோல சிலர் தங்கள் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரர்களை எண்ணுவதுண்டு. கெட்டுப்போன உணவுகளை வேலைக்காரர்களுக்குக் கொடுப்பது, அவர்களுக்கான சம்பளத்தை ஏற்ற காலத்தில் கொடுக்காமல் இழுத்தடிப்பது, ஒருநாள் அவர்கள் வேலைக்கு வரவில்லையானால் சம்பளம் கொடுக்கும்போது ஒருநாள் கூலியைக் கணக்குப் பார்த்துக் குறைப்பது இவைபோன்றவை ஏழைகளை பரிகாசம்பண்ணுவதுதான்.

பெரும்பாலும் அரசு வேலைகளில் இருப்போர் இப்படிச் செய்கின்றனர். அரசாங்கம் எத்தனைநாள் தங்களுக்கு விடுமுறை அளிக்கின்றது, இதுதவிர பணி நாட்களில் எத்தனை நாட்கள் எத்தனை வகை விடுமுறை அளிக்கப்படுகின்றது என்பதனை இவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.  

கடுமையான வார்த்தைகளால் வேலைக்காரர்களைத் திட்டுவதும் அவர்களைப் பரிகாசம்பண்ணுவதுதான்.   அவர்கள் ஏன் நம்மிடம் வேலைக்கு வந்திருக்கின்றார்கள்? அவர்களது ஏழ்மை நிலையால்தானே? எனவேதான் வேதம் சொல்கின்றது, "எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்." ( எபேசியர் 6 : 9 )

நான் ஆவிக்குரிய விசுவாசி என்று கூறிக்கொள்வதாலோ, ஆவிக்குரிய ஆராதனையில் கலந்துகொண்டு கூச்சலிடுவதாலோ, வேதாகமத்தை தினமும் வாசிப்பதாலோ, பல மணிநேரம் உபவாச ஜெபம் செய்வதாலோ நாம் தேவனது பார்வையில் நல்லவர்களல்ல. எனவே பெரிய அளவில் ஏழைகளுக்குத் தானதர்மங்கள்  செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இத்தகைய குறைகள் நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்வோம்.  

"தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்." ( நீதிமொழிகள் 14 : 31 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                   

Saturday, September 07, 2024

தேவ ஞானம் Vs சுய ஞானம்

 'ஆதவன்' செப்டம்பர் 17, 2024. செவ்வாய்க்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,317


"தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." ( 1 கொரிந்தியர் 1 : 21 )

ஆன்மீகத் தேடல் என்பது இயற்கையிலேயே ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது. எனவேதான் நமது நாட்டில்கூட பல்வேறு பெரியவர்கள், மகான் என அழைக்கப்படுகின்றவர்களும் தோன்றி தங்களுக்கு எது சரியோ அதனைக் கடவுளை அறியும் வழியாகப் போதித்து வந்துள்ளனர். இப்படி போதிக்கப்பட்ட அனைத்தும் சரி என்று நாம் கூறிவிடமுடியாது.  அதற்குக் காரணம் என்ன என்பதையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

தேவ ஞானம், சுய ஞானம் எனும் இரு காரியங்கள் இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ளன. சுய ஞானம் என்பது மனிதனது சுயபுத்தியால் கற்றுக்கொடுக்கப்படும் அறிவு. தேவ ஞானம் என்பது விண்ணகத்திலிருந்து தேவனால் அருளப்படுகின்ற வெளிப்படுத்துதல் மூலம் அடையும் அறிவு. 

இன்று கடவுளை அறிந்துகொண்டவர்கள்போல பேசும் பலரும் தங்களைத் துறவிகள் என்று கூறிக்கொள்பவர்களும், சாதுக்களும்  தங்களது சுய ஞானத்தால் கடவுளைப் பற்றி பேசுபவர்கள்தான். காரணம், இப்படிப் பேசும் பலரும் பெரும்பாலும் உலகம் அருவருக்கும்  செயல்களைச் செய்பவர்களாக இருக்கின்றனர். இதுவே இவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்பதனை வெளிப்படுத்துகின்றது. இதற்கு ஆதாரமாக நாம் இவர்களைப்பற்றிய பல்வேறு செய்தித் சான்று காட்டமுடியும். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இவர்களைப்பற்றிய இத்தகையைச் செய்திகளை வெளியிடும்போது பலரும் அதிர்ச்சியடைகின்றனர். ஆனால் நாம் அப்படி அதிர்ச்சி அடைவதில்லை. காரணம், சுய ஞானம் இப்படித்தான் இருக்குமென்பது நமக்குத் தெரியும். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீத்துவுக்கு எழுதும்போது;- "அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்." ( தீத்து 1 : 16 ) என்று கூறுகின்றார். 

ஆனால், கிறிஸ்துவைக்குறித்து நாம் பிரசங்கிப்பது பலருக்கு பைத்தியக்காரத்தனம்போல இன்று தெரிகின்றது. பலரும், "இந்தக்காலத்தில்போய் இதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்களே" என்று கிண்டலாகக் கூறுகின்றனர். ஆனால் இந்தப் பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  

ஆம் அன்பானவர்களே, சிலுவையைப்பற்றிய உபதேசம் வெறும் போதனையல்ல, அது மனிதனில் உள்ளான மாற்றத்தைக் கொண்டுவரும் வல்லமை உடையது. காரணம், அவை தேவனது வார்த்தைகள். பல்வேறு மத சாதுக்களும், கடவுளைக்குறித்து போதிக்கும் சந்நியாசிகளும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்காத பரிசுத்தத்துக்கு நேராக இந்த வார்த்தைகள் நம்மை வழிநடத்துகின்றன. காரணம் அவை தேவ குமானாகிய கிறிஸ்துவின் உயிருள்ள வார்த்தைகள். "அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்." ( 1 கொரிந்தியர் 1 : 31 ) எனவே, உலகத்துக்குப் பைத்தியமாகத் தோன்றுகிற அவரது வார்த்தைகளை யார் கேலிசெய்தாலும் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

Friday, September 06, 2024

தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவை

 'ஆதவன்' செப்டம்பர் 16, 2024. 💚திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,316


"தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;" ( 1 கொரிந்தியர் 2 : 9 )

தேவனிடத்தில் அன்புகூருபவர்களுக்கு மற்றவர்களைப்போல உலக ஆசீர்வாதங்கள் இல்லாமல் இருந்தாலும் மற்றவர்கள் உணர்ந்துகொள்ளாத பரம ஆசீர்வாதங்கள் உண்டு. ஆனால் அவைகளை எல்லோரும் கண்டுகொள்வதில்லை. கிறிஸ்துவுக்காக பலர் வைராக்கியமாகச் செயல்படக் காரணம் அவர்கள் இந்த பரம ஆசீர்வாதங்களைக் கண்டுகொண்டதால்தான். 

தங்களிடம் உலக ஆசீர்வாதமிருப்பதால் சிலர் அந்த ஆசீர்வாதங்கள் எதுவுமில்லாத மற்றவர்களை அற்பமாக எண்ணுவதுண்டு. ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்கள் உலகத்தின்முன் அற்பமாக எண்ணப்பட்டாலும் தேவன் அவர்களிடம் அன்புகூருகின்றார்.  அப்படித்  தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு தேவன்  ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

தேவன் ஆயத்தம்பண்ணின இந்த ஆசீர்வாதங்களை ஆவிக்குரியவர்களுக்கு அவர் வெளிப்படுத்திக் கொடுக்கின்றார். இதனையே, "நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." ( 1 கொரிந்தியர் 2 : 10 ) என்று இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். 

தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருந்தால் மட்டுமே நாம் இதனைக் கண்டுகொள்ளமுடியும். ஆம், "மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்." ( 1 கொரிந்தியர் 2 : 11 )

இயேசு கிறிஸ்துவும் இதனைத் தனது சீடர்களுக்கு எடுத்துக்கூறினார். "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்." ( யோவான் 14 : 2 ) பிதாவின் வீட்டிலுள்ள வாசஸ்தலம் தான் ஆவிக்குரிய மக்களது ஆசீர்வாதம். அதற்காகத்தான் இயேசு கிறிஸ்து பரலோகம் சென்றார். "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்." ( யோவான் 14 : 3 ) என்று வாக்குறுதியும் அளித்துள்ளார். 

ஆம் அன்பானவர்களே, விசுவாசத்தோடு தேவனது வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்வோம். ஆவியானவர் அந்த விசுவாச சத்தியத்தை நாம்  உணர்ந்துகொள்ளும் மனதினை  நமக்கு அருளும்படி வேண்டுதல் செய்வோம். தேவனிடத்தில் தொடர்ந்து அன்புகொண்டு ஆவிக்குரிய வாழ்வைத் தொடருவோம். அப்போது தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளை விசுவாசத்தால் கண்டு உணரும்படியான உள்ளத்தை அவர் நமக்குத் தந்து நம்மைத் திடப்படுத்துவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                   

என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு

 'ஆதவன்' செப்டம்பர் 15, 2024. ஞாயிற்றுக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,315


"இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு." ( ஓசியா 13 : 9 )

இன்றைய தியான வசனம் தேவனது  அளப்பரிய இரக்கத்தை எடுத்துக் கூறுகின்றது. மனிதர்கள் நாம் வலுவற்றவர்கள். எனவே, நாம் பலவேளைகளில் தவறி தேவனுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டுவிடுகின்றோம். ஆனால் தேவன் நமது வலுவற்ற நிலையினை அறிவார். எனவேதான், நீ எனது  வார்த்தைகளை மீறி உனக்கு நீ கேடுண்டாக்கிக்கொண்டாய் ஆனாலும் என்னிடத்தில் உனக்கு மன்னிப்பு உண்டு என்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

எப்படி கேடுண்டாகிக்கொண்டார்கள் என்பதனை இன்றைய தியான வசனத்துக்கு  மூன்று வசனங்களுக்குமுன் நாம் வாசிக்கின்றோம், "தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதனால் என்னை மறந்தார்கள்." ( ஓசியா 13 : 6 )

அதாவது, நல்ல ஒரு வேலை, மனம் விரும்புவதை வாங்கக்கூடிய அளவு பணம்,  மற்றவர்களைவிட உயர்ந்த அந்தஸ்து இவை இருப்பதால் அவற்றின்மேலேயே நம்பிக்கைக்கொண்டு தேவனை மறந்தார்கள் என்று பொருள். இதனையே இந்த வசனம், "தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று" என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனாலும், நீ மனம்திரும்பி என்னிடம் வந்தால் உனக்குச் சகாயம் உண்டு என்கின்றார் தேவனாகிய கர்த்தர். புதிய ஏற்பாட்டின்படி கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட மீட்பு அனுபவம் பெற்ற நாம்தான் ஆவிக்குரிய யூதரும் இஸ்ரவேலருமாய் இருக்கின்றோம்.  உள்ளத்தில் யூதர்களான நாமே யூதர்கள். "ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்" ( ரோமர் 2 : 28, 29 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படி கிறிஸ்துவை  அறிந்துகொண்ட நாமே யூதரும் இஸ்ரவேலருமாக இருக்கின்றோம். எனவே, நாம் மற்ற உலக மனிதர்கள் உலக செல்வத்தால் திருப்தியாகி தேவனை மறந்து வாழ்வதுபோல வாழக்கூடாது என்று இன்றைய தியான வசனம் உணர்த்துகின்றது.  அப்படி நாம் இதுவரை நமக்கு உள்ள வசதிகள் வாய்ப்புகள், பதவிகள் குறித்து மேன்மைபாராட்டி மற்றவர்களை அற்பமாக எண்ணியிருப்போமானால் நாம் நமக்குக் கேடுண்டாக்கிக்கொண்டுள்ளோம் என்று பொருள். 

ஒருவேளை மனம்திரும்பிய வாழ்க்கை வாழ்ந்தாலும் நம்மை அறியாமலேயே இத்தகைய ஒரு சில பாவங்கள் நம்மை மேற்கொண்டு தேவனைவிட்டு நம்மைப் பிரித்துவிடக்கூடும். ஆனாலும், "என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு." என்கிறார் கர்த்தர். 

ஆம் அன்பானவர்களே, இப்படி நாம் இதுவரை வாழ்ந்திருப்போமானால் தேவனிடம் மன்னிப்பு வேண்டி மன்றாடுவோம். நமது தவறான வழியைவிட்டு விலகுவோம்.  அப்படி நாம் மன்னிப்புக்கேட்டு மனம்திரும்புவோமானால் நமக்கு மன்னிப்பு உண்டு. ஆம்,  "ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு." என்கிறார் கர்த்தராகிய தேவன். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

Wednesday, September 04, 2024

நமக்காக ஜெபித்த இயேசு கிறிஸ்து

 'ஆதவன்' செப்டம்பர் 14, 2024. 💚சனிக்கிழமை           வேதாகமத் தியானம் - எண்:- 1,314



"........உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே." ( யோவான் 17 : 9 )

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மை அறிந்த நம் ஒவ்வொருவருக்காகவும் ஏற்கெனவே ஜெபித்துள்ளார். அதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் பார்க்கின்றோம். இன்று சிலர் ஜெபிப்பதைப்போல மொத்த உலகத்துக்காகவும் அவர் ஜெபிக்கவில்லை. மாறாக, அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களுக்காக மட்டும் அவர் ஜெபித்தார். அதனையே, "........உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே." என்று கூறுகின்றார். 

அவர் இப்படி ஜெபிக்க என்ன காரணம் என்பதனையும் அவர் கூறுகின்றார். அதாவது, "நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்." ( யோவான் 17 : 8 )

பிதா தனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன், அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். அவர்கள் உம்முடையவர்களே என்கின்றார். காரணம், பிதாவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவனே பிதாவுக்குரியவன். அவர்களுக்காக மட்டுமே அவர் ஜெபிக்கமுடியும். அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவன் அவரையும்  ஏற்றுக்கொள்ளாதவனாக இருக்கின்றான். அப்படி அவரை ஏற்றுக்கொள்ளாதவனுக்காக அவர் ஜெபிக்கமுடியாது.  

ஆனால், தேவன் அனைவரையும் அன்பு செய்வதால் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று விரும்புகின்றார்.  ஆனால் அவர் எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்போது நாம் அவருக்குரியவர்கள் ஆகின்றோம். 

தன்னை அறியும் சந்தர்ப்பத்தை அனைவருக்கும் தேவன் அளிக்கின்றார்.  அதனை பயன்படுத்திக்கொள்பவர்கள் அவரை அறிகின்றார்கள். அல்லது சத்தியத்தை அறியவேண்டுமென்று விரும்புகின்றவர்கள் அவரை அறிந்துகொள்கின்றனர். உண்மையாக தேவனைத் தேடுபவர்கள் அவரை அறிந்துகொள்கின்றனர். அவர்கள் அனைவரும் அவருடையவர்களாகின்றனர். 

எனவேதான் அவர் இன்றைய தியான வசனத்தின் முந்தைய  வசனத்தில், அவர்கள் உமது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள் என்று கூறுகின்றார். ஆணடவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொள்ளும்போது பிதாவை ஏற்றுக்கொள்கின்றோம். நாம் அவர்களுடையவர்கள் ஆகின்றோம். 

அன்பானவர்களே, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது வெறும் வாயினால் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுவதோ, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதோ, வெறுமனே வேதாகமத்தை வாசிப்பதோ அல்ல, மாறாக அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும்  அனுபவம்.  அந்த அனுபவம் பெற்றவர்களே பிதாவினால் இயேசு கிறிஸ்துவுக்கென்று கொடுக்கப்பட்டவர்கள். அப்படி நாம் இருப்போமானால் நமக்காக இயேசு கிறிஸ்து ஏற்கெனவே ஜெபித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சியும் மன நிறைவும் சமாதானமும் அடைந்தவர்களாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

துக்கத்தில் மனமகிழ்ச்சி

 'ஆதவன்' செப்டம்பர் 13, 2024. வெள்ளிக்கிழமை        வேதாகமத் தியானம் - எண்:- 1,313 



"உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்."( சங்கீதம் 119 : 92 )

கிறிஸ்துவுக்குள் நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போதும் பலவேளைகளில் துன்பங்கள் நம்மை நெருக்கிச் சோர்ந்துபோகச் செய்துவிடும். அத்தகைய வேளைகளில் தேவனுடைய வார்த்தைகளே நமக்கு ஆறுதலும் மனமகிழ்ச்சியும் தர முடியம். இப்படி ஆவிக்குரிய வாழ்வில் மட்டுமல்ல, சாதாரண மனிதர்கள், கிறிஸ்துவை அறியாத மனிதர்கள் வாழ்விலும் இது உண்மையாகும். ஆம், கிறிஸ்துவை வாழ்வில் அறியாத பலரும்கூட தேவ வார்த்தைகளால் மரணத்துக்குத் தப்பி வாழ்ந்துள்ளனர். 

இதுகுறித்தப் பல சாட்சிகளை நான் கேட்டுள்ளேன். வாழ்வே இருளாகி இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும் சூழ்நிலையில் ஏதோ ஒரு  வழியில் தேவனது வார்த்தைகள் அவர்களோடு இடைப்பட்டு  தற்கொலை முடிவினை  கைவிட்டுள்ளதாகப் பலரும் சாட்சி கூறுகின்றனர். ஒருமுறை ஒரு பிராமண நண்பர் என்னிடம், "நான் சுவர்களில் எழுதப்பட்டுள்ள வேத வசனங்களை எங்கு கண்டாலும் வாசித்துப் பார்ப்பேன். காரணம் அவை எனக்குள்ளே புத்துணர்ச்சியைத் தருகின்றன" என்று கூறினார். 

இத்தகைய மகிழ்ச்சி தனக்குள்  இருந்ததால்தான் இன்றைய தியான வசனத்தில் சங்கீத ஆசிரியர், "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்" என்கின்றார். அதாவது,  உமது வேத வார்த்தைகள் இருப்பதால்தான் நான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இல்லையானால் அழிந்துபோயிருப்பேன் என்று கூறுகின்றார்.  ஆம் அன்பானவர்களே, வேத வசனங்களில் நாம் காணும் பல வாக்குறுதிகள் நமக்கு எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையினைத் தந்து நம்மை வாழவைக்கின்றன. 

"உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்." ( சங்கீதம் 119 : 103 ) என்றும் "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 119 : 105 ) என்றும் இன்றைய தியான சங்கீதத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது கூறப்பட்டுள்ளதை நாம் காணலாம். 

முதலாவது தேவ வார்த்தைகள் நமது வாய்க்கு இனிமையாகவும் தொடர்ந்து நமது வாழ்க்கையினை நாம் சரிபடுத்திக்கொள்ள தீபமாகவும் இருக்கின்றன.  எனவேதான் நாம் வேதாகமத்தை வாசிக்கவும் அதிலுள்ள வசனங்களை நமது இருதயத்தில் பதித்து வைக்கவேண்டியதும் அவசியமாய் இருக்கின்றது. அப்படி நாம் இருப்போமானால் அவை நமக்கு எந்தவித துன்ப வேளையிலும் மனம் சோர்ந்துபோகாமல் இருக்க உதவிடும். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15 : 7 ) என்று வாக்குறுதி அளித்துள்ளார். அவரது வார்த்தைகள் நமக்குள் இருக்கவேண்டும்; அவற்றின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். எனவே வேத வசனங்களை வாசித்து ஏற்றுக்கொள்வோம். அவரது வேதம் நமது மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், இன்றைய தியான வசனத்தின்படி நமது துக்கத்திலே நாம் அழிந்து போய்விடுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவோம்

 'ஆதவன்' செப்டம்பர் 12, 2024. வியாழக்கிழமை         வேதாகமத் தியானம் - எண்:- 1,312

"என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்." ( சகரியா 14 : 5 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. தனது பரிசுத்தவான்கள் புடைசூழ அவர் உலகிற்கு வரும்போது நாம் அவருக்கு ஏற்றத் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் அவர் நம்மில் தனக்கு உகந்தவர்களாக வாழ்பவர்களை அவரோடுகூட அப்போது எடுத்துக்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. 

இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது இதுகுறித்து பல்வேறுமுறை உவமைகளாகக் கூறியுள்ளார்.  அவற்றில் பத்துக் கன்னியர்  உவமை (மத்தேயு 25), திருமண ஆடை இல்லாத மனிதனைக் குறித்த உவமை (மத்தேயு 22) நாம் பலமுறை படித்து அறிந்தவையே. 

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து அவர் உயிர்த்து பரலோகம் சென்றவுடனேயே சீடர்களுக்கு அறிவிக்கப்பட்டது. "கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 11 ) என வானதூதர் அவர்களுக்கு அறிவித்தார். 

இயேசு கிறிஸ்துவும் தான் உயிரோடு இருந்த நாட்களில் இதனை வெளிப்படுத்தினார். "அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்." ( மத்தேயு 24 : 29, 30 ) என்றார் அவர். 

ஆனால் அந்த நாள் என்று வரும் என்று நமக்குத் தெரியாது. "கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்." ( 2 பேதுரு 3 : 10 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பேதுரு. மேலும், "இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!" ( 2 பேதுரு 3 : 11 ) என்று அவர் கூறுகின்றார். 

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும் என நமக்குத் தெரியாவிட்டாலும் அவர் வருவதற்குமுன் என்னென்ன நிகழும் என வேதாகமம் கூறும் தீர்க்கதரிசனங்கள் பலவும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. எனவே நாம் அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல பரிசுத்த நடக்கையுள்ளவர்களாய்  நம்மைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். மணவாளனாகிய அவர் வரும்போது அவரோடுகூட பரலோகராஜ்யத்தில் நுழைய முடியாமல் நாம் புறம்தள்ளப்பட்டுவிடக்கூடாது. எனவே எச்சரிக்கையாக ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம்.  ஆம், "தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; " ( 2 பேதுரு 3 : 12 )

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

Sunday, September 01, 2024

ஏற்ற கனிகளைக் கொடுங்கள்

 'ஆதவன்' செப்டம்பர் 11, 2024. 💚புதன்கிழமை            வேதாகமத் தியானம் - எண்:- 1,311

"மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்...." ( லுூக்கா 3 : 8 )

தேவன் விரும்புகின்ற வாழ்க்கை இருக்கின்றதோ இல்லையோ பல கிறிஸ்தவர்களுக்குள்ளும் தங்களது சபைகளைக்குறித்த வீண் பெருமைமட்டும் அதிக அளவு உள்ளது.  கிறிஸ்துவுக்கேற்ற கனியுள்ள வாழ்க்கை இல்லாமல் இத்தகைய வீண் பெருமைகள் எதற்கும் உதவாது என்று இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துகின்றது. 

யூதர்களுக்கு ஒரு மத வைராக்கியம் இருந்தது. தங்களை ஆபிரகாமின் சந்ததி என்று கூறிக்கொள்வதில் அவர்கள் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் தேவன்மேல் ஆபிரகாம் கொண்டிருந்த விசுவாசமோ அவர்களுக்கு இல்லை. அவர்கள் கருத்துப்படி ஆபிரகாம்தான் மேலான தகப்பன்.  எனவேதான் அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம், "எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் " ( யோவான் 8 : 53 ) என்றார்கள்.

இன்றும் இப்படி வீண் பெருமைபேசும் மனிதர்கள் உண்டு. மற்ற சபைப் பிரிவினரைவிட தங்களுக்குள் மேன்மையாக இருக்கும் காரியங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர். ஆனால் இப்படிப் பேசும் பலரிடமும் தேவன் விரும்பும் நற்குணங்கள் இருப்பதில்லை. மூன்றாம்தர உலக மனிதர்களைப்போல குடித்து, லஞ்சம் வாங்கி, கெட்டவார்த்தைகள்பேசி, தகாத உறவுகள்கொண்டு, சபைத் தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளைவிடக் கேவலமாக நடந்துகொண்டு  வாழும் இவர்கள் தங்களது சபையைக்குறித்து மேன்மையாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். 

இதுபோலவே அன்றைய யூதர்கள் ஆபிரகாமைப்பற்றி பெருமைபேசுபவர்களாக இருந்தனர். இத்தகைய மனிதர்களைப்பார்த்துத்தான் இன்றைய வசனம் கூறுகின்றது,  "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்...." என்று. 

அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்கின்றார். 

இன்றைய தியான வசனத்தைக் கூறிய யோவான் ஸ்நானகன் தொடர்ந்து கூறுகின்றார், "இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்." ( லுூக்கா 3 : 9 ) அதாவது மனம்திரும்பி கனிகொடுக்கின்ற வாழ்க்கை இல்லாமல் இருக்குமேயானால் நல்ல கனி கொடாத மரங்களை வெட்டி வீழ்த்துவதுபோல வெட்டி வீழ்த்தப்படுவாய். கோடரியானது அருகே தான் வைக்கப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, நமது சபை மேன்மையோ, நமது சொந்த பதவி, அதிகார பலமோ நம்மை இறுதி நாட்களில் இரட்சிக்காது. கனியுள்ள வாழ்க்கை வாழும்போது மட்டுமே நாம் தேவனுக்கு உகந்தவர்களாக முடியும்.  அது மட்டுமே நம்மை நித்திய ஜீவனுக்கு நேராகக்  கொண்டுச் செல்ல முடியும்.

"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  
 

வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ?

 'ஆதவன்' செப்டம்பர் 10, 2024. செவ்வாய்க்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,310


".............அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை". ( தானியேல் 4 : 35 )

வானத்தின் சேனைகள் என்று இங்குக் குறிப்பிடப்படுவது வான்மண்டல கோள்கள் மற்றும் விண்மீன்களைக் குறிக்கின்றது. வானத்துக் கோள்கள் அங்கு சும்மா இருக்கவில்லை, மாறாக ஒன்றையொன்று தங்களது ஈர்ப்புவிசையால் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி நடத்துபவர்தான் நமது தேவனாகிய கர்த்தர். 

பூமி அந்தரத்தில் குறிப்பிட்ட இலக்குக்குள் தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமானால் அதற்கென்று ஒரு ஆதாரம் வேண்டும். அது கிரகங்களின் ஈர்ப்புவிசையால் (Magnetic Force) தான் நடைபெறுகின்றது. இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த உண்மையினை ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே பரிசுத்தவான்களுக்குத் தேவன் வெளிப்படுத்தியுள்ளார். எனவேதான் எந்தவித நவீன கருவிகள் இல்லாதகாலத்திலேயே இதனை அவர்கள் கண்டுணர்த்து கூறமுடிந்தது.  

"வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ? அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?" ( யோபு 38 : 31 -33 ) என்று தேவன் கேட்கின்றார்.  

அதாவது இப்படி இந்தக் கிரகங்கள், ராசிகள்  பூமியை நிலைநிறுத்த உதவுகின்றன. (பூமியிலுள்ள மக்களையல்ல) இவை செய்யும் எந்த காரியத்தையும் மனிதனால் செய்ய முடியாது. இதனையே மேற்படி வசனத்தில் தேவன், "அறிவாயோ? திட்டம்பண்ணுவாயோ? நீ இணைக்கக்கூடுமோ? கட்டுகளை அவிழ்ப்பாயோ?  வரப்பண்ணுவாயோ? வழிநடத்துவாயோ?" என்று கேட்கின்றார். இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை தேவனால்தான் முடியம்  என்றுதான் இருக்கமுடியும். 
 
இப்படி தேவன்  தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் மக்களையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. இப்படி நாம் வெறும் தூளும் துரும்புமாக இருப்பதால் அவருக்கு அஞ்சி வாழவேண்டியது அவசியம். அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. ஒருவனும் இல்லை என்று கூறும்போது எந்த பரிசுத்தவானும் இல்லை என்றுதான் பொருள். 

எனவேதான் நாம் தேவ கிருபையினைச் சார்ந்துகொள்ளவேண்டியது அவசியம். "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 ) என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, எனவே நாம் அவரது கிருபையைச் சார்ந்தகொண்டு அவரது சித்தத்தின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்