DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, November 06, 2024

குழந்தைகள்

 'ஆதவன்' 💚நவம்பர் 14, 2024. 💚வியாழக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,376


"சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது." ( மாற்கு 10 : 14 )

இன்று நவம்பர் 14 ஆம் நாள் நாம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகின்றோம். குழந்தைகளைப் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும்.  நாம் அவற்றின் அழகையும் கள்ளமற்ற பேச்சுக்களையும் ரசிக்கின்றோம். இதைவிட நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குழந்தைகளை அதிகம் நேசித்தார். சிறு குழந்தைகளை அவர் தொட்டு ஆசீர்வதிக்கவேண்டுமென்று குழந்தைகளை அவரிடம்  கொண்டுவந்தவர்களைச்  சீடர்கள் அதட்டினர். அவர்களைப்பார்த்து இயேசு கூறியதே இன்றைய தியான வசனம். 

இன்றைய தியான வசனத்தில் அவர் தேவனுடைய ராஜ்ஜியம் குழந்தைகளுக்குரியது என்று கூறாமல் அப்படிப்பட்டவர்களுடையது என்று கூறுகின்றார்.   அதாவது, குழந்தையைப்போன்ற மனதை உடையவர்களே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கத் தகுதியானவர்கள் என்கின்றார். காரணம், குழந்தைகளிடம் கள்ளம் கபடம் கிடையாது, அவர்களுக்கு ஏமாற்றத் தெரியாது, பொய் தெரியாது, வஞ்சனை கிடையாது, மேலும் வளர்ந்தவர்கள் செய்யும் பல பாவ குணங்கள் கிடையாது.

பொதுவாக நாம் குழந்தைகளிடம், "நீ வளர்ந்து பெரியவன் ஆகும்போது யாராகவேண்டுமென்று  விரும்புகின்றாய்?" என்று கேட்பதுண்டு. சிலர், நீ இன்னரைப்போல வரவேண்டும் என்று சிலத் தலைவர்களைக் குறிப்பிட்டுக் குழந்தைகளிடம் "அவரைப்போல வரவேண்டும்" எனச் சொல்வதுண்டு. இப்படி மனிதர்கள் நாம் பெரியவர்களை குழந்தைகளுக்கு முன்மாதிரியாகக் காட்டுகின்றோம். ஆனால் ஆண்டவராகிய இயேசு பெரியவர்களுக்கு குழந்தைகள்தான் முன்மாதிரி என்கின்றார். பெரியவர்கள் குழந்தைகளை முன்மாதிரியாகக்கொண்டு வாழவேண்டும் என்கின்றார் அவர்.  

குழந்தைகளின் இன்னொரு குணம் எதனையும் நம்புவது. பெரியவர்கள் நாம் கூறுவதைக் குழந்தைகள் அப்படியே நம்பும். அதுபோல நாம் தேவனுடைய வார்த்தைகளைக்  குறித்து சந்தேகப்படாமல் குழந்தைகள்  நம்புவதுபோல நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும். இதனையே இயேசு கிறிஸ்து, "எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உஙகளுக்குச் சொல்லுகிறேன்." ( மாற்கு 10 : 15 )  என்று கூறுகின்றார். 

இன்று மனிதர்களாகிய நாம் மூளை அறிவால் பலவற்றைச் சிந்திக்கின்றோம். ஆனால் தேவன் மூளை அறிவினால் அறியக்கூடியவரல்ல. அவரை நாம் விசுவாசக் கண்கொண்டு பார்த்து விசுவாசிக்கவேண்டும். "நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்". ( மாற்கு 9 : 23 ) என்று கூறவில்லையா? ஆம் அன்பானவர்களே, சிறு குழந்தையைப்போல வேத வசனங்களையும் வேத சத்தியங்களையும் நாம் விசுவாசத்தால் ஏற்றுக்கொண்டு வாழவேண்டியதே கிறிஸ்தவ வழிகாட்டுதல். 

இன்று நமக்கு அறுபது,  எழுபது அல்லது அதற்கும் மேலான வயதாகியிருக்கலாம். ஆனால் நாம் இந்த வயதை மறந்து கிறிஸ்துவுக்குள் மறுபடி பிறக்கவேண்டியது அவசியம். மறுபடி பிறந்து குழந்தையின் குணங்களைத் தரித்துக்கொள்ளவேண்டியது அவசியம். எனவேதான் இயேசு கிறிஸ்து நிக்கோதேமுவிடம் கூறினார், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 3 : 3 ) 

கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும்போது நாம் மறுபடி பிறக்கின்றோம். குழந்தைகளாகின்றோம். நமது பழைய பாவங்களை அவர் மன்னித்து நம்மைப் புதிதாக்குகின்றார். எனவே நமது பாவங்கள் மீறுதல்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம்; குழந்தைகளாக புதுப்பிறப்பெடுப்போம். அப்போது நாம் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமில்லாதவர்களாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

No comments: