"நான் ஆதாமைப்போல என் அக்கிரமத்தை ஒளித்துவைத்தேனோ?"

 ஆதவன் 🖋️ 560 ⛪ ஆகஸ்ட் 10, 2022 புதன்கிழமை

"நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?" ( யோபு 31 : 33 )

ஆதாம் பாவம் செய்ததுமட்டுமல்ல, அதனை வெளிப்படையாக தேவனிடம் அறிக்கையிடத் தவறிவிட்டான். அவன் தனது பாவத்துக்கு ஏவாளைக்  காரணம் காட்டினான். அத்துடன் தேவனையும் ஒரு காரணமாக் கூறினான். "என்னுடன் இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருச்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்." (ஆதியாகமம் 3:12). அதாவது அந்த ஸ்திரீயை நீர் எனக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் அவள் அந்தக் கனியை எனக்குத் தந்திருக்கமாட்டாள்; நான் புசித்திருக்கமாட்டேன் என்று பொருளாகின்றது. 

இங்கு யோபு தனக்கு அதிகப்படியான துன்பம் வந்ததால், நான் ஆதாமைப்போல என் பாவத்தை ஒளித்துவைத்தேனோ? எனக்கு ஏன் இந்தத் துன்பம் என்று கேட்கின்றார். 

இன்று பலரும் இதுபோலத் தங்களது  துன்பத்துக்குக் கரணம் தங்களது பாவங்கள் என்று எண்ணலாம்.  ஆனால் எப்போதும் அப்படியல்ல,  உலகினில் எல்லோருக்குமே துன்பங்கள் வரத்தான் செய்யும். ஆனால், தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நாம் சோதனையை மேற்கொள்ளும் பெலனை தேவன் நமக்குத் தருவார். 

"மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." ( 1 கொரிந்தியர் 10 : 13 )

ஆனால், நாம் யோபு தன்னை ஆராய்ந்து பார்த்துக்  கூறியதுபோல நம்மை ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம்.  நாம் நமது பாவங்களை ஆதாமைபோல மறைத்து வைத்துள்ளோமா என்று எண்ணிப்பார்ப்போம். காரணம், வேதம் கூறுகின்றது, "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." (நீதிமொழிகள் 28:13)

பிறருக்கு எதிராக நாம் செய்த செயல்கள், பேசிய பேச்சுக்கள், நீதியற்ற செயல்கள், ஆபாச பேச்சுக்கள், எண்ணங்கள், என வொவ்வொன்றாக எண்ணி தேவனிடம் அறிக்கையிடுவோம். "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்" என்று சாபம் கூறுவதுபோல கூறும் வசனத்துக்கு நடுங்குவோம். நாம் வாழ்வடைய வேண்டுமானால் பாவ மன்னிப்பும் பாவத்திலிருந்து விடுதலையும் வேண்டும். 

ஆண்டவரே, "நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?" என்று தேவனிடம் நாமும் கேட்போம். நமது பாவங்களை அவரே நமக்கு உணர்த்தித் தருவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்