DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Friday, August 19, 2022

தேவனுக்கு ஏற்பில்லாத காரியங்களைச் செய்யும்போது நாம் ஆலயத்தைக் கள்ளர்குகை ஆக்குகின்றோம்.

 ஆதவன் 🖋️ 571 ⛪ ஆகஸ்ட் 21, 2022 ஞாயிற்றுக்கிழமை

"என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்". ( மத்தேயு 21 : 13 )

ஏசாயா மற்றும் எரேமியா தீர்க்கதரிசிகளின்கூற்றுக்களை இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் மேற்கோள் காட்டிப்  பேசுகின்றார். என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்பது ஏசாயா கூறியது.  ( ஏசாயா 56 : 7 ) 

ஆனால், இந்த ஆலயத்தில் தேவனுக்கேற்ற பரிசுத்த வாழ்க்கை வாழாதவர்களும் வெறும் பகட்டுக்காகவும், மற்றவர்கள்முன் தங்களை நீதிமான்கள் என்று காட்டுவதற்காகவும் வந்து தங்களது பொல்லாப்புகளுக்கு மனம் வருந்தாமல்  வழிபாடுசெய்கின்றனர். இதனையே எரேமியா கூறினார்:- 

"நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று...........................என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையாயிற்றோ? " ( எரேமியா 7 : 9 - 11 )

திருடர்கள் தாங்கள் கொள்ளையடித்தப் பொருட்களை குகைகளில் பதுக்கி வைப்பதுபோல தங்களது பொல்லாப்புக்களை மக்களது பார்வையில் படாமல் மறைத்துவைக்க கோவிலை ஒரு பதுங்கு பாசறையாகக் கொண்டுள்ளனர் பலர்.

நீதியற்ற செயல்கள், ஏமாற்று, பித்தலாட்டம், போன்ற செயல்களைச் செய்துவிட்டு ஆலயங்களில் முன்னுரிமைபெறுவதும் பெறுவதற்குத் துடிப்பதும் கோவிலைக் கள்ளர்குகை ஆக்குவதுதான். 

இந்த வசனம் நமது உடலான ஆலயத்துக்கும் பொருந்தும். புதிய ஏற்பாட்டில் நாமே ஆலயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நமது உடலே பரிசுத்த ஆவியின் ஆலயமாய் இருக்கின்றது. (1 கொரிந்தியர் 3:16 மற்றும் 6:19) இந்த உடலான ஆலயத்தை பரிசுத்தமாய்க் காத்திடவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

நமது உடலால் நாம் தேவனுக்கு ஏற்பில்லாத அவலட்சணமான காரியங்களைச்  செய்யும்போது நாம் ஆலயத்தைக் கள்ளர்குகை ஆக்குகின்றோம். விபச்சாரம், வேசித்தனம், தேவனுக்கு ஏற்பில்லாத சிற்றின்ப காரியங்களில் மூழ்கிவிடும்போது நாம் நமது உடலான ஆலயத்தைக் கள்ளர் குகை ஆக்குகின்றோம்.  

பரிசுத்த ஆவியானவர் வந்து தங்கவேண்டிய ஆலயத்தில் பிசாசின் செயல்பாடுகள் நிறையும்போது, பொய்யனும் பொய்க்குப்  பிதாவுமாகிய பிசாசின் பொக்கிஷங்களால் நமது உடலான ஆலயத்தை நிரப்புகின்றோம்.

இன்றைய வசனம் இதனைத்தான் கூறுகின்றது. எரேமியா கூறுவதுபோல, திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, நான் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று கூறிட முடியாது.

அன்பானவர்களே, ஆலயத்துக்குப் போகும்போது நமது நிலைமையை எண்ணிப்பார்ப்போம். நமது பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுவோம். முதலில் நமது உடலான ஆலயத்தை தேவனுக்கு ஏற்புடையதாக மாற்றுவோம். வெளிவேடமான ஆலய ஆராதனை தேவனுக்கு ஏற்புடையதல்ல. நமது உடலும் நாம் செல்லும் ஆலயமும் கள்ளர் குகை அல்ல எனும் உண்மை எப்போதும் நமக்குள் இருந்தால் மட்டுமே நாம் பரிசுத்தமுள்ளவர்களாக வாழ முடியும்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

No comments: