தேவனைத்தவிர வேறு எதனுக்கும் அவருக்கு இணையான இடத்தைக் கொடாதே

 ஆதவன் 🖋️ 570 ⛪ ஆகஸ்ட் 20, 2022 சனிக்கிழமை

"....................உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்." ( லுூக்கா 4 : 8 )

கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைச்செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம், அவரே நம்மை உண்டாக்கியவர். அவரே நமக்காகத் தனது இரத்தத்தைச் சிந்தி இரட்சிப்பை ஏற்படுத்தியவர். எனவே, "அவர் ஒருவருக்கே" என்பது அவரைத்தவிர வேறு எதனுக்கும் உன் உள்ளத்தில் அவருக்கு இணையான இடத்தைக் கொடாதே என்பதாகும்.

இன்றைய வசனத்தை இயேசு கிறிஸ்து சாத்தானை நோக்கிக் கூறினார். "நீர் என்னைப் பணிந்துகொண்டால் இந்த உலகத்தின் மேலுள்ள அதிகாரம், மாட்சிமை எல்லாவற்றையும் உமக்குத் தருவேன்" என்று பிசாசு இயேசு கிறிஸ்துவிடம் கூறியபோது அதற்கு இயேசு கிறிஸ்து பதிலாக இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறினார். 

சாத்தானை இயேசு இந்த உலகத்தின் அதிபதி என்றும் கூறியுள்ளார். (யோவான் 14:30) இன்று பெரும்பாலான மக்கள் உலக ஆசீர்வாதங்களைத் தேடி ஓடுகின்றனர். அவை கிடைக்கும்போது கர்த்தர் தந்ததாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் எப்போதுமே இது சரியல்ல. சாத்தானும் நம்மை செல்வத்தினால் நிரப்பமுடியும். 

நாம் கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யவேண்டும் என்று கூறுவது வெறுமனே கோவிலுக்குச் சென்று தேவனை ஆராதிப்தையல்ல. மாறாக,  நமது செயல்பாடுகள் கர்த்தரை மகிமைப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்று பொருள். பணம், பதவி, பகட்டு இவைகளுக்காக தேவனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கர்த்தரை புறக்கணித்து சாத்தானை ஆராதிப்பதாகும். 

வெளிப்பார்வைக்கு நாம் கர்த்தரை ஆராதிப்பதுபோலத் தெரியலாம், ஆலயங்களுச்  சென்று ஆராதனைகளில் கலந்துகொள்ளலாம். ஆனாலும் நமது செயல்பாடுகளும் நமது இருதயமும் தேவனுக்கு நேராக இல்லையானால், நாம் சாத்தானை வழிபடுபவர்கள் தான்.   

இன்று அரசியலிலும் தொழில்களிலும் பல கிறிஸ்தவர்கள் முன்னிலையில் உள்ளனர். ஆனால் எல்லோரும் தேவனை மட்டுமே ஆராதிப்பவராங்களோ, அவருக்கு மட்டுமே மகிமைச் செலுத்துபவர்களோ அல்ல. 

ஆனால் செல்வமுள்ள பலர் கர்த்தரை உண்மையாய் ஆராதித்துள்ளனர். அவர்களது செல்வம் அவர்களது ஆராதனைப் பொருளாக  இல்லாமல் கர்த்தரே அவர்களது ஆராதனைக்குரியவராக  இருந்தார்.  ஆபிரகாம், செல்வந்தனான யோபு, அரசனான தாவீது, எசேக்கியா போன்றார்கள் தங்கள் செல்வத்தையும் பதவியையும் ஆராதிக்காமல் தேவனையே ஆராதித்தவர்கள். அதாவது, பதவி, செல்வம் இருந்தாலும் முதல் முன்னுரிமையை தேவனுக்கே கொடுத்து வாழ்ந்தனர். 

செல்வத்தைத் தேடி, புகழ் பெருமையைத் தேடி நாள் முழுவதும்  ஓடி  பெயருக்கு ஆலையம் சென்று ஆராதிப்பது அவர் ஒருவருக்கே ஆராதனை செலுத்துவதல்ல. மாறாக, செல்வம் புகழ் இருக்கிறதோ இல்லையோ, "அவர் என்னைக்



கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன்" என்று யோபு கூறியதுபோல விசுவாசத்துடன் அவருக்கு உத்தமமான ஒரு வாழ்க்கை வாழ்வது.  

இத்தகைய ஒரு வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நமது வாழ்வில் எல்லாவற்றிலும் முன்னுரிமையைக் கர்த்தருக்கு கொடுப்போம். இதுவே அவரை மகிமைப்படுத்துவது. நம் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்து வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்