நமது தாழ்ந்த நிலையே நாம் உயர்த்தப்படுவதற்கான முதல் நிலை.

 ஆதவன் 🖋️ 576 ⛪ ஆகஸ்ட் 26, 2022 வெள்ளிக்கிழமை

"அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்." ( சங்கீதம் 113 : 7 )

பொதுவாக இந்த உலகத்தில் அரசாங்கமோ அல்லது பெரிய பெரிய தொழில் நிறுவனங்களோ தங்களுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது மிகத் திறமையானவர்களையே தேர்வுசெய்வார்கள். ஆனால் நமது தேவன் திறமையில்லாதவர்களையும், எதுவும் இல்லாதவர்களையும், அற்பமும் குப்பையுமானவர்களையும் தேர்ந்தெடுத்து தனக்கு ஏற்றவர்களாக மாற்றி பயன்படுத்துகின்றனர்.  

"உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 28 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள். இப்படி அற்பமானவராக இருந்து உயர்த்தப்பட்டவர்தான் தாவீது. "தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்." ( சங்கீதம் 78 : 70 )

"கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்." ( சங்கீதம் 78 : 71 )

அன்பானவர்களே, இன்று இதனை வாசிக்கும் பலர் தங்களை இந்த உலகம் அற்பமாக எண்ணுவதாக எண்ணிக் கலங்கலாம். ஆனால், இன்றைய தியானத்துக்குரிய வசனம்  நாம் அப்படி எண்ணிக் கலங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றது. 

மீன்பிடித்துக்கொண்டிருந்த பேதுரு, யோவான், யாக்கோபு இவர்களைத்தான் இயேசு கிறிஸ்து தெரிந்துகொண்டு  வல்லமையாகப் பயன்படுத்தினாரேத்  தவிர, அந்தக்காலத்தில் இருந்த செல்வந்தர்களையோ, படிப்பறிந்த அறிஞர்களையோ அல்ல. 

இப்படி தேவன் பயன்படுத்துவதற்குக் காரணங்கள்  உண்டு. ஒன்று, இல்லாமையில், நொறுக்குதலில் வாழ்ந்து பழகியவர்களுக்கு இயல்பிலேயே தாழ்மைக்குணம் இருக்கும். தேவன் தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபை அளிக்கின்றார்.  மேலும்,  "பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்." ( லுூக்கா 1 : 52 ) என்று வாசிக்கின்றோம். தாழ்மைக்குணமே  தேவன் விரும்புவது.

இரண்டாவது காரணம், திறமையானவர்கள் திறமையாய்ச் செயல்படுவது இயற்கை. ஆனால் ஒன்றுக்கும் உதவாத திறமையற்றவர்கள் சிறப்பாகச்  செயல்படுவதில்தான் தேவனது வல்லமை வெளிப்படுகின்றது. 

அன்பானவர்களே, நாம் நம்மில் பெருமை வந்துவிடாமல் காத்துக்கொள்வோம்.  பெருமை என்பது பிசாசின் குணம். அந்தக் குணமுள்ளவர்களை தேவன் பயன்படுத்தவோ உயர்த்தவோ முடியாது. எனவே, தாழ்மை குணத்தை மட்டும் நம்மைவிட்டு விலகிடாமல் காத்துகொண்டு வாழ்வோம். கர்த்தர் நம்மை நிச்சயமாக பயன்படுத்துவார்; ஆட்டுத் தொழுவதிலிருந்த தாவீதை அரியணையிலேற்றி அழகுபார்த்ததுபோல நம்மையும் உயர்த்தி அழகுபடுத்துவார்.  தற்போதைய நமது தாழ்ந்த நிலையே நாம் உயர்த்தப்படுவதற்கான முதல் நிலை. 

ஆம், நமது தேவன் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும் தேவன் கூறிய வார்த்தைகள் பொய்க்காது. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்