DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, November 17, 2024

சங்கீதம் 71 : 1

 'ஆதவன்' 💚நவம்பர் 25, 2024. 💚திங்கள்கிழமை         வேதாகமத் தியானம் - எண்:- 1,387


"கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்." ( சங்கீதம் 71 : 1 )

நாம் வாழ்வில் சிறுமை அடையும்போது நமது உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் வெட்கமடைந்து போகின்றோம். அவர்களோடு நம்மால் சகஜமாக பழகமுடிவதில்லை.  இதற்குக் காரணம் ஒன்று நமது மனநிலை இன்னொன்று நமது சிறுமையைப்பார்த்து மற்றவர்கள் நம்மை அற்பமாக எண்ணுவதும் நடத்துவதும். சிலர் வெளிப்படையாகவே சிறுமையானவர்களை அற்பமாக நடத்துவதுண்டு. சிலவேளைகளில் நமது பிள்ளைகளின் வாழ்க்கையை; அவர்களது வேலைவாய்ப்பற்ற நிலைமையை அல்லது அவர்களது திருமணத் தோல்விகளைக் குறிப்பிட்டு நம்மை வெட்கப்படும்படியான பேச்சுக்களை நாம் கேட்க நேரிடும்.  

இத்தகைய அற்பமடையும் சூழ்நிலை இன்றைய சங்கீத ஆசிரியருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் கூறுகின்றார், "தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்." ( சங்கீதம் 71 : 11 ) ஆம், இவனது வாழ்க்கை இவ்வளவுதான்; இனி இவன் முன்னேறப்போவதில்லை என்று கூறிக்கொள்கின்றனர். 

ஆனால் இத்தகைய சிறுமையடைந்தவர்களைப் பார்த்துத் தேவன் கூறுகின்றார், "உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்" ( ஏசாயா 61 : 7 ) ஆம் அன்பானவர்களே, தேவனையே நாம் சார்ந்து வாழும்போது நமது வெட்கத்துக்குப் பதிலாக இரண்டு மடங்கு பலனும் மகிழ்ச்சியும் நமக்குத் தேவன் தருவார். இன்று நீங்கள் இப்படி வெட்கப்பட்டு மற்றவர்களைவிட்டுத் தனித்து வாழ்கின்றீர்களா? கவலைபடாதிருங்கள்.

அப்போஸ்தலரான பவுல் அடிகளுக்கு இந்த நம்பிக்கை அதிகமாக இருந்தது. அந்த நம்பிக்கையில் அவர் கூறுகின்றார், "நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்..." ( 2 தீமோத்தேயு 1 : 12 ) ஆம், நாம் விசுவாசித்திருக்கின்றவர் யார் என்பது நமக்குத்தெரியும். அவரும் நம்மைப்போல ஒடுக்கப்பட்டும் வெட்கப்பட்டும் அவமானத்துக்கும் உள்ளானவர்தான். அவருக்கு நமது நிலைமை நன்கு தெரியும். 

"அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; .." ( ஏசாயா 53 : 3 ) புறக்கணிக்கப்படும் நம்மைவிட்டுச் சிலர் தங்கள் முகங்களைத் திருப்பிக்கொள்வதுபோல நமது ஆண்டவராகிய இயேசுவை அவரது அற்பமான நிலையில் கண்டவர்கள் முகங்களைத் திருப்பிக்கொண்டனர்.  

"அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்." ( ஏசாயா 53 : 7 )

ஒடுக்கப்பட்டு வெட்கமடையும்போது நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்போல அமைதியாக நம்பிக்கையுடன் இருப்போம்.  நமது வெட்கப்படுதல் நிரந்தரமல்ல; காரணம், நாம் விசுவாசிக்கிறவர் இன்னார்  என்று அறிவோம்.  அவர் ஒருபோதும் நம்மை வெட்கத்திலேயே அமிழ்ந்துபோக விடமாட்டார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                    

No comments: