கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு பந்தயம்

 ஆதவன் 🖋️ 562 ⛪ ஆகஸ்ட் 12, 2022 வெள்ளிக்கிழமை

"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்." ( பிலிப்பியர் 3 : 14, 15 )

கிறிஸ்தவ வாழ்க்கையைப் பவுல் அப்போஸ்தலர் பந்தயத்துக்கு ஒப்பிட்டு பேசுவதை நாம் பல இடங்களில் பார்க்கலாம். உதாரணமாக, ஓட்டப்பந்தயம் ( 1 கொரிந்தியர் 9 : 24 ) மல்யுத்தம் ( 2 தீமோத்தேயு 2 : 5 ) என்று குறிப்பிடுகின்றார். 

எந்தவிதப் பந்தயமாக இருந்தாலும் அதற்குப் பரிசுப்பொருள் இருக்கும். அதுபோல கிறிஸ்தவ வாழ்க்கைக்குப் பரிசுப்பொருள் நித்திய ஜீவன்.  அதனையே இங்கு பரம அழைத்தலின் பந்தயப்பொருள் என்று பவுல் குறிப்பிடுகின்றார். அதுவே கிறிஸ்தவர்களின் இலக்கு. அந்த இலக்கை அடைந்திட அதனை நோக்கி நமது பந்தயத்தைத் தொடரவேண்டும்.

ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரன் ஒருவன் ஓடும்போது தனக்கு அருகே ஓடிக்கொண்டிருக்கும் மற்றவீரனையோ அல்லது ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தையோ பார்த்துக்கொண்டு ஓடினால் அவன் வெற்றிபெற முடியாது. ஓடுபவனது கண்கள் எப்போதும் இறுதி இலக்கை நோக்கியே இருக்கவேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 

"பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 9 : 24 ) என்கின்றார். ஆனால், கிறிஸ்தவ ஓட்டப்பந்தயத்தில் பரிசு ஒருவருக்குமட்டும் உரியதல்ல. சரியானபடி ஓடுபவர்கள் எல்லோரும் பரிசினைப் பெறுவார்கள். 

இன்றைய வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் தொடர்ந்து கூறுகின்றார், "நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்."  அதாவது நாம் தேறின கிறிஸ்தவர்கள் என்றால் இந்த சிந்தனை கொண்டவர்களாக  இருப்போம். தேறாத கிறிஸ்தவர்கள் என்றால், உலகத் தேவைகளுக்காக மட்டுமே ஜெபித்து வெறும் மதவாதியாகவே இருப்போம்.

மதவாதி நிலையிலிருந்து நாம் ஆன்மீகவாதியாக மாறும்போது மட்டுமே   நாம் கிறிஸ்துவுக்கு ஏற்றவர்களாகவும் அவர் கூறிய நித்திய ஜீவனை அடைந்திடவேண்டும் எனும் ஆர்வமுள்ளவர்களாகவும் நாம் மாறமுடியும். நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பது நமது மனச்சாட்சிக்குத் தெரியும்.

அன்பனவர்களே, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடரும் மக்களாக நம்மை மாற்றிடுவோம். கிறிஸ்து நம்மை மெய்யான ஆசீர்வாதத்தினால் நிரப்புவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்