மக்களால் பாராட்டப்பட்டாலும் நமது ஆத்துமாவை இழந்தோமானால் பலனில்லை.

 ஆதவன் 🖋️ 577 ⛪ ஆகஸ்ட் 27, 2022 சனிக்கிழமை















"கர்த்தராகிய இயேசுவின் உயிர்தெழுதலைகுறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்கள் எல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது". (அப்போஸ்தலர் 4:33)

நாம் கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்கவேண்டுமானால், கர்த்தரது பூரண கிருபையால் நாம் நிரம்பியிருக்கவேண்டியது அவசியம். கிருபையோடு நாம் கிறிஸ்துவை அறிவிக்கும்போதுதான் அது மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

பூரண கிருபை என்பது அற்புதங்கள் செய்யக்கூடிய சக்தி என்று பலரும் எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அது முற்றிலும் சரியல்ல. பூரணகிருபை என்பது நாம் பரிசுத்தமாக வாழ உதவும் தேவனது அன்பு உதவி. மட்டுமல்ல, பூரண கிருபை மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டும். அது, நமது பேச்சு, செயல்களில் தேவன் நம்மை வித்தியாசப்படுத்தியிருப்பதை  மற்றவர்கள் உணரச்செய்யும்.   

இப்படிப் பூரண கிருபையோடு அந்தியோகியாவில் பிரசாங்கம் செய்த சீடர்களை அங்கிருந்த மக்கள்  வித்தியாசமாகக் கண்டதால் அவர்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர். அதாவது கிறிஸ்தவர்கள்  பெயர் கிறிஸ்துவின் உபதேசத்தின்படி வாழ்ந்த மக்களுக்கு மற்றவர்கள் அளித்தப் பெயர். "அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று". ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 11 : 26 )

இது எப்படிச் சாத்தியமாயிற்று என்றால் தேவனது பூரண கிருபை அவர்கள்மேல் இருந்ததால்தான். 

இன்று நாம் வொவொருவரும் வேதாகமத்தைத் தூக்கிக்கொண்டு கிறிஸ்துவை அலைந்துதான் கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. நாம் இருக்கும் இடத்தில, வாழும் ஊரில், சமுதாயத்தில் கிறிஸ்துவைப் பிரதிபலிப்பவர்களாக வாழ்ந்தாலே போதும். 

அனால் பல கிறிஸ்தவ சபைகளில் சில ஊழியர்கள் சமூக பணியாற்றுவதே கிறிஸ்துவின் பணி எனத் தவறான போதனைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். முதலில் நாம் பரிசுத்தமுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். சமூக பணியை ஊழல் அரசியல்வாதியும் செய்யலாம், ஊழல் தொண்டு நிறுவனங்களும் செய்யலாம். 

சமுதாயப் பணி  செய்து ஆயிரக்கணக்கான மக்களால் பாராட்டப்பட்டாலும் நமது சொந்த ஆத்துமாவை இழந்தோமானால் அதனால் பலனில்லை.  ஆம், ஒருவன் உலகமனைத்தையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தனது சொந்த ஆத்துமாவை இழந்தால் அதனால் பயனென்ன? என்று இயேசு கிறிஸ்து கேட்கவில்லையா? 

"மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 )

ஆம் அன்பானவர்களே, அப்போஸ்தலர்கள்போல மிகுந்த பலமான சாட்சிகளாக நாம் வாழ தேவனதுகிருபையினை வேண்டுவோம். தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடும்போம். அப்போது கர்த்தர் நம்மை நிறைவாய் ஆசீர்வதிப்பார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்