தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்

 ஆதவன் 🖋️ 561 ⛪ ஆகஸ்ட் 11, 2022 வியாழக்கிழமை

"யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன்" ( ஓசியா 1 : 7 )

இன்றைய வசனத்தில் வில், பட்டயம், யுத்தம், குதிரை, குதிரை வீரர்கள் என்று பலத்தைக் குறிக்கும் பலவித வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தக்கால போர் ஆயுதங்கள் இவை.   இவை குறிப்பாக மனிதர்களது பலத்தைக் குறிக்கின்றன. 

இன்று நம்மிடம் ஒருவேளை மிகுதியான செல்வம் இருக்கலாம், நல்ல உடல்நலம்,  நல்ல பதவி, நாம் கட்டளையிட்டவைகளை உடனடியாக நிறைவேற்ற அதிகப்படியான வேலையாட்கள் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் தேவனுக்குமுன் ஒன்றுமில்லாதவையே. இவை நமக்குப் பாதுகாப்பு என்று எண்ணிக்கொண்டு இறுமாப்போடு வாழ்வோமானால் ஒன்றுமில்லாத இல்பொருள் ஆகிவிடுவோம். 

இதனால்தான் சங்கீத ஆசிரியர், "இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது." ( சங்கீதம் 33 : 17 ) என்று கூறுகின்றார். பணத்தையும் பதவியையும் நம்பி, நமது வாழ்வு இந்த உலகினில் நிரந்தரம் என எண்ணி வாழ்ந்த அரசியல் தலைவர்களின் முடிவினை நாம் பார்த்துள்ளோம். 

கர்த்தர் ஒருவரைப் பாதுகாத்திடவும், உயர்த்திடவும் உலக மனிதர்கள் தேவை எனக் கருதும் இவை எதுவுமே தேவையில்லை. அவர் நினைத்தால் ஒருவனைப் புழுதியிலிருந்து கோபுர உச்சிக்கு கொண்டுசெல்லமுடியும். ஆம், கர்த்தர் கூறுகின்றார், வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன்.

ஆம், அதனால்தான் "என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது." ( சங்கீதம் 62 : 7 ) என்கின்றார் தாவீது. 

அன்பானவர்களே, நல்ல வேலை இல்லையே, நல்ல வீடு வாசல், பொருளாதார வசதி, உடல் பெலன் இல்லையே என்று எண்ணிக் கவலை வேண்டாம். எந்த நிலையிலும் தேவன் ஒருவரை உயர்த்த முடியும். அவர், வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் இரட்சிக்கிறவர் அல்ல. கர்த்தராகிய தேவனே நம்மை இரட்சிக்கிறவர். 

பார்வோனது பலத்த சேனைகளும் போருக்குப் பழக்கப்பட்டக் குதிரைகளும் தேவ மனிதனாகிய மோசேயின்முன் நிற்கமுடியவில்லை. காரணம், தேவன் அவரோடிருந்தார்.

பெருமை பாராட்டுபவர்கள் பெருமை பாராட்டிக்கொண்டிருக்கட்டும். நாம் கர்த்தரை அறிந்துள்ளோம் என்பதே நமக்கு மேன்மை. அவர் நம்மை ஏற்றகாலத்தில் உயர்த்துவார்.  

"சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்." ( சங்கீதம் 20 : 7 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்